தடுப்பு முகாமில் இருந்தபோது தமக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டதாகவும் குறித்த காலத்துக்குள் மரணம் சம்பவிக்கக்கூடிய மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் இரசாயனக் கலப்புக்கொண்ட உணவு வகைகளை தமக்குத் தந்ததாகவும் தடுப்பு முகாமிலிருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வு நடைபெற்றபோதே முன்னாள் போராளியொருவர் மேற்கண்டவாறு அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
100 கிலோ எடையுள்ள பொருளைக்கூட லாவகமாக தூக்கிச் செல்லும் பலமுள்ளவனாக நான் முன்பு இருந்தேன்.
புனர்வாழ்வு பெற்றபின் என்னால் இயங்கக் கூட முடியவில்லையென அப்போராளி முறையிட்டமை சகலரின் கவனத்தை ஈர்த்தது மாத்திரமல்ல. சகல தரப்பினருக்கும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது. இலங்கை அரசாங்கத்துக்கு மீண்டுமொரு பேரிடியையும் தந்திருக்கிறது.
முள்ளிவாய்க்கால் யுத்த முடிவின் பின் சரணடைந்த முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டவர்கள் ஆகியோரைக் கொண்டு சென்று இலங்கை இராணுவம் அவர்களுக்கு தடுப்பு முகாம்களில் வைத்து புனர்வாழ்வு அளிப்பதாகக் கூறி நீண்டகாலம் அவர்களை முகாம்களில் தடுத்து வைத்துவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் என்ற பெயருடன் விடுதலை செய்திருந் தனர்.
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இணைந்து நடாத்திய இந்த புனர்வாழ்வுத் திட்டத்தின் கீழ் போராளிகளின் விருப்பத்தின் பிரகாரம் 11022, முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 10940, பேர் சமூகத்து டன் இணைக்கப்பட்டார்கள் என அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் மூன்று வருடங்களுக்கு மேற்படாத வண்ணம் புனர்வாழ்வு முறைகள் நெறிப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு பயிற்சிகளும் அளிக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட வேளைகளில் தான் முன்னாள் போராளிகளுக்கு இரசாயன உணவு, மற்றும் ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இவர்கள் புனர்வாழ்வு முகாமிலிருந்து வெளியே வந்த பின்பே முகாமில் என்ன நடைபெற்றுள்ளது என்பது பற்றிய உண்மைகள் வெளிவருகின்றன.
இவை பற்றிய முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டுமென்று பல அரசியல் பிரமுகர்களும் சமூக அமைப்புக்களும் குரல் கொடுத்து வருகின்றார்கள்.
இவ்விவகாரமானது தற்பொழுது அனல் கக்கும் பிரச்சினையாக மாறிவருவதுடன் இலங்கையரசாங்கத்துக்கு சங்கடத்தை உண்டு பண்ணும் தகவலாகவும் மாறியிருக்கிறது.
போராளி ஒருவரால் தெரிவிக்கப்பட்டிருக்கும். இக்குற்றச்சாட்டுக்களை அரசாங்கம் வன்மையாக மறுப்பதுடன் இராணுவ ஊடகப் பேச்சாளரான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜெயவீர இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் வகையில் அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளார்.
நாங்கள் பௌத்த தர்மத்தை பின்பற்றுபவர்கள் மிருகங்களுக்கு கூட நஞ்சை ஊட்ட மாட்டோம் என காருண்ய வாதம் பேசியுள்ளார்.
புனர்வாழ்வு முகாமிலிருந்து விடுதலை பெற்று வந்த முன்னாள் போராளிகளில் சிலர் திடீர் திடீர் என மர்மமயமான நோய்களுக்கு ஆளாகி மரணம் அடைந்து வருகின்றார்கள்.
இதுவரை நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே வகையான நோய்க்கு ஆளாகி மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவலும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலுக்கு ஆரம்ப புள்ளியிட்ட மரணமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாதர் அணித்தலைவியாக இருந்த தமிழினியின் மரணம் காணப்படுகிறது.
தமிழினி விடுதலையாகி சிறிது காலத்தில் இறந்து விட்டார் என்பது ஊர் அறிந்த விடயமாகும். இவரின் மரணம் பற்றிய சந்தேகப்பாடுகள் கூர் நிலை பெற்ற போதும் அது ஊர்ஜிதப்படுத்தப்பட முடியாத செய்தியாக, வதந்தியாக பரவிவந்திருக்கிறது.
இதில் ஆச்சரியப்படக்கூடிய இன்னுமொரு விடயத்தை அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அது யாதெனில் இறந்த போராளிகள் அனைவரும் புற்றுநோய் எனும் ஒரே வகை நோய்க்கு ஆளாகியே மரணித்துள்ளார்கள் என்பது அதுபற்றிய இன்னுமொரு தகவலாகும்.
