ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறை,வெளிநாட்டில் செயல்பட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின்(எல்.ரீ.ரீ.ஈ) ஒரு மூத்த தலைவரை ஈரான் மற்றும் மலேசிய அதிகாரிகளின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக கடத்தி வந்து சாதனை புரிந்துள்ளது.
மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவரான நந்தகோபன் சரியாக ஒரு மாதத்துக்கு முன்பு 2014 மார்ச் 6 ல் ஸ்ரீலங்காவுக்கு கொண்டுவரப்பட்டதாக “டெய்லி மிரர்” நம்பிக்கையாக அறிந்துள்ளது.
நந்தகோபன் என அழைக்கப்படும் மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர்,நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரனின் கட்டுப்பாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ யின் வெளிநாட்டு வலையமைப்பின் இரண்டு பிரதித் தலைவர்களில் ஒருவராவார்.
நந்தகோபனின் உண்மைப் பெயர் கபிலன், இவரோடு அரவிந்தன் என்கிற இரும்பொறையும்தான், புலம்பெயர்ந்தோர் பகுதியிலுள்ள நெடியவன் குழுவின் இரண்டு பிரதித் தலைவர்களாக உள்ளார்கள். இரும்பொறை ஐரோப்பாவில் செயல்படும்போது தென்கிழக்கு ஆசியாவை தளமாகக் கொண்டு நந்தகோபன் இயங்கி வந்தார்.
தெஹ்ரான்
ஒரு போலிக் கடவுச்சீட்டு மூலம் தெஹ்ரான் வழியாக லண்டன் செல்வதற்காக மலேசியாவை விட்டு புறப்பட்டபோது, எல்.ரீ.ரீ.ஈ தலைவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்த ஸ்ரீலங்கா அதிகாரிகள், அந்த விடயம் பற்றி தென்கிழக்காசிய பகுதியினரிடமிருந்து கிடைத்த ஒரு துப்பு மூலமாக எச்சரிக்கை அடைந்தனர்.
இதை பற்றி தெஹ்ரான் அதிகாரிகளுக்கு அறிவித்ததின் பயனாக அவர்களின் அதி தீவிர ஒத்துழைப்புடன், தெஹ்ரான் விமான நிலையத்தில் மாற்றி ஏறும் பயணிகள் தங்குமிடத்தில் வைத்து நந்தகோபனை கைது செய்ய முடிந்தது. அவர் ஒரு போலிக் கடவுச்சீட்டில் பயணம் செய்கிறார் என்கிற அடிப்படையில் அவர் தொடர்ந்து பயணம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
காலவரையின்றி தெஹ்ரானில் தடுத்து வைக்கப்படுவதா அல்லது கோலாலம்பூருக்கு திரும்பிச் செல்வதா என்கிற இரண்டு தெரிவுகள் அவர் முன் வைக்கப்பட்டன, நந்தகோபன் மலேசியாவுக்கு திரும்பிச் செல்வதை தெரிவு செய்தார்.
நெடியவனின் முக்கிய பிரதித் தலைவர் கோலாலம்பூருக்கு வந்து இறங்கியதும் அவர் உடனடியாக மலேசிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டார்.
இதற்கிடையில் ஸ்ரீலங்கா அதிகாரிகளும் நந்தகோபன் விடயமாக தங்கள் சகபாடிகளுடன் தொடர்பு கொள்வதற்காக மலேசியாவுக்கு சென்றார்கள். அதன்பின் நந்தகோபன் ஸ்ரீலங்கா அதிகாரிகளால் மடக்கப்பட்டு மார்ச் 6ல் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டார்.
யுத்தத்தின்போது ஸ்ரீலங்காவில் வைத்து ஷெல் தாக்குதல் காரணமாக நந்தகோபன் காயங்களுக்கு உள்ளாகி ஊனமடைந்ததால் முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அரசியல் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்செல்வனைப்போல கைத்தடியின் உதவியுடனே கால்களை ஊன்றி நடப்பார்.
