வடக்கு மாகாண சபை அமர்வில் பா.டெனீஸ்வரன் அமைச்சு பதவியை தொடர இடமளிக்க வேண்டும் என பல வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றது.
வடக்கு மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று (செவ்வாய்க்கிழமை) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது.
இதன் போது மேன்முறையீட்டு நீதிமன்றம் மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சராக பா.டெனீஸ்வரனே தொடர்ந்தும் இருப்பார் என மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் கூறினார்.
அது மறுக்கப்பட்டால் அவரின் சிறப்புரிமை மீறல் பிரச்சினை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டிய அவர், அதற்கு எவரும் தடைவிதிக்க கூடாது எனவும் கூறினார்.
மேலும் மக்களுடைய நம்பிக்கை பொறுப்பாளிகளான நாம் ஆளுநரை சுயாதீனமாக செயற்படுவதற்காக இடமளிக்கப் போகிறோமா?
ஆகவே இந்த விடயத்திற்கு பரிகாரம் காணாமல் நாம் இந்த சபையில் இருப்பதில் பயன் எதுவும் இருக்காது. அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்து இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டு அவருக்கு ஆசனம் வழங்கப்படவேண்டும்.
இல்லையேல் அது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாராமுகமாக இருப்பதாக அர்த்தப்படும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்,
அமைச்சர் பா.டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் வர்த்தமானி பிரசுரம் வெளியிடாமையினால் டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
முதலமைச்சராக நான் எனது கடமையை சரியாக செய்துள்ளேன். ஆனால் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவது எனது கடமையல்ல.
அதேசமயம் 5 அமைச்சர்களுக்கு மேல் பதவி வகிப்பது அரசியலமைப்புக்கு முரணான ஒன்றாகும். அவ்வாறு இருந்தால் அமைச்சர் சபையின் தீர்மானங்கள் சட்ட வலு அற்றவையாக மாறுவதுடன், பாரிய விளைவுகளையும் அது உண்டாக்கும் என கூறினார்.