முள்ளிவாய்க்கால் யுத்த மௌனிப்புக்குப்பின் ஆயிரக்கணக்கான போராளிகள் இராணுவத்திடம் சரண் அடைந்துள்ளனர். உறவினர்களிடம் கையளித்துள்ளனர்.
வணக்கத்துக்குரிய குருமாருடனும் சமூக நலவாளர்களுடன் சேர்ந்து சென்று இராணுவத்திடம் அடைக்கலம் கோரியோர் உள்ளனர்.
அதுவுமின்றி வெள்ளைக் கொடி சகிதம் சரண் அடையுங்கள் என மறைகரங்கள் கூறியதற்கு அமைய சரண் அடைந்தவர்கள் என ஏராளமானவர்கள் அதுவுமன்றி மனைவியருடனும் தாய் தந்தையருடன் சென்று அடைக்கலம் கோரியவர்களும் இருந்துள்ளனர்.
இதற்குப் புறம்பாக இராணுவத்தினரால் இறுதி யுத்தத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் என்ற இன்னுமொரு தரப்பினரும் இந்தக் குழாத்தில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கு வவுனியா, மட்டக்களப்பு கொழும்பு, அநுராதபுரம் என்ற பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த புனர்வாழ்வு முகாம்களில் வைத்து மறுவாழ்வு அளிக்கப்பட்டது. சுமார் 30 வகையான பயிற்சிகள் பல்வேறு படிநிலைகளில் தங்களுக்கு அளிக்கப்பட்டதாக சில போராளிகள் தெரிவித்தார்கள்.
பயிற்சிகள் அளிக்கப்பட்டவர்கள் பெற்றுக் கொண்டவர்கள் சமூகமயமாக்கல் என்ற கோதாவில் விடுவிக்கப்பட்டார்களே தவிர அவர்களுக்கு அவர்கள் சென்ற சமூகம் எப்படி வரவேற்றது அவர்களுடைய வாழ்வியல் நிலைகள் எவ்வாறு இருந்தன என்பதெல்லாம் விமர்சனத்துக்குரிய விடயமாகவே இருந்துள்ளது.
விடுதலையான போராளிகள் சமூக ஆய்வு நிறுவனங்களால் பின்வரும் வகையில் தரம் காணப்பட்டார்கள்.
1. பெண் போராளிகள்
2. ஆண் போராளிகள்
3. அங்கவீனம் அடைந்த போராளிகள்
4. மனநிலை பாதிக்கப்பட்ட போராளிகள்
இவர்கள் ஒவ்வொருவரும் முன்னாள் போராளிகளாக இருந்து சமூகமயமாக்கும் நோக்குடன் சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்கள். இவர்களில் பெண் போராளிகளின் அவலங்களும் துயரங்களும் எழுத்தில் வடிக்கமுடியாத துயரங்களாகவே இருக்கின்றன.
பொதுவாக போராளிகளை மேற்கூறப்பட்ட வகைப்படுத்தலுக்குள் உள்ளாக்கிக் கொண்டாலும் அவர்கள் பல நிலைப்பிரிவு கொண்டவர்களாக போருக்குள் இணைக்கப்பட்டிருக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர், யுவதிகள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், முதியதன்மை கொண்டோர்.
அனைத்துப் பிரிவுகளிலும் பெண்கள் உள்ளடங்கிக் காணப்படுகிறார்கள். பெண் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதும் அவர்கள் தாம் வாழும் சமூகத்துக்குள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் உளவியல் பாதிப்புக்களும் பலவாகக் காணப்படுகின்றன.
எனக்கு திருமணம் பேசப்பட்டிருந்தது இந்தப் பிள்ளை எப்படியென்று அயல்வீட்டாரிடம் மாப்பிள்ளை வீட்டார் விசாரித்திருக்கிறார்கள். இந்தப் பிள்ளை இயக்கத்திலிருந்தது, உங்களுக்கு சரிப்பட்டுவராது என்று அயல் வீட்டார் கூறியதால் எனது கலியாணம் இடையில் நின்று விட்டது. இன்றுவரை இந்த நிலைமையே தொடருகிறது, இவ்வாறு கூறினார் ஒரு பெண் போராளி.
முன்பள்ளி ஆசிரியராக கிராமத்தில் சேவை செய்து கொண்டிருந்த நான் இயக்கத்தில் இணைந்தேன். வன்னி இறுதிப் போர்காலத்தில் சரணடைய மக்களோடு மக்களாக செல்ல முற்பட்டபோது தலைமுடி வெட்டப்பட்ட காரணத்தினால் மக்கள் என்னை தங்களோடு சேர்த்துக் கொள்ளவில்லை.