கருணை
ஸ்ரீலங்கா அதிகாரிகள் ஒரு சாமர்த்தியமான கருணையுடனேயே நந்தகோபனை நடத்தி வருகிறார்கள் என்று அறியக்கூடியதாக இருக்கிறது.
அவரை ஒரு வசதியான வீட்டில் தடுத்து வைத்திருப்பதுடன் நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் உட்பட மருத்துவர்களால் கவனிக்கப்பட்டும் வருகிறார்.
ஐரோப்பாவில் உள்ள அவரது மனைவியுடன் தொடர்புகொண்டு அவரது தற்போதைய நிலமை பற்றி அறிவிக்கவும் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
நந்தகோபன் தனது குடும்பத்துடன் இணைவதற்காக செல்லும் வழியிலேயே அவர் ஈரானில் நிற்க நேர்ந்தது. அவரது மனைவி மற்றும் நான்கு பிள்ளைகள் இப்பொழுது ஜேர்மனியில் உள்ளார்கள்.
தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதின்படி, ஸ்ரீலங்கா அதிகாரிகளுக்கும் மற்றும் நந்தகோபனுக்கும் இடையே நடந்த ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகமாக உள்ளன என நிரூபிக்கப் படடுள்ளன.
வெளிப்படையாக நந்தகோபன் ஒரு சூழ்நிலைக் கைதியின் நிலையில் உள்ளதால், ஸ்ரீலங்கா அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவதுடன் அவர்களுக்கு தேவையான தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார்.
நந்தகோபன் ஒரு முக்கிய எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளரும் தற்போதைய வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ நடவடிக்கைகள் பற்றிய முதல்நிலை அறிவு உள்ளவராகவும் உள்ளதால், அவரைக் கைது செய்ய முடிந்ததை இட்டு ஸ்ரீலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் மகிழ்ச்சியில் திளைப்பதாகச் சொல்லப்படுகிறது.
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் சிவபரன் என்கிற நெடியவன, நோர்வே அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக தன்னைப்பற்றிய குறைவான சுயவிபரங்களை மட்டுமே வெளிப்படுத்தி செயற்பாடுகளை குறைத்துக் கொண்டு நோர்வேயில் வசித்து வருகிறார், அதனால் அவரது நம்பிக்கைக்கு உரிய உதவியாளர்களான நந்தகோபன் மற்றும் இரும்பொறை ஆகியவர்களிடமே வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் மற்றும் முன்னணி அமைப்புகளின் நாளாந்த நிருவாகத்தை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இரும்பொறை
நியுசிலாந்து கடவுச்சீட்டை காவிக்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பறந்து திரியும் இரும்பொறை தற்போது ஜேர்மனியில் தளம் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தாய்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையர் அலுவலகத்தில் ஒரு அகதியாக நந்தகோபன் தன்னைப் பதிவு செய்துள்ளார்.
எனினும் அவர் தாய்லாந்து மலேசியா மற்றும் இந்தோனசியா ஆகிய நாடுகளுக்கு போலிக் கடவுச்சீட்டில் சென்று வந்திருக்கிறார்.
நிதி சேகரிப்புக்கு இரும்பொறை பொறுப்பாகவுள்ள அதேவேளை, நந்தகோபன் முக்கியமாக பிரச்சாரப் பகுதியில் கவனம் செலுத்தி வந்தார்.
அவர் எல்.ரீ.ரீ.ஈ சார்பாக உத்தியோகபூர்வ அறிக்கைகளை விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகம் என்கிற பெயரின்கீழ் வெளியிட்டு வந்தார். எல்.ரீ.ரீ.ஈயின் உலகளாவிய பிரச்சார செயற்பாட்டை நந்தகோபன் ஒருங்கிணைத்து வந்தார்.
