சென்னை: டிடிவி தினகரன் சகோதரர் டிடிவி பாஸ்கரனின் பங்களாவில் இருந்து 7 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவின் குடும்பத்தினர் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சோதனையில் தினகரனின் சகோதரர்கள், உறவினர்கள், இளவரசியின் மகள் கிருஷ்னபிரியா, ஜெயா டி.வி இயக்குநர் விவேக் ஆகியோரது இல்லங்களும் அடங்கும்.
சென்னை நீலாங்கரையில் உள்ள டிடிவி தினகரனின் அண்ணன் பாஸ்கரன் பங்களாவில் இருந்து முக்கிய ஆவணங்கள் எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் கணக்கில் வராத 7 கிலோ தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பாஸ்கரன் முன்பு ஜெ.ஜெ டிவியின் நிர்வாகியாக இருந்தார். ஜெயலலிதா விரட்டி விட்ட பின்பு எந்த தொழிலுமே செய்யவில்லை.
அதோடு சினிமாவில் நடிக்கிறேன் என்று பணத்தை செலவு செய்து வருகிறார். எந்த தொழிலுமே செய்யாமல் இத்தனை கிலோ தங்கம், வைரங்கள், பணம் வந்தது எப்படி என்று மலைத்து வருகின்றனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.
இன்னும் தோண்ட தோண்ட என்ன கிடைக்குமோ என்று அதிகாரிகள் பேசிக்கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் சுந்தரக்கோட்டையிலுள்ள திவாகரனின் வீடு, அவரது செங்கமலத்தாயார் கல்லூரி உள்ளிட்ட 20க்கும் அதிகமான இடங்களில் நேற்று கல்லூரியில் நடைபெற்ற சோதனையின்போது ஆவணங்களுடன் விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்ச்கள், தங்க நகைகள், வைரங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.