கப்பல் துறைமுகத்திற்குள் நுழைந்த பின் இந்த தீ விபத்து ஏற்பட்டிருந்தால் அதன் பாதிப்புகளை மதிப்பிடுவதே பாரதூரமான விடயமென கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிடப்பட்டிருந்த நிலையில் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடந்த 20 ஆம் திகதி தீ விபத்திற்குள்ளாகியிருந்தது.
கப்பலில் அமிலக் கசிவு ஏற்பட்டுள்ளமையை ஊழியர்கள் ஏற்கனவே அவதானித்திருந்து நிலையில் கட்டாரின் ஹமாட் மற்றும் இந்தியாவின் ஹசீரா துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இலங்கை கடற்பரப்பிற்குள் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நுழைந்தமை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து பதிலளிக்கையிலேயே கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சட்டத்தரணி தர்ஷனி லஹண்டாபுர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் மீண்டும் ஏற்பட்ட தீ
எக்ஸ்பிரஸ் பேர்ள்ஸ் கப்பலில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.00 மணி முதல் மீண்டும் தீப்பரவல் ஏற்பட்டது. எண்ணெய் தாங்கியில் இந்த தீ ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றோம். எனினும் இதனை உறுதியாகக் கூற முடியாது. தற்போது கப்பலுக்குள் சென்று எதனையும் அவதானிக்க முடியாது.
எனவே தான் ‘இவ்வாறு நடக்கக் கூடும்’ என்று அனுமானிக்கக் கூடிய காரணிகளைக் கொண்டு எண்ணெய் தாங்கியில் தீப்பரவல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்று சந்தேகிக்கின்றோம். எனினும் தற்போது (இன்று மாலை) தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கப்பலை குளிர்மைப்படுத்தும் பணிகள் தொடர்கின்றன
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அதனை குளிர்மைப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. டக் இயந்திரங்கள் , இந்தியாவினதும் துறைமுக அதிகாரசபையினதும் படகுகள் ஊடாக இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தூய்மைப்படுத்த இரு வாரங்கள் செல்லும்
கப்பலில் ஏற்பட்டுள்ள தீ விபத்தில் பாதிப்பிற்குள்ளான சுற்றாடலை தூய்மைப்படுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை இந்த பணிகளில் 1,095 பேர் கொண்ட குழுகள் ஈடுபட்டுள்ளன. தூய்மைப்படுத்தும் விடயங்கள் தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும். எனினும் குறைந்தளவு இரு வாரங்களேனும் இதற்காக தேவைப்படும் என்று எண்ணுகின்றோம்.
மீன்களுக்கு பாரிய பாதிப்பு
இந்த கப்பலில் காணப்பட்ட கொள்கலன்களிலிருந்து மிகச்சிறிய (பந்து வடிவிலான) பிளாஸ்டிக் கடலில் கலந்துள்ளன. எனவே குறித்த கடற்பரப்பிலுள்ள மீன்கள் அவற்றை உண்ணக் கூடிய வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.
வழமையாக மீன்கள் உணவுடன் நீரையும் சேர்ந்தே உள்ளெடுக்கும். அதன் பின்னர் நீரை மீண்டும் வெளியேற்றும். அதே போன்று இந்த பிளாஸ்டிக்கினை அவை உண்ண வாய்ப்புள்ளதால் மீன்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எமக்கு இவ்வாறான பிரச்சினை இப்போது ஏற்பட்டுள்ள போதிலும் , சில நாடுகள் இதற்கு முன்னர் இவ்வாறான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. எனவே அந்த நாடுகளை இவை தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளன என்பது குறித்து மதிப்பீடு செய்து நடைமுறை சாத்தியமான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அத்தோடு எமது சுற்றாடலையும் செமடமைப்படுத்துவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.
கப்பலில் 25 தொன் நைட்ரிக் அமிலம்
இந்த கப்பலில் 25 தொன் நைட்ரிக் அமிலம் வெளியாகியுள்ளமை உண்மையாகும். இந்த நைட்றிக் அமிலமே தீ விபத்திற்கான பிரதான காரணியாகும். நைட்றிக் அமிலம் என்பது மிகப் பாரதூரமான விளைவைக் கொண்டதாகும்.