அதற்கு அப்பால் வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈயின் பல்வேறு ஊடக அமைப்புகளான தொலைக்காட்சி வலையமைப்புகள்,வானொலி நிலையங்கள்,செய்திப்பத்திரிகைகள், இதழ்கள் மற்றும் இணையத்தளங்கள் என்பனவற்றையும் நந்தகோபன் இயக்கி வந்திருக்கிறார்.
தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்காவில் உள்ள அநேக அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களையும் கூட நந்தகோபன் தொடர்பு கொண்டிருக்கிறார்.
ஸ்ரீலங்காவிலும் மற்றும் வெளிநாட்டிலும் தற்போது நிகழும் எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகள் பற்றி நந்தகோபன் பயனுள்ள தகவல்களை வழங்குவார் என்கிற நன்னம்பிக்கையில் ஸ்ரீலங்கா அதிகாரிகள் உள்ளார்கள்.
‘புலம்பெயர் புலிகள் பற்றி அவர் வழங்கும் தகவல்கள் உண்மையில் இன்றைய தேதிக்கு பொருத்தமானதாகவும் பெறுமதி வாய்ந்ததாகவும் இருக்கும், ஏனெனில் அவர் கைது செய்யப்படும் வரைக்கும் அவர் வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ கட்டமைப்புடன் தொடர்பில் இருந்திருக்கிறார்” என்று அதிகாரப் பூர்வமான வட்டாரம் “டெய்லி மிரரு”க்கு தெரிவித்தது.
வர்த்தமானி
அந்த தகவல் வழங்கும் வட்டாரம் மேலும் டெய்லி மிரரிடம் விளக்கியது, கடந்த வாரம் வெளியான 2014 மார்ச் 21 ந் திகதியிட்ட அதி விசேட வர்த்தமானியில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட 16 அமைப்புகள் மற்றம் 422 தனிப்பட்டவர்கள் பற்றிய பெயர்களை அறிவதில் நந்தகோபனிடமிருந்து பெற்றுக்கொண்ட தகவல்கள் எதுவும் பயன்படுத்தப் படவில்லை என்று.
அந்த தகவலாளரின் கூற்றுப்படி,வாத்தமானி மார்ச்சில் வெளிவந்தாலும்கூட, வர்த்தமானியில் உள்ள விபரங்கள் யாவும் இந்த வருடம் பெப்ரவரி 25 ந் திகதியே இறுதி செய்யப்பட்டு விட்டதாம், நந்தகோபன் கைது செய்யப்பட்டது மார்ச் 6 ந் திகதிதான் என்று அந்த வட்டாரம் சுட்டிக்காட்டியது.
“தற்சமயம் நந்தகோபனிடம் இதுவரை முடிவுற்ற சம்பவங்கள் பற்றிய சுருக்கமான விசாரணை நடைபெற்று வருகிறது,அவருடைய மருத்துவ சிகிச்சையின் பின்னரே முறைப்படியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
அப்போது நாங்கள் பெறுமதியான பெருமளவு தகவல்களைப் பெறமுடியும் என எதிர்பார்க்கிறோம். நந்தகோபனிடம் இருந்து புதிய தகவல்களப் பெற்றுக் கொண்டதன் விளைவாக இன்னும் அதிகமான பெயர்களைக் கொண்ட ஒரு புதிய வர்த்தமானி அறிவித்தல்கூட வெளிவரலாம்”என அந்த தகவல் வட்டாரம் வலியுறுத்தியது.
நந்தகோபன் என்கிற சுப்பிரமணியம் கபிலன் யாழ்ப்பாணம் ஏழாலையில் பிறந்து வளர்ந்தவர்,மணியம் விதானை என பலராலும் பிரபலமாக அழைக்கப்பட்ட சுப்பிரமணியம் என்கிற கிராமசேவையாளரின் மகனாவார்.
