இலங்கையில் யுத்தம் முடிந்து ஐந்து வருடங்களாகின்ற சூழலில் இராணுவ சுற்றி வளைப்பு ஒன்றில், விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்றுபேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
கோபி, தேவியன், அப்பன் என அழைக்கப்படுபவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ள செல்வநாயகம் கஜதீபன், சுந்தரலிங்கம் கஜீபன், நவரட்னம் நவதீபன் ஆகியோரே இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகியுள்ளார்கள்.
சுமார் இரண்டு மாதங்களாக இவர்கள் மூவரும் தேடப்பட்டு வருவதாகவும், அவர்கள் பற்றிய தகவல் தெரிவிப்போருக்கு பத்து இலட்சம் ரூபா சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவித்தல் கொண்ட சுவரொட்டிகள், அவர்களுடைய படங்களுடன் நாட்டின் வடக்கு கிழக்கு மற்றும் தலைநகர் கொழும்பு ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டிருந்தன.
கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, விடுதலைப்புலிகள் இலங்கையில் முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
அதன் பின்னர், நான்கு வருடங்களுக்கு மேலாக நாட்டில் பயங்கரவாதச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று அரசாங்கம் பெருமையோடு கூறி வந்துள்ளது.
முப்பது வருடங்களாக நாட்டில் நிலவிய பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதையடுத்து, நாடு ஆங்கிலேயருடைய ஆட்சியில் இருந்து 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர், நாட்டை ஆள்வதற்குப் பெரும் துணையாக நீண்ட காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டத்தை அரசாங்கம் நீக்கியிருந்தது.
வரையறையற்ற முறையில் மோசமான அதிகாரங்களைக் கொண்டிருந்த அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும், அதன் இரணைப்பிள்ளையாக இருந்த பயங்கரவாதச் சட்டம் நீக்கப்படவில்லை.
மாறாக அவசர காலச் சட்டத்தின் முக்கிய அதிகாரங்கள் அல்லது பிரிவுகள் பயங்கரவாதச் சட்டத்துடன் இணைக்கப்பட்டு, அந்தச் சட்டம் மேலும் வலுவுடையதாக மாற்றப்பட்டிருக்கின்றது என்பது வேறு விடயம்.
நாட்டில் பயங்கரவாதமே இல்லை என்று அரசாங்கமே கூறும் அளவுக்கு, யுத்தத்தின் பின்னர், நிலைமைகளின் தீவிரம் தணிந்திருந்தது. அந்நியரிடமிருந்து நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், தமிழ் மக்களுக்கு உரிய ஆட்சியதிகார உரிமைகளும், அரசியல் உரிமைகளும், மாறி மாறி ஆட்சிக்கு வந்த பேரினவாத போக்குடைய அரசாங்கங்களினால் படிப்படியாக இல்லாமல் செய்யப்பட்டிருந்தன.
தமது உரிமைகளுக்காக தமிழ் மக்கள் அஹிம்சை வழியில் கொடுத்துவந்த குரல்கள் நசுக்கப்பட்டு, அளவுக்கு அதிகமான அடக்குமுறைகளை அரசுகள் பிரயோகித்து வந்தன. அதன் உச்ச கட்டமாக 1983 ஆம் ஆண்டு. கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக்கலவரத்தின்போது, தமிழ் மக்கள் இரக்கமின்றி அடித்து நொறுக்கப்பட்டார்கள்.
அவர்களுடைய சொத்துக்கள் எரித்து நாசமாக்கப்பட்டு, நாட்டின் தலைநகர் கொழும்பிலிருந்தும், ஏனைய தென்பகுதிகளிலிருந்தும் வடக்கு நோக்கி விரட்டியடிக்கப்பட்டார்கள்.
இந்த மோசமான அரச பயங்கரவாதத்தையடுத்தே, தமிழ் மக்களின் பாதுகாப்புக்காகவும், வாழ்க்கை இருப்புக்காகவும் தமிழ் இளைஞர்கள் முழு அளவில் ஆயுதப் போராட்டத்தில் குதித்திருந்தார்கள்.
