“பல ஆயிரம் போராளிகளினதும், பொது மக்களினதும் மரணங்களோடு.. தமிழ் மக்களினால் நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் முடிவுக்கு வந்தது!!
அன்பார்ந்த வாசகர்களே!
இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னர் மிகவும் கறை படிந்த வரலாறு விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் கொடுமை நிறைந்த மரணத்துடன் முடிவடைந்துள்ளது.
இம் மரணம் இலங்கை ஆட்சியாளரினதும், ராணுவத்தினதும் அடிப்படை எண்ணங்களை மிகவும் தெளிவாக நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களுக்கும், சர்வதேசத்திற்கும் உணர்த்தியுள்ளது.
பல நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் மக்களின் ஜனநாயக உரிமைக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் வழிமுறைகள் தவறாக இருக்கலாம்.
அவை அவர்களுக்கு முன்னால் காணப்பட்ட அரசியல் தொடர்ச்சியின் பின்புலத்திலிருந்தே நோக்கப்பட வேண்டும்.
வரலாறு இவற்றைப் பாரபட்சமின்றி எழுதப்பட வேண்டும்.
விடுதலைப்புலிகள் பல ஆயிரம் போராளிகளினதும், பொது மக்களினதும் மரணங்களுக்கு காரணமாக இருந்த நிலையில், இறுதி நேரத்தில் தமது உயிர்களைப் பாதுகாக்க வெள்ளைக் கொடியுடன் சென்றமை விடுதலைப் போராட்டத்தினை அவமானப்படுத்தியதா?
அல்லது போராட்டத்தினை இன்னொரு நாள் தொடரலாம் என எண்ணி சரணடைய உத்தேசித்த நிலையில் பௌத்த சிங்கள தேசியவாதம் வேரோடு கெல்லி எறிந்ததா? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.
இவை தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைப் போராட்டத்தின் ஒட்டு மொத்தமான வரலாற்றினூடாக, தம் உரிமை மீது மக்கள் கொண்டுள்ள பற்றுறுதியின் வெளிப்பாட்டின் அடிப்படைகளோடு பார்க்கப்பட வேண்டுமே தவிர அவை ஓர் இயக்கத்தின் வரலாறாக தனிமைப்படுத்த முடியாது.
உலகில் இலங்கையைப் போல பல சிறிய தீவுகள் இருந்த போதிலும் சிறிய தீவான இலங்கை பல விதங்களில் உலகில் அறியப்பட்டது.
தமிழ் மக்களினால் நடத்தப்பட்ட வீரம் செறிந்த போராட்டம் அவர்களின் ஜனநாயக உரிமைக்கான வேட்கையை உலகெங்கிலும் பறை சாற்றியது.
இப் பின்னணியில் விடுதலைப் புலிகளின் தலைவரின் மரணத்தின் பின்னர், அவரினதும் அவரது சகாக்களினதும் மரணங்கள் குறித்த செய்திகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்தன.
சரணாகதி அடைந்தவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் எனவும், ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு அமைய வெள்ளைக் கொடியுடன் சென்றால் ராணுவம் அவர்களை முறைப்படி ஏற்றுக் கொள்ளும் எனவும் அரச தரப்பினர் அடிக்கடி உறுதி செய்த போதிலும் அவை காப்பாற்றப்படவில்லை.
பதிலாக அங்கு பாரிய போர்க்குற்றம் இடம்பெற்றுள்ளதாக உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் குற்றச் சாட்டுகள் எழுந்தன.
2013ம் ஆண்டளவில் பிரபாகரனின் 12 வயதான மகன் பாலச்சந்திரனின் புகைப் படங்கள் வெளியாகியிருந்தன.
அதனைத் தொடர்ந்து அவர் ராணுவத்தின் பாதுகாப்பில் இருப்பதாக 2009ம் மே 19ம் திகதி வரை புகைப்படங்களுடன் கூடிய செய்திகள் வெளியாகின.
ஆனால் அவை வெளியாகி சில மணி நேரங்களில் நெஞ்சில் 5 துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் பிணமாக இருப்பது தெரிய வந்தது.
