கடந்த பிப்ரவரி மாதம் சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலை தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆனால், அவர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்யவே, அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், சென்னை மாங்காட்டை அடுத்த குன்றத்தூரில் குடும்பத்துடன் வசித்துவந்தார். குன்றத்தூர் வீட்டில் தாய் சரளாவைக் கொன்றுவிட்டு நகைகளுடன் தஷ்வந்த் கடந்த 2-ம் தேதி மாயமானார்.
தஷ்வந்த் மும்பையில் பதுங்கி இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலை அடுத்து தமிழகப் போலீஸார் மும்பை விரைந்தனர். மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தைப் போலீஸார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர்.
கைதுசெய்யப்பட்ட தஷ்வந்த், மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சென்னை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் 9-ம் தேதி ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், தஷ்வந்தைத் தமிழகம் அழைத்துச் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்றத்திலிருந்து விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில், போலீஸாரைத் தாக்கிவிட்டு தஷ்வந்த் தப்பினார். தப்பியோடிய தஷ்வந்த்தை மும்பை போலீஸார் உதவியுடன் சென்னை போலீஸார் மும்பையில் கைது செய்தனர்.