அரசாங்கத்தினால் பயங்கரவாதம் என சித்தரிக்கப்படுகின்ற நடவடிக்கையானது, அரச பயங்கரவாதம் பெற்றெடுத்த பிள்ளை. உண்மையில் அது பயங்கரவாதமல்ல. இந்த நாட்டில் தமிழ் மக்கள் உயிர்வாழ்வதற்குரிய அடிப்படை உரிமைக்கான போராட்டமாகும்.
ஆனால் அது அரசாங்கத்தினால் பயங்கரவாதமாக மாற்றப்பட்டு, உலக நாடுகள் பலவும் அதனை ஏற்றுக்கொண்டுவிட்டது. பயங்கரவாதிகளாக உருவகிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகள் இல்லாத நிலையிலும், வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினரும், அவர்களின் ஆதரவாளர்களும் நாட்டில் பயங்கரவாதத்தை மீளுருவாக்க முயற்சிக்கின்றார்கள் என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியிருக்கின்றது. இது வெறும் குற்றச்சாட்டல்ல. பாரதூரமான பழிசுமத்தலாகும்.
உள்நோக்கம்
விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தின்போது, யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்ப துயரங்களையும், பேரிடர்களையும் சந்தித்தார்கள்.
விடுதலைப்புலிகள் தமிழ் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி இராணுவத்திற்கு எதிரான தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியிருந்தார்கள் என்றும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து தப்புவதற்காக, அவர்கள் பொதுமக்களைக் கேடயமாகப் பயன்படுத்தினார்கள் என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.
ஆயினும், வடமேற்கே மன்னார் மடு பிரதேசத்தில் இருந்தும், தெற்கே வவுனியாவில் இருந்தும் இரு முனைகளில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பிரதேசத்தின் மீது பெரும் படையெடுப்பை மேற்கொண்ட அரசாங்கம், 2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடியும் வரையில், விடுதலைப்புலிகளின் பிரதேசத்தின் உள்ளே இருந்த பொதுமக்கள், ஆபத்தின்றி இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் உள்ளே வருவதற்கான பாதுகாப்பான பாதையொன்றைத் திறக்கவே இல்லை.
மாறாக, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இருந்து தமது உயிர்களைப் பணயம் வைத்து வெளியேறி வந்த பொதுமக்கள் மீது இராணுவம் தாக்குதல்களையே நடத்தியது. இதனால் பலர் படுகாயமடைந்தார்கள்.
பலர் உயிரிழந்தார்கள். சிலர் மாத்திரமே உயிர் தப்பிப் பிழைத்தார்கள். அதேநேரம் விடுதலைப்புலிகளும் தமது பிரதேசத்தைவிட்டுச் செல்லாதவாறு தடைகளையேற்படுத்தி மீறிச் செயற்பட்டவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் செய்ததையும் மறுக்க முடியாது.
பயங்கரவாதிகள் என தன்னால் சித்தரிக்கப்படுகின்ற விடுதலைப்புலிகளிடமிருந்து தமிழ் மக்களை மீட்பதற்கு உண்மையாகவே அரசாங்கம் விரும்பியிருந்திருக்குமேயானால், யுத்த பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் தப்பி வருவதற்கான வழியொன்றைத் திறந்திருக்கும். ஆனால் அதனை அரசு செய்யவில்லை.
மாறாக, யுத்த மோதல்கள் நடைபெற்ற பிரதேசத்தில், விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு வலயம் என சில இடங்களைக் குறிப்பிட்டு, அந்தப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என அறிவித்திருந்தது.
ஆனால், தனக்கு எதிரியாகிய விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு வெளியில் இருந்து சண்டை பிடித்துக் கொண்டே, அவர்களுடைய பகுதியில் தானே ஏற்படுத்திய பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினார்கள் எனக் கூறி அந்தப் பகுதிகள் மீது எறிகணைகளை வீசியது.
இதனால் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் அரசபடைகள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
யுத்த மோதல்கள் இடம்பெறுகின்ற பிரதேசத்தின் உள்ளேயிருக்கும் பொதுமக்களை வெளியில் வருவதற்கு அனுமதிக்காமல், கொடூரமான யுத்த மோதல்கள் இடம்பெறுகின்ற சந்தர்ப்பத்தில், அவர்களைப் பாதுகாக்கப் போகின்றேன் எனக் கூறி, எதிரியின் பிரதேசத்தின் உள்ளே பாதுகாப்பு வலயத்தை ஏற்படுத்திய அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் அங்குள்ள பொதுமக்களைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்பது ஆய்வாளர்களுடைய கருத்தாகும்.
