தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் பிரசாரம் நிறைவடைய இன்னும் 3 நாள்களே இருப்பதால் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தொடர்ந்து மக்களைச் சந்தித்து வாக்குகளைக் கேட்டு வருகின்றன.
இதுதவிர, அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவற்றின் தலைவர்களும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதில், அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரத்தையும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களையும் தேர்தல் ஆணையம் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
குரல் பதிவு கொடுத்த தலைவலி
இதன் ஒரு பகுதியாக, அண்மையில் திருவண்ணாமலை தி.மு.க மாவட்டச் செயலாளர் எ.வ.வேலுவின் வீடு, மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவாளர் ஒருவரின் வீடு, நிதி நிறுவனங்கள் என வருமான வரித்துறையின் சோதனை அரங்கேறியது.
இது தி.மு.க தரப்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பேட்டியளித்த தி.மு.க செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், `தி.மு.கவின் வெற்றியைத் தடுப்பதற்காக வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்துகிறார்கள். இதன் மூலம் தி.மு.கவின் பிரசாரத்தை தடுக்க நினைக்கின்றனர்’ என கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
அதேநேரம், தி.மு.க தொடர்பான விமர்சனங்களை மையப்படுத்தி அ.தி.மு.க மேற்கொண்டு வரும் புதிய ரக விளம்பரங்களும் தி.மு.க தரப்புக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, `தாய்மார்கள் குறித்து ஆ.ராசா பேசியது சரியா?’ என செல்போன் மூலம் குரல் அழைப்புப் பதிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதனை எதிர்பாராத தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, `தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி, தனிப்பட்ட வாக்காளர்களின் செல்போனுக்கு குரல் பதிவு மூலம் பிரசார (IVRS) அழைப்புகளை அ.தி.மு.க அனுப்புகிறது.
அந்தக் குரல் பதிவு மூலம் தி.மு.க.வுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அரசியல் நிகழ்வைத் திரித்துப் பரப்பப்படுகிறது.
மேலே கூறப்பட்ட ஐ.வி.ஆர்.எஸ் (செல்போன் குரல் பதிவு) அழைப்புகள் மேற்கொள்ளப்படும் கால் சென்டர் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட வேண்டும். அவற்றின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்துக்குப் புகார் மனுவை அனுப்பியுள்ளார்.
சேலத்தில் மட்டும் ரூ.44 கோடி!
மேலும், தி.மு.க தரப்பு கொடுக்கும் புகார்களின்பேரில் தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையாளர், மேற்கு மண்டல ஐ.ஜி ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டதில் ஆளும் தரப்பு சற்று அதிர்ச்சியில் உள்ளது.
இருப்பினும், பண விநியோகம் தொடர்பான புகாருக்குப் பதில் அளித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ` தமிழ்நாட்டில் இதுவரையில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் 319 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகப்படியாக சேலம் மாவட்டத்தில் 44 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகார்களின் பேரில் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், கூகுள் பே மூலம் பண விநியோகம், டோக்கன் சிஸ்டம், பெண் வாக்காளர்களுக்கு 2 கிராமில் தங்க மூக்குத்தி என தேர்தல் களத்தை ஆளும்கட்சி இயல்பாக எதிர்கொள்வதாக தி.மு.க தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுதொடர்பாக பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “ தேர்தல் ஆணையம் இன்னும் சற்று கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் கொடுக்கும் புகார்களை உடனுக்குடன் அவர்கள் கவனித்தாலே போதும்.
பொதுமக்களும் பல்வேறு குறைகளைத் தெரிவித்து வருகின்றனர். யார் புகார் தெரிவித்தாலும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை உதவியுடன்தான் அனைத்தும் நடக்கிறது” என்கிறார்.
பரிமாற்றத்துக்கு போலீஸ் உதவியா?
மேலும், “பல இடங்களில் வெளிப்படையாகவே பணம் கொடுக்கிறார்கள். இதனை அரசியல் கட்சிகளால் நேரடியாகச் சென்று தடுக்க முடியாது. ஏனென்றால், பணம் கொடுப்பதைத் தடுத்தால் வேறு மாதிரியான விளைவுகள் ஏற்படும்.
தேர்தல் ஆணையமும் ஓரளவு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதற்கு முன்பே ஆளும்கட்சி அனைத்தையும் செய்து முடித்துவிட்டது. எங்களைத் திருப்திப்படுத்துவதற்காகத்தான் சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். போலீஸையும் தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை” என்கிறார்.