சரண் அடைந்தபின் பம்மை மடு புனர்வாழ்வு முகாமில் வைத்து சுமார் 1 ½ வருடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டோம். கம்யூட்டர் பயிற்சியை பெற்றிருக்கிறேன்.
போகுமிடமெல்லாம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்தேன். இவ்வாறு தொல்லை தருவதனால் எமது திருமண வாழ்வு தடைப்பட்டுப் போகிறது.
எமது சமூக வாழ்வு கேள்விக்குறியாகிறது. திரும்ப திரும்ப விசாரணையென்ற பெயரில் புலனாய்வாளர்கள் வருவதனால் நாங்கள் எமது பழைய வாழ்வை மறக்க முடியாமல் போகிறது. தற்பொழுது ஓரளவு அமைதிகொண்டிருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
மூதூர் முன்னம் போடிவெட்டை முன்னாள் பெண் போராளி ஒருவர் இன்னுமொருபுறம் ஆண் போராளிகள் என்ற வகையில் பெருந்தொகையானவர்கள் வடகிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றார்கள்.
அவர்களின் வாழ்வியல் போராட்டங்களும் சமூகத்துக்கு முகங்கொடுக்க வேண்டிய ஏனைய பிரச்சினைகளும் அனர்த்தங்களாகவே காணப்படுகிறது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு முன்னாள் போராளிகள் சமூகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டார்கள். சமூய மயமாகல் என்பது எளிதாகிவிட்டது என்று அரசாங்கமும் சமூக நலவாதிகளும் அரசியல் தலைவர்களும் கூறிவருகின்ற போதும் அவர்கள் சமூகத்துக்குள் இருந்து கொண்டு அனுபவிக்கும் துயரங்களும் போராட்டங்களும் எவ்வளவு கொடுமையானது என்பதை இந்தப் போராளிகளின் வாக்கு மூலங்கள் எங்களுக்கு இதயத்தை உருக்கிவிடும் வார்த்தைகளாகக் காணப்படுகின்றன.
எனக்கு இப்போது 33 வயது நான் விடுதலையாகிவந்து ஆறு வருடங்களாகின்றன. எனக்கு 50 வயதானாலும் விசாரணை முடியாது போலிருக்கிறது.
மாவிலாறு யுத்தம் நடந்த போது இயக்கத்தில் சேர்ந்தேன். இறுதி யுத்தம் நடைபெற்ற போது திருகோணமலைக் கடற்பரப்பில் கடற்படையால் கைதுசெய்யப்பட்டு பூஸா முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டேன்.
வெலிக்கந் தை புனர்வாழ்வு முகாமில் வைத்து புனர்வாழ்வுக்கு ஆளாக்கப்பட்டேன். இன்று உடல் நலமற்று பலவீனப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என மூதூரை சேர்ந்த முன்னாள் போராளியொருவர் தெரிவித்தார்.
1995 மண்டை தீவு தாக்குதலில் ஈடுபட்டவன்யான். 1996 இல் மட்டக்களப்பைச் சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரை திருமணம் செய்து கொண்டேன்.
2009 இறுதி யுத்தத்தின் போது சரண் அடைந்தேன். நானும் எனது மனைவியும் புல்மூட்டையில் அமைக்கப்பட்டிருந்த சமணகம முகாமில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு எனது சொந்த ஊரான பள்ளிக் குடியிருப்புக்கு வந்து சேர்ந்தோம்.
புலனாய்வு பிரிவினர் ஆயுதங்களை எடுத்துத் தரும்படி வன்னிக்கு கூட்டிச் சென்றார்கள். கண்டியிலிருந்த 4 மாடிக்கும் கொண்டு செல்லப்பட்டோம்.
பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டோம். உடல் நிலை இயலாத நிலையில் இன்னும் போராடிக் கொண்டிருக்கின்றேன். இது பள்ளிக்குடியிருப்பைச் சேர்ந்த போராளிக் குடும்பமான கணவன் மனைவியின் வாக்குமூலம்.
இவ்வாறு பொருளாதார ரீதியாகவும் வாழ்வியல் ரீதியாகவும் சமூகரீதியாகவும் பல்வேறு இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் முன்னாள் போராளிகள்.
இவர்களில் ஊனமுற்ற உடல் உபாதைக்கு உட்பட்டு வாழும் ஆயிரக் கணக்கான போராளிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருப்பது இன்னொரு வகை துயர் ஓடிய சம்பவங்களாகும்.
பூநகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளியின் துயர் கூடிய வாழ்க்கை எம் நெஞ்சைப் பிழிவது போலிருக்கிறது. கழுத்துக்கு கீழே உணர்வுகள் இழந்து எந்தவுறுப்பும் பூரணமாக இயங்காத நிலையில் வாழ்வை மீட்கப் போராடும் யூட் ஜெயசீலன் படுக்கையில் இருந்து கொண்டு உயிர் வாழ போராடும் போராட்டமானது மிகக் கொடியது.
பாடசாலை செல்லும் மாணவர்கள் தயவால்தான் தான் இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் என அவர் தனது கதையைச் சொல்லி அழுது கொண்டிருக்கிறார். மூதூரில் உள்ள போராளி ஒருவருக்கு இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலை. அவர் தனது சிறுநீர் கழிப்பைக்கூட இடுப்பில் தகரடப்பா ஒன்றை கட்டியே கழித்து வருகிறார்.
இவ்விதம் முன்னாள் போராளிகளின் வாழ்வியல் போர்கள் நடந்து கொண்டிருக்கின்ற நிலையில் புனர்வாழ்வு பெற்ற காலப்பகுதியில் முன்னாள் போராளிகளுக்கு ஊசி போடப்பட்டது.
இரசாயன உணவு வழங்கப்பட்டது என்ற விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியிருப்பதுடன் ஆயிரக்கணக்கான முன்னாள் போராளிகளுக்கு அச்ச உணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
தங்களுக்கும் அவ்வாறு விஷ ஊசி போடப்பட்டிருக்குமா? இரசாயன உணவை உட்கொண்டிருப்போமா? என்ற பய உணர்வோடு அவர்கள் போராடும் மனநிலை ஏற்பட்டுள்ளது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் அவர்கள் வாழ்வியலில் ஈடுபட அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தற்போது பல அமைப்புக்களும் அரசியல் தலைவர்களும் அரசாங்கத்தைக் கோரிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதிலும் இன்னுமொரு சங்கடம் உருவாகியிருக்கிறது. சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனை செய்யப்பட வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டிருக்கிற நிலையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண சர்வதேச தரம் வாய்ந்த மருத்துவர்கள் எமது நாட்டிலுள்ளனர்.
அவர்களைக் கொண்டு மேற்படி நபர்களுக்கு மருந்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் ஜனநாயக போராளிகள் அமைப்பைச் சேர்ந்த முக்கியஸ்தரும் முன்னாள் போராளியுமான கணேசலிங்கம் சந்தரலிங்கம் (துளசி) பகிரங்கமான கோரிக்கையொன்றை த.தே. கூ. அமைப்பினருக்கு விடுத்துள்ளார்.
அது யாதெனில் இந்த விவகாரத்தில் த.தே.கூ. அமைப்பானது தலையிட்டு சர்வதேச மருத்துவர்களே முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய ஆவன செய்ய வேண்டுமென கோரியுள்ளனர்.
விவகாரங்கள் இவ்வாறு முறுக்கு நிலை பெற்றுக் கொண்டு போகின்ற நிலை யில் கடந்த புதன்கிழமை (3.8.2016) திரு கோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவந்துள்ளது.
இவ்வாறு சமூகமயப்படுத்தப்பட்டவர் களில் 107 போராளிகள் இதுவரை மர்ம மான முறையில் மரணித்துள்ளனர் என உத்தியோகப்பற்றற்ற புள்ளி விபரங் கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை அரசாங்கத்தின் சவாலை ஏற்றுக் கொண்டு முன்னாள் போராளிகள் 800 பேர் அரசாங்கத்தின் மருத்துவப் பரிசோத னைக்கு தயாராகி வருவதாக இன்னொரு செய்தி தெரிவிக்கிறது.
இவ்வாறான நெருக்கடி நிலையில் வைத்திய பரிசோதனைக்கு ஆட்படுத்தப் படும் போராளிகளுக்கு உண்மையில் ஊசி போடப்பட்டுள்ளதா? இரசாயன உணவு வழங்கப்பட்டதா? என்ற சந்தேகங்களுக்கு விடை கிடைக்குமாயின் அவ்விடையானது அரசுக்கு பாதகமாக இருக்குமாயின் இவ் விவகாரமும் இன்னுமொரு மனித உரிமை போருக்கு ஆயுதமாக்கப்படலாம்.
முன்னாள் போராளிகள் விவகாரம் இவ்வாறு உக்கி ரம் பெற்று சென்று கொண்டிருக்கின்ற நிலையில் முள்ளிவாய்க்கால் போரில் உற வினர்கள் முன்நிலையில் இராணுவத்திடம் சரணடைந்த போராளிகள் ஆயிரக்கணக்கா னோர் எங்கே உள்ளார்கள்? அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களுக்கு நஞ்சு ஊட்டப்பட்டதா? என்ற சந்தேகங்கள் விஸ்வரூபம் எடுத்துள்ளன.