கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட் தமிழரின் பாரம்பர்ய உடையான வேட்டி அணிந்து பொங்கல் வைத்துக் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கனடா பிரதமர் ஜஸ்டின் இந்திய மற்றும் தமிழகப் பண்டிகைகளை ஆர்வமாகக் கொண்டாடுவது வழக்கம். அவர் மற்ற நாடுகளின் கலாசாரத்துக்கு மதிப்பு கொடுப்பதால் இந்தியாவில் அவருக்கு ஃபேன்ஸ் அதிகம். கடந்த தீபாவளிப் பண்டிகையின்போது கனடா தலைநகர் ஒட்டாவாவில், இந்திய மக்கள் முன் குத்துவிளக்கேற்றி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
தற்போது கனடாவில் வசிக்கும் தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்துக் கொண்டாடி அசத்தியுள்ளார். அந்தப் புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்து `இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.