அவர் 1969 நவம்பர் 4 ந்திதி பிறந்தவர். மிகவும் மதிப்பு வாய்ந்த கட்டுப்பாடான குடும்பத்தை சேர்ந்த இந்த இளைஞர் 1989ல் இந்திய இராணுவம் ஸ்ரீலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் நிலை கொண்டிருந்த சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ யில் இணைந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலிஓயா எனப்படும் மணலாறு பகுதியில் உள்ள இரகசியமான ஓரிடத்தில் பயிற்சி அளி;க்கப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ யினரில் பயிற்சியை முடித்து வெளியேறிய நாலாவது அணியில் நந்தகோபன் இடம்பெற்றிருந்தார்.
கஸ்ட்ரோ
இந்திய இராணுவம் 1990 ல் வெளியேறிய பின்னர், எல்.ரீ.ரீ.ஈ வடcastro1க்கை கைப்பற்றியது. நந்தகோபன் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப் பட்டார், அங்கு அவர், யாழ்ப்பாணத்துக்கு வெளியில் உள்ள தீவுப்பகுதிகள் மற்றும் சிறுதீவுகளுக்கு பொறுப்பாளராக இருந்த கஸ்ட்ரோ என்கிற வீரகத்தி மணிவண்ணனின் துணைத் தலைவர் மற்றும் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றினார்.
எனினும் இந்த தீவுப் பகுதிகள் 1990 ன் நடுப்பகுதியில் பாதுகாப்பு படையினரால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான இராணுவ நடவடிக்கை மூலமாக திரும்ப கைப்பற்றப் பட்டன.
அதன் பின்னர் நந்தகோபன் யாழ்ப்பாண குடாநாட்டுக்கு இடம்பெயர்ந்து கஸ்ட்ரோவின் குழுவில் ஒரு அங்கமாக கடமையாற்றத் தொடங்கினார். கஸ்ட்ரோ வல்வெட்டித்துறையை சேர்ந்தவரும் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார்.
1991ல் ஆனையிறவில் இருந்த இராணுவ முகாம்மீது எல்.ரீ.ரீ.ஈ தொடுத்த தாக்குதலின்போது அவர் காயமடைந்தார். 700க்கும் மேற்பட்ட எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் கொல்லப்பட்ட அந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது.
கஸ்ட்ரோகூட கடுமையான காயங்களுக்கு உள்ளாகியதன் விளைவாக கழுத்துக்கு கீழே இயக்கமற்ற நிலைக்கு உள்ளானார். அதன்பின் அவர் சக்கர நாற்காலியிலேயே முடக்கப் பட்டதுடன் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு கிளைகளுடனும் மற்றும் எல்.ரீ.ரீ.ஈ யின் கட்;டுப்பாட்டுப் பகுதிக்குள் வரும் வெளிநாட்டவர்களுடனும் தொடர்பு கொள்ளும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேபி என்கிற செல்வராசா பத்மநாதன் அந்த நேரத்தில் முக்கிய மூன்று செயற்பாடுகளாகிய ஆயுதக் கொள்வனவு, உலகளாவிய நிதி சேகரிப்பு,வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ கிளைகளின் நிருவாகம் ஆகியவற்றின் முழுப் பொறுப்பையும் வகித்து வந்தார்.
கேபிக்கும் கஸ்ட்ரோவுக்கும் இடையில் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ வலையமைப்பு சம்பந்தமான அதிகாரத்தில் அடிக்கடி ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் இருவரிடையேயும் அதிக பகை இருந்தது.
நந்தவனம்
இதன்விளைவாக எல்.ரீ.ரீ.ஈ, வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ நிருவாகத்தை கையாள்வதற்காக ஒரு தனியான எல்.ரீ.ரீ.ஈ பிரிவை கஸ்ட்ரோ தலைமையின் கீழ் உருவாக்கியது.
இந்த அலுவலகத்தின் கடமைகள் வெளிநாட்டு கிளைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மத்தியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் இடையேயான தொடர்புகளை ஒருங்கிணைப்பதும் அதை பராமரிப்பதுமாக இருந்தது.
