தூத்துக்குடியில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டுக் கைதுசெய்து அழைத்துச் செல்லப்பட்ட தி.மு.க அமைப்பாளருக்கு, பிறந்தநாள் கேக் ஊட்டிய வடுவூர் காவல் ஆய்வாளரை காத்திருப்போர் பட்டியலில் வைக்க திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் ஒன்றிய தி.மு.க மாணவர் அணி அமைப்பாளராக இருப்பவர், சிவச்சந்திரன். இவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, தி.மு.க சார்பில் கடந்த 24-ம் தேதி வடுவூரில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர்களை வடுவூர் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீஸார் கைதுசெய்து, வடுவூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.
அன்றைய தினம் சிவச்சந்திரன், தனக்கு பிறந்தநாள் என்பதை காவல் நிலையத்தில் தெரிவிக்க, உடனே தி.மு.க-வினர் சிவச்சந்திரனுக்கு பிறந்தநாள் கேக் ஒன்றை வாங்கிவந்து காவல் நிலையத்திலேயே வெட்டி, பிறந்தநாளைக் கொண்டாடினர்.
இந்தக் கொண்டாட்டத்தில், இன்ஸ்பெக்டர் ஜெயந்தி மற்றும் பணியில் இருந்த போலீஸார் கலந்துகொண்டனர். தி.மு.க-வினர், சிவச்சந்திரனுக்கு கேக் வெட்டி ஊட்டியதைப்போல, பணியிலிருந்த இன்ஸ்பெக்டரும் சிவச்சந்திரனுக்கு கேக் ஊட்டினார். காவல் நிலையத்திலே இன்ஸ்பெக்டர் பிறந்தநாள் கேக் ஊட்டியது, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
இந்தக் காவல் ஆய்வாளர், கடந்த சில மாதங்களுக்கு முன் கருவாக்குறிச்சியில் சீருடையில் பணியில் இருந்தபடியே அ.தி.மு.க கொடியை ஏற்றிவைத்து சர்ச்சைக்குள்ளானார். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, மன்னார்குடி டி.எஸ்.பி., அசோகன் தலைமையில், காவல் ஆய்வாளர் ஜெயந்தியிடம் விசாரணை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இன்று காலை காவல் ஆய்வாளர் ஜெயந்தியைக் காத்திருப்போர் பட்டியலில் வைக்க திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளார்.