வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் சனிக்கிழமை 27ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இன்னும் ஆறு தினங்களே எஞ்சியுள்ளன. நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருக்கின்றன. கடந்த 18 வருடங்களாக இடம்பெற்று வந்த இந்த வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
செப்டெம்பர் 20ஆம் திகதி தமிழக அரசியல் வரலாற்றில் மட்டுமன்றி இந்திய அரசியல் வரலாற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினமாக மாறப்போகிறது மட்டுமன்றி உலகத் தமிழர்களும் இதனை எதிர்பார்த்திருக்கின்றனர்.
தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்பதை எவராலும் உறுதிபடக்கூற முடியா விட்டாலும் ஏதோ ஒன்று நடக்கப்போகிறது என்பது மட்டும் உண்மை! அது எவ்வாறானதாக இருக்கப்போகிறது என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஜெயலலிதாவுக்கு சாதகமற்ற தீர்ப்பு வழங்கப்படுமானால் அதனால் தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும்
இந்த வழக்கு பிரபல அரசியல்வாதி சுப்பிரமணிய சுவாமியினால் 21.06.1996இல் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 01.07.1991 முதல் 30.04.1996 வரை தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது தமது வருமானத்துக்கு மேலதிகமாக சொத்துக்களை சேர்த்துள்ளதாக சுப்பிரமணிய சுவாமி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி அப்போது தமிழக இலஞ்ச ஒழிப்புத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த லத்திகா சரணிடம் இது தொடர்பாக விசாரணை செய்ய பணிப்புரை விடுத்தார்.
அதற்கமைய லத்திகா சரண் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் ஜெயலிலதா கைது செய்யப்பட்டதுடன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்றது.
பின்னர் 2001இல் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். இதனையடுத்து இந்த வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமெனக் கூறி தி.மு.க. பொதுச்செயலாளர் க. அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதற்கமைய வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.
2004 முதல் பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த சொத்துக்குவிப்பு வழக்கை ஏழு நீதிபதிகள் விசாரணை செய்து வந்த நிலையில் எட்டாவது நீதிபதியாக ஜோன்மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னரே வழக்கு விரைவாக விசாரணை செய்யப்பட்டு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையிலேயே வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 20ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இந்த வழக்கில் என்னவிதமான தீர்ப்பு வழங்கப்படும்? ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைக்குமா? அல்லது வழக்கிலிருந்து விடுதலை பெறுவாரா? என்ற கேள்வி அ.தி.மு.க. தலைவர்களிடமும் தொண்டர்களிடமும் எழுந்துள்ளது.
தண்டனை அதிகமானதாக இருந்தால் எதிர்காலத்தில் அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் பேசப்படுவதால் தமிழகம் முழுவதும் இருக்கும் கட்சித்தொண்டர்களிடம் பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்படுமானால் அக்கட்சியின் சிரேஷ்ட அமைச்சரான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அ.தி.மு.கவைப் பொறுத்தவரையில் அந்தக் கட்சியில் அனைத்துமே ஜெயலலிதாதான். அவர் பொதுச்செயலாளர் என்ற வகையில் அனைத்துப் பொறுப்புக்களும் தீர்மானம் எடுக்கும் உரிமையும் அவருக்கே வழங்கப்பட்டுள்ளது. அவரை மீறி கட்சியிலுள்ள எவராலும் எந்தத்தீர்மானமும் எடுக்க முடியாது தன்னை ஒரு தனிப்பெரும் சக்தியாக ஜெயலலிதா வெளிப்படுத்தி வருகிறார்.
எனவே அ.தி.மு.க.வில் ஜெயலலிதாவை அடுத்து தீர்மானம் எடுக்கக்கூடிய இரண்டாம் மட்டத்தலைவர்கள் எவரும் இல்லை. ஜெயலலிதாவைத் தொடர்ந்து தலைமைப் பதவியை ஏற்கக்கூடிய ஒருவரை ஜெயலலிதா அறிமுகப்படுத்தவில்லை வளர்த்து விடவும் இல்லை.
தனக்கு நிகராக அல்லது தன்னைப்போன்ற ஒருவர் அ.தி.மு.க. தலைமையை ஏற்பதை விரும்பாத ஒருவராகவே ஜெயலலிதா காணப்படுகிறார். இதைத்தான் அந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம். ஜி. ராமச்சந்திரன் செய்தார்.