இம் மரணத்திற்குப் பிரதான காரணம் ராணுவம் என அச் சிறுவனின் புகைப்பட சாட்சியங்களடன் பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டியதோடு அம் மரணம் குறித்து சர்வதேச விசாரணையையும் கோரின.
புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் உட்பட 350 இற்கு மேற்பட்ட போராளிகளின் சடலங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்டதற்கான சாட்சியமாக ராணுவம் அதனை உணர்த்தியது.
ஆனால் இம் மரணங்கள் குறித்து வெளியான செய்திகள் முக்கியமானவை.
போராளிகளில் கணிசமான தொகையினர் நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளின் ஏற்பாடுகளுக்கு அமைய சரணடையச் சென்றுள்ளனர்.
இதில் எரிக் சோல்கெய்ம், நோர்வே தூதுவராயலய அதிகாரிகள் அடங்குவர். இவர்கள் சரணடையும் ஏற்பாடுகள் குறித்து வெளியுறவுச் செயலர் பாலித ஹோகனவுடன் பேசியிருந்தனர்.
இச் சரணடையும் நிகழ்வில் ஐ நா செயலரின் விசேட பிரதிநிதியாகிய விஜய் நம்பியார் பிரசன்னமாக இருத்தல் விரும்பத் தக்கது என நடேசன் வற்புறுத்தியிருந்தார்.
( Marie Colvin )
இச் சம்பவத்தை அமெரிக்க பத்திரிகையாளர் மேரி கொல்வின் ( Marie Colvin ) உறுதி செய்திருந்தார். ஜனாதிபதி மகிந்தவும் அவர்களது உயிர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
இதன் பிரகாரம் 2009ம் ஆண்டு மே 18ம் திகதி நடேசன், புலித்தேவன் தலைமையில் ஆண், பெண் உட்பட சுமார் 12 பேர் வெள்ளைக் கொடிகளைத் தாங்கியபடி ராணுவத்தை நோக்கிச் சென்றுள்ளனர்.
அங்கிருந்து தப்பிய ஒருவரின் சாட்சியத்தின்படி வெள்ளைக் கொடியோடு அங்கு சென்ற அவர்கள் மீது சரமாரியான துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
அவ் வேளையில் நடேசனின் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த மனைவி சரணடைய வந்தவர்களை நோக்கிச் சுடுகிறீர்களே எனக் கேட்டபோது இறுதியில் அவரும் சுடப்பட்டு மரணமானார்.
ராணுவத்திடம் சரணடையச் சென்றவர்களில் பலர் இவ்வாறான பரிதாபச் சாவை அடைந்த போதிலும், சிலரின் முடிவுகள் அதை விட மோசமாக அமைந்தன.
உதாரணமாக நடேசன், புலித்தேவன் ஆகியோர் ராணுவத்திடம் சென்ற போது அவர்கள் வரவேற்கப்பட்டு தேநீர் வழங்கி உபசரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் அவர்கள் மிக அண்மையில் வைத்துச் சுடப்பட்டுள்ளனர்.
இவை பின்னர் வெளியாகிய புகைப்படங்கள், கண்கண்ட சாட்சியங்கள் மூலமாகவும் வெளியாகின. இவற்றை முழமையாக உறுதி செய்வதற்கான சாட்சியங்கள் இருக்கவில்லை.
அத்துடன் இச் சம்பவங்களை ராணுவம் முழுமையாக மறுத்திருந்தமை இவை ஏற்கெனவே மிகவும் திட்டமிடப்பட்டவை என்பதை உறுதி செய்தன.
இச் சம்பவங்கள் குறித்து அரச தரப்புச் செய்திகளும் முரண்பாடுகளை உணர்த்தின. உதாரணமாக புலிகள் சரணடைவது குறித்து எந்த முன் ஏற்பாடுகளும் இருக்கவில்லை என வெளியுறவுச் செயலர் பாலித ஹோகன மறுத்து வந்தார்.