அப்போது பெரும்பாலும் எல்.ரீ.ரீ.ஈயின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வடக்குக்கு வரும் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள தனி நபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு விசா போன்ற ஒரு பாஸ் வழங்கும் திட்டம் எல்.ரீ.ரீ.ஈயால் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
நந்தவனம் என்கிற பெயரில் ஒரு தனியான காரியாலயம் வெளிநாட்டு கிளைகள் மற்றும் புலம்பெயர்ந்த அங்கத்தவர்கள் தொடர்பான விடயங்களை கவனிப்பதற்காக அமைக்கப்பட்டது.
கஸ்ட்ரோவின் கீழ நேரடிக் கடமையில் ஈடுபட்டிருந்த நந்தகோபன் அந்தக் காரியாலயத்தின் நாளாந்த பணிகளுக்கு பொறுப்பாக இருந்தார். 2002ல் கேபி அவரது பதவியில் இருந்து அகற்றப் பட்டதின் பின்னர் கஸ்ட்ரோவின் பங்கு ஏற்றம் பெற ஆரம்பித்தது. கேபியின் வலையமைப்பை கஸ்ட்ரோ தகர்த்து, அந்த இடங்களுக்கு தனது விசுவாசிகளையும் மற்றும் ஏவலர்களையும் நியமத்தார்.
2002 ல் நோர்வேயின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட யுத்த நிறுத்தம் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான புலம்பெயர் தமிழர்கள் வடக்குக்கு வருகை தரலானார்கள்.
இதன் விளைவாக கஸ்ட்ரோவின் திணைக்களம், தனியாக தனது சொந்தப் புலனாய்வு பிரிவை ஆரம்பிக்கும் அளவுக்கு விரிவாக்கம் பெற்றது. நந்தகோபன் அதற்கு பொறுப்பாக இருந்தார். அநேக வெளிநாட்டு தமிழர்கள் நந்தவனம் காரியாலயத்தில் வைத்து அவரால் விசாரிக்கப்பட்டார்கள்.
காயமடைதல்
யுத்த நிறுத்தம் முறிவடைந்து 2005ல் யுத்தம் விரிவடைந்த பின்னரும் நந்தகோபன் வெளிநாட்டு நிருவாகப் பிரிவில் கஸ்ட்ரோவின் கீழ் தொடர்ந்தும் பணியாற்றி வந்தார்.
ஒரு கட்டத்தில் வன்னியில் வைத்து ஷெல் தாக்குதலில் அவர் காயமடைந்தார். மன்னார் கடல்வழியாக படகு மூலமாக நந்தகோபன் இரகசியமாக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மருத்துவ சிகிச்சைகள் பெற்றதின் பின்னர் அவர் தாய்லாந்துக்கு இடம்பெயர்ந்ததுடன் யு.என்.எச்.சி.ஆர் இல் தன்னை ஒரு அகதியாகவும் பதிவு செய்து கொண்டார். தனது மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் ஐரோப்பாவிற்கு இடம் பெயர்வதற்கான ஒழுங்குகளையும் அவர் செய்து முடித்தார்.
ஒரு கைத்தடியின் உதவியுடன் ஓரளவு நடமாடக்கூடிய அளவிற்கு காயங்கள் குணமாகியதும், நந்தகோபன் போலிக் கடவுச்சீட்டுகளைப் பெற்று தென்கிழக்கு ஆசிய நாடுகள் இடையே பறக்கலானார்.
இதற்கிடையில் நெடியவன் எல்.ரீ.ரீ.ஈயின் வெளிநாட்டு கிளைகள் மற்றும் முன்னணிகளின் பொறுப்புகளை கைப்பற்றிக் கொண்டார்.நோர்வே அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அவரது செயற்பாட்டு திறன் முடக்கப்பட்டதினால் நெடியவன், வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ செயற்பாடுகளின் நிருவாகம் மற்றும் ஒருங்கிணைப்பு என்பனவற்றுக்கு இரும்பொறை மற்றும் நந்தகோபன் ஆகியோரில் தங்கிருக்க ஆரம்பித்தார்.