இரண்டாவது தலைமையை வளர்க்காத காரணத்தினால் எம்.ஜி.ஆர். சுகவீனமுற்றிருந்த போதும் அவர் உயிரிழந்த பின்னரும் கட்சியில் பாரிய குழப்பங்கள் ஏற்பட்டன. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி, ஆர்.எம். வீரப்பன், திருநாவுக்கரசு போன்றோர் இந்தப்பிரச்சினையின் முக்கியமானவர்களாகக் காணப்பட்டனர்.
நீண்டதொரு போராட்டத்தின் பின்னரே அ.தி.மு.க.வின் தலைமைப்பதவிக்கு ஜெயலலிதாவால் வர முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும் அவர் சுயமாக தீர்மானம் எடுக்க முடியாதவராகவே காணப்படுகிறார். ஏற்கனவே ஒருமுறை ஜெயலலிதா முதல்வர் பதவியை தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது ஓ. பன்னீர்செல்வமே முதல்வராக பதவியேற்று செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்படுமானால் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அவருக்கு முதல்வர் பதவியை வழங்க பலர் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
முன்பு ஜெயலலிதாவுக்குப் பின்னர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் கணவர் நடராஜன் கட்சியின் தலைமையை பெறுவதற்கு திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. எனினும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாம் எத்தனையோ பந்தயங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக புதுவிதமாக பந்தயத்தில் பல்வேறு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது ஜெயலலிதாவுக்கு வழக்கில் தண்டனை கிடைக்குமா? கிடைக்காதா? என்பதுதான்.
‘தண்டனை கிடைக்குமா, கிடைக்காதா? ‘விடுதலை ஆவாரா? அல்லது தண்டனை கிடைக்குமா?” என்றெல்லாம் பந்தயம் கட்டுகின்றனராம். இதில் ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் கூட ஈடுபட்டுள்ளனராம்.
பணம், தங்க நகைகள், கார், வீடு நிலம் என பல பொருட்களை பந்தயமாக வைத்து வருகின்றனராம். எதற்கெல்லாம் பந்தயம் பிடிப்பது என்ற அந்தஸ்து இல்லாமல் போயுள்ளதையே இது காட்டுகிறது.
27ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம் என்னதான் நடக்கப்போகிறதென்று ?
தமிழகத்தில் உள்ளாட்சி மன்றங்களுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்பு மனுத்தாக்கல் அனைத்தும் முடிவடைந்து விட்டது. இறுதி நேரத்தில் தமது கட்சியைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் ஆளும் கட்சியினால் மிரட்டப்பட்டு வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளதாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேட்பு மனுவை வாபஸ் பெறாத சிலரின் போலி கையொப்பமிடப்பட்ட கடிதத்தை சமர்ப்பித்து அதன் மூலம் வேட்புமனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இடைத்தேர்தலில் ஆளும் அ.தி.மு.க. மட்டுமே சகல இடங்களுக்கும் வேட்பு மனுக்களை சமர்ப்பித்திருந்தது. தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க. உள்ளிட்ட எந்தவொரு கட்சியும் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டன.
இந்த நிலையிலேயே தமிழக பா.ஜ.க. துணிந்து களத்தில் இறங்கியது. பா.ஜ.கவுக்கு தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆதரவு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளன. இதனால் ஆளும் அ.தி.மு.க. அதிர்ச்சியடைந்துள்ளது.
அ.தி.மு.கவுக்கு சவாலாக போட்டியிடும் பா.ஜ.கவின் வெற்றியைத் தடுத்து நிறுத்துவதே அ.தி.மு.கவின் பிரதான நோக்கம் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார். இதனால் உள்ளாட்சி இடைத்தேர்தல் நியாயமான முறையில் இடம்பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இந்த இடைத்தேர்தலை நீதியான முறையில் நடத்துவதற்கு நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இடைத்தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடைபெறாதென்பதால் அதனை ஒத்திவைக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கப்போவதாகவும் தமிழிசை செளந்திரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.கவின் தொடர் தேர்தல் வெற்றி அந்தக்கட்சிக்கு ஒரு மமதையை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தோல்வி ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அதன் காரணமாக எப்படியாவது தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டுமென்ற நிலையில் அதற்கான சகல வழிமுறைகளையும் கையாள்கிறது. அதில் ஒரு வழிதான் வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைக்கும் முறையென பா.ஜ.க. தலைவர் ஒருவர் தெரிவிக்கிறார். இந்த நடவடிக்கை சில வேளை அ.தி.மு.கவின் வெற்றியை பாதிக்கவும் கூடும் என்பதே பொதுவான கருத்தாகும்.
– நல்லதம்பி நெடுஞ்செழியன் –