ஆனால் இப் பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டிருந்தமைக்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன. அது மட்டுமல்லாமல் ராணுவத்திடம் சரணடைவதை எதிர்த்த சக போராளிகள் தமது தலைவர்களை புற முதுகில் சுட்டார்கள் எனவும் அரச தரப்புக் கூறி வந்தது.
வெள்ளைக் கொடி சம்பந்தமாக சமீபத்தில் வெளியாகிய அறிக்கை ஒன்றில் மேலும் பல விபரங்கள் வெளியாகியிருந்தன.
குறிப்பாக 18ம் திகதி சரணடைந்த போராளிகள் நூற்றிற்கு மேற்பட்ட புலிகளின் முக்கிய தலைவர்கள் என்போர் எவ்வாறு திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்ற விபரங்கள் வெளியாகின.
அச் சாட்சியங்களின் பிரகாரம் பார்க்கையில் புலித் தலைமை சரணடைவதை முதலில் ஏற்றுக் கொண்டபின், அனைவரையும் ஒட்டு மொத்தமாக தீர்த்துக்கட்டும் திட்டத்தினை உயர் மட்டம் ஏற்றுக்கொண்டிருந்தது.
நடேசன், புலித்தேவன் போன்றோர் சரணடைவதற்கான திட்டங்கள் அனைத்தும் மிகவும் விபரமான ஒப்புதல்களுடன் அதாவது மகிந்த, பஸில், கோதபய, பாலித ஹோகன ஆகியோரும் ஏற்றுக்கொண்டிருந்தனர். எனவே கொலைத் திட்டங்களையும் அவர்கள் நன்கே தெரிந்திருந்தனர்.
போர்க் குற்றம் தொடர்பான தேசிய அல்லது சர்வதேச அளவிலான விசாரணைகள் நடைபெறுமாயின் இச் சம்பவங்கள் மேலும் ஆழமாக துலங்கும் வாய்ப்புகள் உண்டு.
இந்த நிகழ்வுகளின் விசித்திரமான அம்சம் என்னவெனில் நந்திக் கடல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சடலங்களில் பிரபாகரனை அடையாளம் காட்டுவதற்கு கருணாவும், தயா மாஸ்டரும் அழைக்கப்பட்டமையாகும்.
19ம் திகதி மாலையே பிரபாகரனின் மரணம் குறித்த உத்தியோகபூர்வ செய்தி வெளியாகியது. இருப்பினும் இதனை அதுவும் பிரபாகரனின் உடல் சாட்சியாக வெளிப்படுத்தப்பட்ட போதிலும் அவர் உயிருடன் இன்னமும் இருப்பதாக நம்புபவர்கள் புலம்பெயர் தமிழர்களே. இவர்கள் இன்னமும் இவ்வாறாக எண்ணுவது புதுமையானது.
19ம் திகதி இலங்கைப் பாராளுமன்றத்தில் தனது உத்தியோகபூர்வ வெற்றிப் பேச்சை மகிந்த வழங்கினார். தனது சொந்த மக்களை எவ்வாறு பராமரிக்க வேண்டுமென எவரும் எமக்கு ஆலோசனை தரத் தேவையில்லை.
உள்நாட்டு அரசியல் பிரச்சனையைத் தீர்க்க வெளிநாட்டவர்களின் பரிசோதனை முயற்சி தேவையில்லை. இலங்கையில் இனக் குழுமம் அல்லது சிறுபான்மையினர் பிரச்சனை என்ற ஒன்று இல்லை. இலங்கையில் ஒரு சில தேச விரோத சக்திகளைத் தவிர ஏனையோர் தேச பக்தர்கள் என்றார்.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரை குறித்து யாழ். பல்கலைக் கழக மனித உரிமை ஆசிரியர் அமைப்பு பின்வருமாறு தெரிவித்திருந்தது.
….. தேசத்தின் உயர்வு குறித்து வழமையான வார்த்தைப் பிரயோகங்கள் காணப்பட்ட போதிலும் நம்பிக்கை தரும் செய்திகள் எதுவுமில்லை.