தற்செயலான ஒரு விடயமாகச சொன்னால் புலிகள் இயக்கத்தில் நந்தகோபன் நெடியவனைக் காட்டிலும் மிகவும் மூத்த அங்கத்தவராவார், ஆனால்; வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ அமைப்பில் நந்தகோபன் நெடியவனின் கீழ் துணைத் தலைவராக கடமையாற்றினார்.
பிரச்சாரம்
நியுசிலாந்து பிரஜையாக இருக்கும் இரும்பொறை ஐரோப்பாவில் செயலாற்றிய அதேவேளை நந்தகோபன் தென்கிழக்கு ஆசியாவிலிருந்து செயற்படலானார்.
அவர் பிரச்சாரத்தில் அதிக கவனம் செலுத்தியதுடன் உலகளாவிய புலம்பெயர்ந்தோhர் இடையேயள்ள ஊடக அமைப்புகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோருடன் தீவிர தொடர்புகளை கொண்டிருந்தார்.
தமிழ்நாடு மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய இடங்களிலுள்ள சில தமிழ் அரசியல்வாதிகளுடனும் மற்றும் ஊடகவியலாளர்களுடனும்கூட அவர் தொடர்புகளைக் கொண்டிருந்தார்.
நந்தகோபன் தனது குடும்பத்துடன் ஒன்றுகூடுவதற்கு திட்டமிட்டு மலேசியாவிலிருந்து ஈரான் வழியாக ஐரோப்பாவுக்கு பயணித்த வேளையில்தான் பிடிபட்டு ஸ்ரீலங்காவுக்கு அனுப்பப்பட்டார்.
முன்னர் குறிப்பட்டது போல,உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்தோரிடையே உள்ள எல்.ரீ.ரீ.ஈ கிளைகள் மற்றும் முன்னணிகளின் தற்போதைய கட்டமைப்புகள், நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் பற்றிய தகவல்களைத் தரக்கூடிய ஒரு சுரங்கமாகவே அவர் கருதப்படுகிறார்.
ஸ்ரீலங்கா அதிகாரிகள் நந்தகோபனிடத்தில் ஒரு அங்குலிமாலா அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள்.பௌத்தர்களால் நன்கு அறியப்பட்ட அங்குலிமாலா ஒரு மோசான கொலைகாரனாக இருந்தான், அவன் ஒரு உண்மையான மாற்றத்தின் காரணமாக மீட்கப்பட்டதுடன், புத்தரின் போதனைகளின் மீட்பு சக்தி மற்றும் ஒருவரின் பின்புலத்துக்கு அப்பாற்பட்ட ஆன்மீக முன்னேற்றத்தின் உலகளாவிய மனித ஆற்றல் என்பனவற்றுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறான்.
இந்தக் கதையின்படி அங்குலிமாலா சொல்வது “சில கைதிகள் ஒரு பிரம்பால் அல்லது ஒரு கொக்கியால் அல்லது ஒரு சவுக்கால் வழங்கப்படும் தண்டனை மூலம் அடக்கப் படுகிறார்கள். நான், ஒரு பிரம்போ அல்லது ஆயதமோ இல்லாமல் கருணைமிக்க புத்தரின் அன்பான வார்த்தைகளால் அடங்கிப்போனேன்” என்று.
அங்குலிமாலா
ஸ்ரீலங்கா அதிகாரிகளின் கூற்றுப்படி இந்த அங்குலிமாலா அணுகுமுறை கைதாகிய சில முக்கிய எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களிடத்தல் ஏற்கனவே பின்பற்றப் பட்டிருக்கிறது.
