திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் நேற்றிரவு (7) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் (06) இரவு 11. 30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு வெட்டி கொலை செய்யப்பட்டவர் கிண்ணியா பூவரசம்பூ பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான அப்துல் மனாப் மொஹமட் சப்பான் 25 வயதுடையவர் என்றும், பாடசாலையொன்றில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காட்டிக் கொடுத்ததமைக்கு பழிவாங்கும் முகமாகவே இவர் தாக்கப்பட்டுள்ளதாகவும், கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெட்டி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்களிடத்தில் ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையை திருகோணமலை பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் மலிந்த டி சில்வா மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை, கொலை செய்யப்பட்ட நபரின் சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.