பாடசாலையில் கல்வி கற்றுவரும் மகளுக்கு தாயொருவர் சூடுவைத்ததன் காரணமாக பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் குறித்த மகள் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எருவில் பிரதேசத்தினை சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் 6 இல் கல்வி கற்றுவரும் மாணவிக்கே தாயினால் சூடுவைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மாணவி வழமைபோன்று பாடசாலைக்கு சென்றிருந்த வேளை காயங்களை அவதானித்த ஆசிரியர்கள் மாணவியிடம் குறித்த காயங்கள் தொடர்பாக வினவிய போது மாணவி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக ஆசிரியர்களிடம் முறையிட்டதனையடுத்தே ஆசிரியர்கள் மாணவியை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்துள்ளதாக தெரியவருகின்றது.
இரும்புக் கம்பியை சூடாக்கியதன் மூலமே குறித்த சம்பவத்தை மாணவியின் தாயார் நிகழ்த்தியுள்ளார். இதனால் மாணவியின் இரண்டு கைகளிலும் வாய்ப்பகுதிகளிலும் பலத்த எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளது.
மாணவிக்கு ஏற்பட்டுள்ள குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார், சிறுவர்பாதுகாப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மாணவி தொடர்ந்தும் சிக்கிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.