உள் நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வு எனக் கூறிய போதிலும் நாட்டின் பிரச்சனை தொடர்பாக தனது புரிதல் பற்றியோ அல்லது அவற்றைத் தாம் எவ்வாறு அணுகப்போவது? பற்றியோ எதுவும் இல்லை. பதிலாக இறக்குமதி செய்யப்பட்ட தீர்வுகள் என்ற போர்வையில் வெளிநாடுகளுக்கு எதிரான கதையாடலே இருந்தது.
உள் நாட்டுத் தீர்வினை எட்டுவதில் சிங்கள பௌத்த பேரினவாதம் எப்போதும் தடையாக இருந்திருப்பதை ஏற்றுக்கொள்ளாமல், இதனை முற்றாக மறுதலிக்காமல் தீர்வினை நோக்கிச் செல்ல முடியாது. அவரது உரையில் நல்லிணக்கத்திற்கான எந்த யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை.
சகல தேசங்களும், அதன் மக்களும் பொது அனுபவத்தையும், வரலாற்றினையும் பகிர்ந்து கொள்கின்றனர். உள் நாட்டுத் தீர்வு என இந்த அரசு கூறுவது தனது பொறுப்புகளைத் தட்டிக் கழித்து, இறுமாப்புடன் புரிந்துகொள்ள மறுக்கும் உட் போக்கினை மறைக்கும் திரையாக பயன்படுத்தப்படுகிறது.
உள் நாட்டுத் தீர்வு எனக் கூறுவது கடந்த 6 தசாப்தங்களுக்கு மேலாக இடம்பெற்ற வரலாறு பற்றிய அறியாமை, பெரும்பான்மைச் சிந்தனையில் ஆழப் புதைந்திருக்கும் இனக் கலவரத்தைத் தூண்டும் கோட்பாடு போன்றன மூன்றாம் தர வரலாற்றை நோக்கிய பாதையாகும்.
சிறுபான்மையினர் என்போர் இல்லை, சகலரும் சமம் எனக் கூறிச் செல்வது அரச வம்சத்தினரின் பிரகடனமாக அவர் எண்ணலாம்.
அத்துடன் அவர் தனது உரையின் போது நாட்டில் இரு தரப்பு மக்களே இருப்பதாகவும், அவர்களில் தேசத்தை நேசிப்பவர்களாகக் கூறி அவர்களை உயர்த்தியும், ஏனையோரைத் தாழ்த்தியும் கூறுகிறார்.
ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள் தாமாகவே விரும்பி தமது உயிர்களை ஈந்தார்கள். அவர்கள் தமது நாட்டை நேசிக்காமல் அல்ல. பதிலாக தமது நாடு தமிழீழமே என அவர்கள் நம்பினார்கள்.
தமிழ்க் குடும்பங்களும், சமூகங்களும் எப்போது தமது எதிர்காலம் இலங்கைக்குள் என எண்ணுகிறார்களோ, அப்போதுதான் தாம் இழந்த உடன் பிறப்பகளின் தியாகங்களுக்கு உண்மையான அர்த்தத்தினைப் பெறுவார்கள்.
நீதியான அரசியல் தீர்வின் மூலம் அம் மக்கள் சமத்துவத்தையும், கௌரவத்தினையும் பெற வேண்டும். இந்த மக்கள் தம்மை இலங்கையர் என எண்ணிச் செயற்படுவதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஜனாதிபதியிடம் அவ்வாறான உணர்வுகள் போதுமானதாக இல்லை எனக் கருதுகிறோம்…..
இவ்வாறு பல்கலைக்கழக ஆசிரியர் மனித உரிமை அமைப்பு எழுதியிருந்தது.
வாசகர்களே!
இலங்கையின் வரலாற்றிலே மிகவும் இரத்தம் தோய்ந்த பயணத்தின் விபரங்களை நோர்வே தரப்பினர் தந்ததை இதுவரை படித்தீர்கள். இப் பயணம் இன்னமும் முடியவில்லை. மேலும் பல உயிர்களைக் காவு கொள்ளும் அரசியல் இன்னமும் விரிந்து செல்கிறது. இவை தடுக்கப்படாவிடில் பல முள்ளிவாய்க்கால்களை சந்திக்க நேரிடும்.
–முற்றும்–
இக்கட்டுரையானது Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்