திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாகி 90 தோட்டாக்கள் மற்றும் மூன்று ரவைக் கூடுகளுடன் இன்று காலை தப்பியோடியுள்ளார்.
இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு, பெரியமடு முருகன் கோயில் வீதியை வசிப்பிடமாக கொண்ட இந்த விமானப்படை சிப்பாய் இன்று காலை 2 மணிக்கும் 6 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் சீருடையுடன் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த சிப்பாய், அவருக்கு வழங்கப்பட்டிருந்த 60 தோட்டக்களுடன் இரண்டு ரவைக் கூடுகள் மற்றும் அவருடன் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாயின் 30 தோட்டங்கள் அடங்கிய ஒரு ரவைக் கூட்டை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து விமானப்படையினர் சீனன்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
முறைப்பாட்டுக்கு அமைய மூதூர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்கவின் வழிகாட்டலின் கீழ் சீனன்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், விமானப்படை சிப்பாய் தப்பிச் சென்றதாக கூறப்படும் காட்டு வழியில் தேடுதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தேடுதலின் போது விமானப்படை சிப்பாய்க்கு வழங்கப்பட்டிருந்த தண்ணீர் போத்தல் வைக்கும் சீருடையின் பகுதி கப்பற்துறை பிரதேசத்தில் கிடந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
தப்பிச் சென்ற விமானப்படை சிப்பாயை கண்டுபிடிக்கும் நோக்கில் பொலிஸாரும் விமானப்படையினரும் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.