அவர்களில் பிரதனமானவர் கேபி என்கிற செல்வராசா பத்மநாதன், புலிகளின் உயர்மட்டத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்குப் பின்னர் ஒரு குறுகிய காலம் கேபி எல்.ரீ.ரீ.ஈ தலைவராக இருந்துள்ளார்.
அவரை தண்டிப்பதற்குப் பதிலாக ஸ்ரீலங்கா அதிகாரிகள், அவரை சமுதாயத்துக்கு சமூக சேவைகள் செய்யவிட்டதின் மூலமாக அவர் தன்னைத்தானே மீட்பதற்கு வழி செய்தள்ளார்கள்.
கேபி இப்போது சுமார் 250 க்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்காக மூன்று அனாதை இல்லங்களை முத்தையன்கட்டு, முள்ளியவளை,மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் நடத்தி வருகிறார், அவற்றின் பெயர்கள் முறையே அன்பு இல்லம், பாரதி இல்லம், மற்றும் செஞ்சோலை ஆகும்.
நன்கு அறியப்படாத மற்றொரு உதாரணம், சுப்பிரமணியம் சிவகுமார் என்கிற மலேசியா ராஜன் ஆவார், அவர் மலேசியாவில் எல்.ரீ.ரீ.ஈயின் பொறுப்பாளராக இருந்தவர்.
முன்பு அவர் கண்ணன் மற்றும் சாந்தலிங்கம் எனும் பெயர்களில் கொழும்பில் எல்.ரீ.ரீ.ஈ புலனாய்வு செயற்பாட்டாளராக கடமையாற்றியவர். மலேசியா ராஜன் வெளிநாடுகளில் இடம்பெற்ற ஆயுத கொள்வனவுகளிலும் தொடர்பு கொண்டிருந்தார்.
அவர் 2010ல் மலேசியாவில் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுவரப்பட்டார். இன்று அவர் கிட்டத்தட்ட ஒரு சுதந்திரமான மனிதராக கொழும்பின் புறநகர் பகுதியில் அமைதியான ஒரு வாழ்க்கைய நடத்தி வருகிறார்.
சுவராஸ்யமான விடயமாக மலேசிய அதிகாரிகள், முன்னர் கேபி, மலேசியா ராஜன் ஆகியோரையும் மற்றும் இப்போது நந்தகோபனையும் கைது செய்து ஒப்படைப்பதில் முக்கியமான பங்கினை வகித்துள்ளார்கள்.
அதேபோல அங்குலிமாலா அணுகுமுறை கேபி மற்றும் ராஜன் விடயத்தில் பின்பற்றப்பட்டதும் இப்போது நந்தகோபன் விடயத்தில் பின்பற்றப்படுவதற்கான சாத்தியம் இருப்பதும் சுவராஸ்யமானதுதான். இந்த மூன்று பேரும் மலேசிய அதிகாரிகளின் உதவியினால் ஒப்படைக்கப் பட்டவர்கள்.
நலமூட்டல்
அதிகாரப்பூர்வமான தகவல்களின்படி, தவறுக்கு வருந்தும் எல்.ரீ.ரீ.ஈ தலைவர்களை வஞ்சம் தீர்க்க எண்ணாமல் அவர்களுக்கு நலமூட்டும் இத்தகைய அணுகுமுறையை பின்பற்றும் செய்கை பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் சிந்தனையில் உதயமான ஒன்று. இந்தக் கொள்கைக்கு ஒப்புதலளித்து அமல்படுத்த உத்தரவிட்டவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ.
வரும் நாட்களில் வெளிநாட்டு எல்.ரீ.ரீ.ஈ பற்றி பெறுமதியான பல தகவல்களை நந்தகோபன் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய வெளிப்படுத்தல்களின் பின்விளைவுகளை எதிர்காலத்தில் உணரக்கூடிய சாத்தியம் உள்ளது.
– டி.பி.எஸ்.ஜெயராஜ்
தேனீ மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்