ஒரு தாய்க்கும், அவரின் மகளுக்கும் ஒரே நாளில் ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த 53 வயதான பெண்ணொருவரும் அவரின் 27 வயதான மகளும் உத்தரபிரதேச மாநிலத்தில் அண்மையில் திருமணம் செய்துகொண்டனர்.
உத்தரபிதேச மாநில முதலமைச்சரின் ஏற்பாட்டில் அண்மையில் ஒரே இடத்தில் 63 ஜோடிகளுக்குத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.
பீஹார் எல்லை அருகிலுள்ள கோரக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற இத்திருமண வைபவத்தில் 53 வயதான பேலி தேவி எனும் பெண் 2 ஆவது திருமணம் செய்துகொண்ட செய்துகொண்டார். அதே வைபவத்தில் அவரின் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பேலி தேவியின் கணவர் ஹரிஹர் 25 வருடங்களுக்கு முன்னர் இறந்தார்.
அப்போது பேலி தேவி 28 வயதானவராக இருந்தபோதிலும் மீண்டும் திருமணம் செய்துகொள்ள அவர் சம்மதிக்கவில்லை.
விதவைகளின் திருமணம் குறித்த சமூக அபிப்பிராயங்கள் உட்பட பல்வேறு காரணங்கள் இதற்கு இருந்தன.
இதனால் 3 மகள்கள், 2 மகன்களை தானே வளர்க்க வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது’ எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் அவர், தனது மறைந்த கணவரின் இளைய சகோதரரான ஜெகதீஸை பேலி தேவி திருமணம் செய்துகொண்டார்.
55 வயதான ஜெகதீஸ் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருந்ததுடன், தனது மூத்த சகோதரர் இறந்த பின்னர், அவரின் குடும்பத்தினருக்கு உதவியாகவும் இருந்து வந்துள்ளார்
‘எனது பிள்ளைகளின் சம்மதத்தின் பின்னரே இத்திருமணத்துக்கு நான் இணங்கினேன்.
அவர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளளனர். எனது மகள்களும் மகள்கள் இருவரும் ஏற்கெனவே திருமணம் செய்துவிட்டனர்.
எனவே எனது இளைய மகளின் திருமணத்துடன், எனது மைத்துனரை திருமணம் செய்து மீண்டும் புதிய வாழ்க்கையைத் தொடங்க நான் தீர்மானித்தேன்’ என செய்தியாளர்களிடம் பேலி தேவி கூறினார்.
பேலி தேவியின் மகளான இந்து குமாரி உள்ளூரைச் சேர்ந்த ராகுல் குமார் எனும் 29 வயது இளைஞரை இவ்வைபவத்தில் திருமணம் செய்துகொண்டார்.
‘எனது தாய் தனது வாழ்க்கையைத் துணையுடன் இணைந்துகொண்டமை எனக்கு மிக மகிழ்ச்சியளிககிறது.
எனது தாயாரும் சித்தப்பாவும் எம்மை எப்போதும் கவனித்துக்கொண்டனர். இனிமேல் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் கவனித்துக்கொள்வார்கள்’ என இந்து குமாரி கூறினார்.