திருமணம் முடிந்த கையோடு சிலர் தேர்வெழுதச் செல்வர். இன்னும் சிலர் தேர்தலில் வாக்களிப்பர். ஆனால் இதுவேறு விதம்.
கால்பந்து ஆட்டத்தில் கலந்துகொள்வதற்காக கேரள இளைஞர் ஒருவர், தன்னுடைய திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது சில நிமிடங்கள் பிரேக் எடுத்து, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்தவர் ரித்வான். இவர் ஃபிபா மஞ்சேரி அணியில் கால்பந்து ஆடி வருகிறார். தடுப்பாட்டக்காரரான ரித்வானுக்கு கால்பந்து மீது அலாதியான ஆர்வம்.
அவருக்குத் திருமணத் தேதி குறித்த அதே தினத்தில் இவரின் அணியும் மலப்புரம் 7எஸ் போட்டியில் கலந்துகொள்ளத் தேர்வானது. 11 பேருக்குப் பதிலாக 7 பேர் மட்டுமே ஆடும் 7எஸ் போட்டி கேரளாவில் மிகப் பிரபலம்.
திருமண ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிட்ட நிலையில், திருமண தினத்தை மாற்ற முடியாத நிலை. என்ன செய்யலாம் என்று யோசித்தார் ரித்வான்.
மனைவியாகப் போகிற பெண்ணிடம் 5 நிமிடங்கள் பிரேக் வேண்டும் என்று கேட்டு, ஆட்டத்தில் கலந்துகொண்டார்.அவரின் அணியும் வெற்றிபெற்றது.
மீண்டும் திருமணத்தில் கலந்துகொண்ட ரித்வான், திருமணச் சடங்குகளைச் செய்தார். ஆனால் மனைவியான மணப்பெண், ”ஒருவேளை கால்பந்துப் போட்டிகள் மதியத்தில் நடைபெற்றிருந்தால், திருமணத்தை நிறுத்தி இருப்பீர்களா?” என்று ரித்வானிடம் கேள்வி எழுப்பினார். மனைவி கேட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் விழித்தார் ரித்வான்.
இதற்கிடையே திருமணத்துக்கு இடையில் சென்று கால்பந்து விளையாடிய ரித்வானுக்கு, மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் பாராட்டு தெரிவித்துள்ளார். ரித்வானைச் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.