திருகோணமலை கோணேஸ்வரம் ஆலய தெப்பத்திரு விழாவை பார்த்து விட்டு ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த தாயும் மகளும் இராணுவ வாகனம் மோதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளனர்.
இந்த பரிதாபகரமான சம்பவம் திருகோணமலை பிரதான வீதியில், நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு 10.40 மணி அளவில் நடைபெற்றுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய இராணுவ வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாமல் தப்பி ஓடிய போதும் சாரதியை திருகோணமலைப் பொலிஸார் இரவு 12.10 மணியளவில் கைது செய்துள்ளனர்.
இராணுவ வாகனத்தில் மோதுண்டு நடராஜா வாசுகி (வயது 60), மகள் நடராஜா சிவதர்ஷினி (வயது 32) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
சாம்பல் தீவு 6ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நடராஜா வாசுகி, மகள் நடராஜா சிவதர்ஷினி மற்றும் கதிர்காமத்தம்பி ராஜேஸ்வரி (வயது 70) ஆகிய மூவரும் திருக்கோணேஸ்வரத்தின் தெப்பத்திருவிழா திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றதை பார்த்துவிட்டு ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, பிரதான வீதியில் விக்னேஷ்வரா மகாவித்தியாலயத்துக்கு முன்பாக எதிரே வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளது.
இந்த விபத்தில் தாயும் மகளும் ஸ்தலத்திலேயே மரணமாகியுள்ளனர்.
ஆட்டோ சாரதியான கீதபொன்கலன் மற்றும் கதிர்காமத்தம்பி ராஜேஸ்வரி (வயது 70) ஆகிய இருவரும் படுகாயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆட்டோவை மோதிய இராணுவ வாகனத்தின் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் ஓடித் தப்பியுள்ளார். இத்தகவலையறிந்த திருகோணமலைப் பொலிஸார் விசாரணையின் பின் இராணுவ வாகனத்தின் சாரதி திகார தீபாலகுமாரவை திங்கள் இரவு 12.10 மணியளவில் கைது செய்து நேற்று செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
திருகோணமலை தலைமைக் காரியாலய பொலிஸ் பிரிவினர் மேற்படி விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடாத்தி வருவதுடன், திருமலை வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை நடைபெறுவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.