எதிரியின் பிரதேசத்தில் பாதுகாப்பு வலயத்தை உருவக்கினாலும், அங்கிருந்து விடுதலைப்புலிகள் தாக்குதல்கள் நடத்துவார்கள் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு, அந்த மக்கள் மீதே தாக்குதல் நடத்துவதன் ஊடாக விடுதலைப்புலிகளுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருந்தது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள்.
மொத்தத்தில், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் உரிமைக்கான போராட்டத்தைச் சிதைத்து, சிங்கள பௌத்த நாடாக இதனை முழு அளவில் உருவாக்க வேண்டும் என்ற பேரினவாத சிந்தனையைச் செயற்படுத்துவதற்கான தொடர் நடவடிக்கையின் முக்கிய அம்சமாகவே, அரசாங்கம் விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதமாகச் சித்தரித்திருந்தது.
இப்போதும் அதே பயங்கரவாதத்தை முதன்மைப்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழ் மக்களின் மீது உண்மையான அக்கறையும், அவர்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாக, உலக ஜனநாயக நாடுகளில் உள்ளதுபோன்று, பெரும்பான்மை இன மக்களுக்கு சரிநிகராக உரிமைகளோடு வாழச் செய்ய வேண்டும் என்று இந்த அரசாங்கம் விரும்பியிருந்தால், யுத்தம் முடிவடைந்த கையோடு, அதிகாரங்களை, நிரந்தரமாகப் பகிர்ந்தளிப்பதற்கான அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கும்.
யுத்தம் முடிவடைந்து ஐந்து வருடங்களாகின்ற நிலையிலும், அரசியல் தீர்வு பற்றியோ, யுத்தத்தின் பின்னரான சமரசத்தை ஏற்படுத்துவது பற்றியோ, பாதிக்கப்பட்ட மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது பற்றியோ அரசாங்கம் சிந்திக்கவில்லை. அக்கறை கொள்ளவுமில்லை.
அதற்குப் பதிலாக, யுத்தத்தினால் எல்லாவற்றையும் இழந்து எதிர்காலம் பற்றிய திடமான நம்பிக்கையற்றவர்களாக இருக்கின்ற மக்கள் மத்தியில் இருந்து மீண்டும் பயங்கரவாதம் உருவாகுவதற்கான ஏதுநிலை உருவாகிவிடக் கூடாது என்று கூறி, அத்தகைய நிலைமையைத் தடுப்பதற்காக யுத்தம் நடைபெற்ற பிரதேசத்தை இராணுவ மயமாக்கியிருக்கின்றது.
இறுக்கமான இராணுவச் சூழல் ஒன்றை வைத்துக் கொண்டே, வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் இங்கு விடுதலைப்புலிகளை மீண்டும் ஒன்றிணைக்கப்பார்க்கின்றார்கள்.
அதற்காக பெருமளவு பணத்தை சிலருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார்கள். இதன் மூலம் மீண்டும் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்கவும், யுத்தம் முடிவடைந்தபின்னர், நாட்டில் ஏற்பட்டுள்ள இன ஐக்கியத்தைக் குலைத்து பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்கின்றார்கள் எனக் கூறி பலரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின்பேரில் கைது செய்திருக்கின்றது. கைது செய்து வருகின்றது.
இந்த நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே கோபி, தேவியன், அப்பன் என்ற மூவரும் தேடப்படுகின்றார்கள் என்ற பிரசாரம் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
விடுதலைப்புலிகளின் தலைவர்களாக வெளிநாடுகளில் இருந்து செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகின்ற நெடியவன் மற்றும் விநாயகம் ஆகிய இருவரின் உத்தரவுக்கமைவாக இந்த மூவரும் விடுதலைப்புலிகளை மீண்டும் அணிசேர்ப்பதற்குச் செயற்பட்டு வந்தார்கள் என்று அரசாங்கம் குற்றம் சுமத்தியிருந்தது.
ஆனாலும், தேடப்படுகின்றார்கள், தேடப்படுகின்ற இவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குவோருக்குப் பத்து இலட்சம் ரூபா வெகுமதியாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த சுவரொட்டிகளில் இவர்கள் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பது தொடர்பாகத் தேடப்படுவதாகக் கூறப்படவில்லை.
