கர்நாடகாவில் தமிழ் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தமிழர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆவேசம் கொண்டு கர்நாடக பதிவு எண்கள் கொண்ட வாகனங்களை தமிழ் அமைப்பினர் அடித்து நொறுக்கினர்.
இந்நிலையில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்த வாகனங்களை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய முன்னணி கட்சியினர் அடித்து நொறுக்கினர்.
ராமேஸ்வரம் ஜே.ஜே.நகரில் கர்நாடக பதிவு எண் கொண்ட வாகனங்கள் உடைக்கப்பட்டது.
கர்நாடக வாகனத்தை ஓட்டிவந்த டிரைவரை அடித்து, உதைத்து, மண்டியிடவைத்து, ‘’காவிரி தமிழ்நாட்டுக்கே’’ என்று சொல்ல வைத்தனர்.
வாகனங்களை அடித்து நொறுக்கியவர்களில் ஒருவரான முருகானந்த் என்பவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டியில், ‘’காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களையும், தமிழ்நாட்டு வாகனங்களையும், அங்கிருக்கும் சொத்துக்களையும் அங்கிருக்கும் கன்னட வெறியர்கள் அடித்து நொறுக்கும் வேலையை தொடர்ந்து செய்தால் வாகனங்களை மட்டுமல்லாது தமிழகத்தில் நுழையும் கன்னடர்களையும் அடிப்போம்’’ என்றார்.
தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தது போலீஸ்.
இதே போல் நாகை மாவட்ட சீர்காழியில் கர்நாடக பதிவெண் கொண்ட லாரிகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கர்நாடக அதிபருக்கு சொந்தமான உட்லண்ட்ஸ் ஓட்டல் முன் எச்சரிக்கை நோட்டீஸ் ஒன்றை ஒட்டிவிட்டு, பெட்ரோல் குண்டையும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.