இவ் அமிலம் மனித உடலில் படுமாயின் தசைகளை தீயை விட பன்மடங்கு வேகமாக எரித்து ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது. இதில் நீர் சேரும் போது கபிலம் மற்றும் மஞ்சள் நிறத்திலான வாயு வெளியேறும். இது மிகவும் அபாயமுடையதாகும்.
இக் கப்பலில் நைட்ரிக் அமிலம் காணப்பட்ட கொள்கலன் ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு கசிவுடன் கப்பல் எமது துறைமுகத்தை அண்மித்த போது இலங்கையில் சூறாவளி தாக்கம் மற்றும் மழையுடனான வானிலையே காணப்பட்டது. இந்த நிலையிலேயே தீப்பரவல் ஆரம்பித்துள்ளது.
கப்பலில் மேலும் பல அபாயம் மிக்க இரசாயனங்கள்
நைட்ரிக் அமிலம் தவிர்ந்த மேலும் சில அபாயம் மிக்க இரசாயண பதார்த்தங்களும் காணப்பட்டன. இக் கப்பலில் 1,486 கொள்கலன்கள் காணப்பட்டன. இவற்றில் சுமார் 60 கொள்கலன்களில் நைட்ரிக் அமிலத்தைப் போன்று அபாயம் மிக்க உதாரணமாக கோஸ்டிக் சோடா (சோடியம் ஐதொரக்சைட்) போன்ற இரசாயனங்களும் காணப்பட்டன. இவ்வாறான பதார்த்தங்களே தீப்பரவல் தீவிரமடையவும் காரணமாகியது. அதிஷ்டவசமாக பாரியதொரு வெடிப்பு சம்பவம் இதுவரையில் இடம்பெறவில்லை.
துறைமுகத்தில் விபத்து ஏற்பட்டிருந்தால் பாதிப்பை மதிப்பிட முடியாது
இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்திருந்து , இவ்வாறானதொரு தீ விபத்து ஏற்பட்டிருந்தால் அதனால் ஏற்பட்டிருக்கக் கூடிய பாதிப்புக்கள் மதிப்பிட முடியாதவையாகும். இதனை எம்மால் துல்லியமாகக் கூற முடியாது. துறைமுக அதிகாரசபையினால் இது தொடர்பில் குறிப்பிட முடியும்.
பயணத்திட்டமிடலுடனேயே கப்பல் வருகை தந்துள்ளது
இந்த கப்பல் சாதாரணமாக வருகை தரவில்லை. பயணத்திட்டமிடலுடனேயே வந்துள்ளது. அதற்கமை இது இலங்கைக்கு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த கப்பலொன்றே ஆகும். அதாவது இவற்றிலுள்ள 500 கொள்கலன்களில் நாட்டுக்கு பொருட்கள் காணப்பட்டுள்ளன.
மேலும் 600 கொள்கலன்கள் மாற்றக்கூடியவையும் காணப்பட்டன. எனவே நைட்றிக் அமிலம் கசிந்துள்ளதால் இக்கப்பல் நாட்டுக்கு வருகை தரவில்லை. கட்டார் , இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பொருட்களை இறக்கிய பின்னர் இலங்கைக்கு வந்து அதன் பின்னர் சிங்கப்பூருக்கு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது என்றார்.
மேலும் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட நிலையில் அமோனிய நைட்ரிக் கசிவால் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் இன்றளவும் பேசப்படுகின்றது.
இந்த விபத்தானது நிலத்தடியில் பாதுகாப்பற்ற முறையில் களஞ்சியப்படுத்தப்பட்ட சுமார் 2,750 தொன் அமோனியம் நைட்ரிக் கசிவால் ஏற்பட்டதாகும்.
இந்த சம்பவத்தில் 207 பேர் உயிரிழந்தனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அது மாத்திரமன்றி கட்டட இடிபாடுகளால் 15 பில்லியன் டொலர் நட்டம் ஏற்பட்டது. மறுபுறம் 3 இலட்சம் பேர் வீடுகளை இழந்தனர். இவ்வகையான இராசாயன பதார்த்தங்கள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமென்பதே நிபுணர்களின் கருத்தாகின்றது.