“பணம் கைப்பற்றப்படுவதையே தேர்தல் ஆணையத்தின் தோல்வியாகத்தான் பார்க்கிறேன். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ரொக்கமாக இவ்வளவு பணம் எப்படி வெளியில் வருகிறது எனத் தெரியவில்லை.
பொதுவாக, 50,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனையை மேற்கொள்ள பான் கார்டு அவசியமானதாக இருக்கிறது. இதையும் மீறி இவ்வளவு ரொக்கம் எங்கே பதுக்கப்பட்டிருந்தது என்பதை நிதித்துறை அமைச்சகம் ஆராய வேண்டும். ஆனால், அதனைக் கண்காணிக்கத் தவறிவிட்டது.
தற்போது வரையில் 350 கோடி ரூபாய்கள் பிடிபட்டுள்ளன. வெளியில் வராத பணம் இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதையும் கணக்கிட்டால் 5 சதவிகிதமான தொகை மட்டுமே தற்போது பிடிபட்டுள்ளது.
இதனை நிதி அமைச்சகத்தின் தோல்வியாகவே பார்க்கிறேன்” என விவரித்தார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில துணைத் தலைவர் ஆ.கோபண்ணா.
அ.தி.மு.க மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் ஆவடிக்குமார், “அ.தி.மு.கவினர் உள்பட சிலரிடம் இருந்துகூட பணம் கைப்பற்றப்பட்டதாகத் தகவல் வெளியானது.
போலீஸ் துணையோடு பணத்தைக் கடத்தியிருந்தால் அ.தி.மு.கவினர் ஏன் பிடிபட வேண்டும். தி.மு.கவினர் தங்களுக்குப் பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கின்றனர்.
தவறு தி.மு.க மீதுதான்!
இந்தத் தேர்தலில் பணத்தை நம்பி தி.மு.க களத்தில் நிற்கிறது. அவர்களது பிரசாரத்தை கவனித்துக் கொள்வதற்காகவே பல கோடி ரூபாய்களை இறைத்து ஆள்களைக் கூட்டி வந்துள்ளனர்.
முதல்வரும் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் மக்களை நம்பி வாக்கு சேகரித்து வருகின்றனர். தி.மு.கவினர்தான் தொடர்ந்து தவறுகளைச் செய்கின்றனர். இவர்கள் அளிக்கும் புகார்கள் எல்லாம் தோல்வி பயத்தில் செய்யும் காரியங்கள்தான். இதன்மூலம், எங்களைக் குறைகூறி மக்களை திசை திருப்புகின்றனர்” என்கிறார் கொதிப்புடன்.
`தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சரியா?’ என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பேசினோம். “ தேர்தல் ஆணையம் சரியாகச் செயல்படாமல் இருப்பதாகவே நான் பார்க்கிறேன்.
தற்போது வரையில் பிடிபட்டுள்ள பணம் என்பது சிறு துளிதான். இது உண்மையாகவே பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணம் என்று சொல்ல முடியாது.
ஆர்.கே.நகர், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் உள்பட பல தொகுதிகளில் தேர்தலின்போது பணம் விநியோகம் செய்ததாக சிலரைக் கைது செய்தார்கள். அவர்கள் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
தடுப்பு நடவடிக்கை சரிதானா?
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து பணம் கொடுத்ததற்கான பட்டியலையே எடுத்தார்கள். அதன் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? சொல்லப்போனால், சட்டமன்ற தேர்தலுக்கு முன்னரே அனைத்து தொகுதிகளுக்கும் பணம் அனுப்பப்பட்டு விட்டது.
தி.மு.கவை விட அ.தி.மு.க அதிகப்படியாக பணம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. ஆணையமும் கடந்த காலங்களில் பணி விநியோக குற்றச்சாட்டின்பேரில் யாருக்கும் தண்டனை பெற்றுத் தந்தது இல்லை. எனவே, இதனை ஒரு தடுப்பு நடவடிக்கையாக நான் பார்க்கவில்லை” என்கிறார்.
தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் எளிய வேட்பாளர்கள் பலரும், பிரதானக் கட்சிகளின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சுணங்கியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் தடுப்பு நடவடிக்கைளால் பெரும் தொகை பிடிபட்டாலும் புதிய புதிய யுக்திகளால் பணவிநியோகம் கட்டுக்கடங்காமல் செல்கிறது. இருப்பினும், பெரும் சவாலுடன் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் தேர்தல் ஆணையம் தவித்துக் கொண்டிருக்கிறது.