மாறாக இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இராணுவ பேச்சாளரும், பொலிஸ் பேச்சாளரும், மூச்சுக்கு மூச்சு இவர்கள் பயங்கரவாதத்துடன் தொடர்புபட்டிருப்பதற்காகவே தேடப்பட்டார்கள் என கூறுகின்றனர்.
ஆனால் சுவரொட்டிகள் மூலமான பொது அறிவித்தலில் அவ்வாறு தெரிவிக்கப்படாதது ஏன் என்று பலரும் வினா எழுப்பியிருக்கின்றார்கள். குற்றச்செயல்களுக்காகத் தேடப்படுபவர்களுக்கும், நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்து தேடப்படுபவர்களுக்கும் இடையே மலைக்கும் மடுவுக்கும் இடையிலான வித்தியாசம் இருக்கின்றது.
எனவே, உண்மையாகவே நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்ற கேள்வி வலுவோடு எழுந்திருப்பதைக் காணவும் உணரவும் முடிகின்றது.
அதேநேரம் விடுதலைப்புலிகளை மீண்டும் அணி சேர்க்கும் முயற்சிக்கு, முக்கிய உள்ளூர் தலைவர்களாகச் செயற்பட்டதாகக் கூறப்படுகின்ற கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரும் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்தார்களா என்பதுபற்றி சரியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தேவியன் என்று அழைக்கப்படுபவரின் புகைப்படமானது, முன்னர் ஊடகங்களில் வெளிவந்திருந்த விடுதலைப்புலிகளின் வான்படை உறுப்பினர் ஒருவருடைய உருவப்படத்தை ஒத்ததாக இருக்கின்றது. உண்மையிலேயே அவர்தான் இவரா என்பதும் தெரியவில்லை.
கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவர் தொடர்பாகவும் அரசாங்கம் கூறியுள்ள, கூறி வருகின்ற தகவல்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.
இறுதி யுத்தத்தின்போது அனுபவித்த ஊழிக்காலத்தையொட்டிய பயங்கரமான யுத்த அனுபவங்களினால் ஏற்பட்ட மனப் பாதிப்புகளில் இருந்து யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் இன்னும் மீளவில்லை.
அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உளப்பாதிப்புகளைப் போக்குவதற்குரிய சரியான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை. அதற்கான சூழலையும் அரச தரப்பினர் உருவாக்கவில்லை.
நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என கூறிக்கொண்டு, எதிர்மறையான காரியங்களையும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மனங்களை நோகடிக்கும் செயல்களையுமே அவர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
யுத்த காலத்திலும் பார்க்க, நைந்து நலிந்து, சோர்ந்து, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையுமில்லாமல் நொந்து போயிருப்பவர்களைப் பார்த்து, உங்கள் மத்தியில் விடுதலைப்புலிகளை மீண்டும் அணி சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன, அதற்கு உங்களில் பலர் உதவி வருகின்றார்கள் என்று அரசாங்கம் கர்ண கடூரமாகக் கூறுகின்றது.
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கு உங்களில் பலர் உதவுகின்றார்கள் என்று தெரிவித்து, பலரைக் கைது செய்து வருகின்றது.
இந்த முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்னும் இருக்கின்றார்கள் என கூறி, இரவும் பகலும் பொதுமக்களைக் கண்காணிப்பதிலும், கால நேரமின்றி ஊர்களைச் சுற்றி வளைத்துத் தேடுவதிலும், அரச படைகள் ஈடுபட்டு வருகின்றன.
ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளே சிக்குப்பட்டு, இராணுவ மயப்படுத்தப்பட்ட இறுக்கமான ஒரு சூழலில் எப்படித்தான் வாழப் போகின்றோமோ என்று தெரியாமல், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே அல்லாடிக்கொண்டிருக்கின்ற மக்கள் மத்தியில், இராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் மறைந்திருந்தார்கள் எனக் கூறி (ஊடகங்களில் வெளிவந்த தகவல்களின்படி,)
இரண்டாயிரம் இராணுவத்தினரைக் கொண்டு ஒரு இராணுவ முற்றுகையை ஆளரவமில்லாத நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் மேற்கொண்டு, தேடப்பட்டு வந்தவர்களாக அறிவிக்கப்பட்டிருந்த கோபி, தேவியன், அப்பன் ஆகிய மூவரையும் அரசு சுட்டுத்தள்ளியிருக்கின்றது.
இந்தச் சம்பவத்தினால் வன்னிப்பிரதேச மக்கள் ஆடிப்போயிருக்கின்றார்கள். அதிர்ச்சியில் இருந்து மீள முடியாதவர்களாக, யுத்த காலத்திலும் பார்க்க மோசமான அச்சத்தில் மூழ்கியிருக்கின்றார்கள். அடுத்தடுத்து என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று அறியாதவர்களாக திகைத்துப் போயிருக்கின்றார்கள்.
மக்களின் இந்த உணர்வுகளை தணிப்பதற்குப் பதிலாக அதிகமாக்கும் வகையில் கோபி உட்பட மூவரும் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்திற்கும், அனுராதபுரம் விஜயபுர பொது மயானத்தில் இடம்பெற்ற அவர்களுடைய இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற இடத்திற்கும் ஊடகவியலாளர்கள் எவரையும் இராணுவமும் பொலிசாரும் அனுமதிக்கவில்லை.
சுட்டுக்கொல்லப்பட்ட இந்த மூவருடனும் தொடர்புகளைப் பேணி வந்தவர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாகவும், விடுதலைப்புலிகளை மீண்டும் அணி சேர்ப்பதற்கு இவர்களுக்கு உதவினார்கள் என்று கருதப்படுகின்ற அரசியல்வாதிகள் பற்றி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள தகவல்களும் நிலைமையை மோசமாக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.
நாட்டில் பயங்கரவாதத்தை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சிகளில் கோபி உட்பட மூவரும், ஈடுபட்டிருந்ததாகவும், இதற்காக பெரும் தொகையான பணம் பலருக்கு நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது பற்றிய தகவல்கள் கிடைத்திருப்பதாகப் படையினர் தெரிவித்துள்ளனர்.
பத்து இலட்சம், இருபது இலட்சம் என்று ஐம்பது அறுபது இலட்சம் வரையிலான பணம் இதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக் கப்பட்டிருக்கின்றது.
யுத்தம் நடைபெற்றபோது, விடுதலைப்புலிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் தாராளமாக உதவிசெய்த காலத்தில்கூட, இந்த அளவிலான பணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இப்போது ஐரோப்பிய நாடுகளில் வேலைவாய்ப்புக்கள் குன்றி, அங்கு தனி மனித வருவாயும் பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகின்ற நேரத்தில் அங்குள்ளவர்கள் இந்த அளவிலான பணத்தை எவராலும் அனுப்ப முடியுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது.
மொத்தத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், மூன்றாவது தடவையாக, மனித உரிமைச் செயற்பாடுகள் மற்றும் மானுட நேய நடவடிக்கைகள் தொடர்பில் தனக்கு எதிரான பிரேரணைக்கு முகம்கொடுத்து ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் விசாரணையை எதிர்நோக்கி, நெருக்கடிக்குள் சிக்கியுள்ள அரசாங்கம்….,
‘இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் உருவாக்கப்படுகின்றது’ என்பதைக் காட்டுவதற்கான நாடகம் ஒன்றையே கோபி உட்பட மூன்று பேரை வைத்து நெடுங்கேணியில் ஆடியிருக்கின்றது என்ற தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருடைய கூற்றை ஊர்ஜிதப்படுத்தும் வகையிலேயே அரச காரியங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
ஐ.நா.வின் விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என அடம்பிடித்துக் கொண்டு, மறுபக்கத்தில் நாட்டில் பயங்கரவாதம் உருவாகியிருக்கின்றது என்பதைப் பெரிய அளவில் வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம், இறுதி யுத்தகாலத்து மனித உரிமை மீறல்களுக்குப் பதிலளிக்கப் போவதில்லை என்பதையும், தமிழர் பிரச்சினைக்கு எந்த வகையிலும் அரசியல் தீர்வு காணப்போவதில்லை என்பதையுமே இன்றைய இலங்கை அரசாங்கத்தின் இராணுவ மற்றும் அரசியல் செல்நெறிகள் கோடி காட்டுவதாக அமைந்திருக்கின்றன.
-செல்வரட்னம் சிறிதரன்-