துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி முறியடிக்கப் பட்டுள்ளது. துருக்கியில் மக்களாட்சியை மலரச் செய்தவர்கள் படைத்துறையினரே.
அங்கு மக்களாட்சி அச்சுறுத்தலுக்கு உள்ளாகுவதை அவர்கள் விரும்புவதில்லை. ஆனால் உலகப் பொருளாதரம் சிக்கலடைந்தும் துருக்கியின் பிராந்தியம் பெரும் குழப்பமடைந்தும் இருக்கும் நிலையிலும் துருக்கியில் ஓர் உறுதியற்ற நிலை உருவாகுவது விரும்பத்தக்கதல்ல.
2016 ஜூலை 16-ம் திகதி வெள்ளிக் கிழமை பிற்பகல் துருக்கியப் படைத்துறையினரின் ஒரு பகுதியினர் ஆட்சியைக் கைப்பற்றும் முயற்ச்சியில் இறங்கினர்.
பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இஸ்தான்புல்லை துருக்கியின் ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் பொஸ்பரஸ் பாலத்தை அவர்கள் முதலில் மூடினர். காவற்துறையைச் சேர்தவர்கள் பலர் தலைநகர் அங்காராவிலும் இஸ்த்தான்புல்லிலும் கைது செய்யப் பட்டனர்.
விடுமுறையில் அதிபர் ரிசெப் எர்டோகன் தங்கியிருந்து விட்டு வெளியேறிய உல்லாச விடுதியில் குண்டு வெடிப்பு நடந்தது. இது அவரைக் கொல்ல எடுத்த முயற்ச்சியாகும்.
புரட்சியாளர்கள் படைத்தள பதியாகிய Chief of Defense General Hulusi Akar ஐ பணயக் கைதியாகப் பிடித்தனர். உலங்கு வானூர்தி ஒன்று தலைநகர் அங்கோராவின் மேலாகப் பறந்து ரவை மழை பொழிந்தது.
Chief of Defense General Hulusi Akar, Recep Tayyip Erdoğan
படைத்துறைச் சட்டம் (Marshall Law) புரட்சிக்கு முயன்ற படையினர் பல தொலைக்காட்சி நிலையங்களையும் கைப்பற்றினர்.
தேச முகாமையை தாம் முற்றாகக் கைப்பற்றியதாகவும் நாட்டில் சுதந்திரம், மனித உரிமைகள், அரசியலமைப்பு யாப்பு ஆகியவற்றைப் பேணப்போவதாகவும் புரட்சி முயற்ச்சியாளர்கள் அறிவித்தனர்.
நாட்டில் படைத்துறைச் சட்டம் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்தனர். ஆரம்பத்தில் எந்த அளவு படையினர் புரட்சியில் ஈடுபட்டனர் என்று சொல்ல முடியாத நிலை இருந்தது.
துருக்கியத் தலைமை அமைச்சர் Binali Yildirim மட்டும் முதலில் புரட்சிக்கு எதிராகக் கருத்து வெளியிட்டிருந்தார். TRT என்னும் அரச தொலைக்காட்சியினூடாக அவர் தமது கருத்தை வெளியிட்டிருந்தார்.
அத் தொலைக்காட்சியை புரட்ச்சிக்கு முயன்றவர்கள் கைப்பற்றாதது அவர்களின் தோல்வியைத் துரிதப் படுத்தியது எனச் சொல்லலாம்.
இரவு பதினொரு மணிக்கு அதிபர் எர்டோகனுக்கு ஆதரவான படையினர் போர் விமானத்தில் வந்து புரட்சியாளர்களின் உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தினர்.
அதைத் தொடர்ந்து நள்ளிரவு 12-20இற்கு அதிபர் எர்டோகன் அங்காராவிற்குப் போய்ச் சேர்ந்ததில் இருந்து நிலைமை மாறத் தொடங்கி அதிபருக்கு ஆதரவான படையினரின் கை ஓங்கியது.
புரட்சியாளர்கள் சரணடையத் தொடங்கினர். புரட்சியாளர்களின் நடவடிக்கை தலைநகர் அங்காராவிலும் இஸ்தான்புல்லிலும் மட்டுமே நடந்திருந்தன.
எர்டோகனுக்கு கை கொடுத்த கைப்பேசி
விடுமுறையில் இருந்த அதிபர் ரிசெப் எர்டோகன் சி.என்.என் தொலைக்காட்சியின் ஓர் பெண் ஊடகருக்கு கைப்பேசியில் ஸ்கைப் ஊடாக நாட்டு மக்களுக்கு தன் கருத்தை வெளியிட்டார்.
அவரால் வெறுக்கப் பட்ட சமூகவலைத்தளம்தான் அவரது ஆட்சியைக் காப்பாற்றியது. அதன் மூலம் அவர் நாட்டு மக்களை அமைதியாக தெருவில் இறங்கிப் போராடும் படி வேண்டுகோள் விடுத்தார்.
அதன் பின்னரே நிலைம் சிறிது சிறிதாக மாறத் தொடங்கியது. எர்டோகனுக்கு ஆதரவான படையினர் களத்தில் இறங்கினர். இஸ்த்தான்புல் பாலத்தை மூடி வைத்திருந்த படையினர் சரணடைந்தனர். வேறு இடங்களிலும் படையினர் சரணடைவதை சிஎன்.என் தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
ஐ எஸ் அமைப்பிற்கு ஆதரவு வழங்கிய துருக்கி
ஆசியா, ஆபிரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களுக்கு மத்தியிலும் மத்திய தரைக்கடலையும் ஒட்டி இருக்கும் துருக்கி உலக சமாதானத்திற்கும் வர்த்தகப் போக்குவரத்துக்கும் முக்கியமான ஒரு நாடாகும்.
வரலாற்றுப் பெருமையும் கலாச்சார மேன்மையும் மிக்க துருக்கி சிறுபானமை குரிதிஷ் மக்களுக்கு எதிராக மிக மோசமான அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விடுகின்றது.
இரண்டு தடவை எல்லை தாண்டி ஈராக்கிற்குள் துருக்கியப் படைகள் நுழைந்து குர்திஷ் மக்களுக்கு எதிராகத் தாக்குதல்கள் நடத்தின. சியா முஸ்லிம்களின் ஒரு பிரிவான அல்வைற் இனத்தவரான அதிபர் பஷார் அல் அசாத்தை சிரியாவின் ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சுனி முஸ்லிம்களைப் பெரும்பான்மையகக் கொண்ட துருக்கிய அதிபர் எர்டோகன் கடும் முயற்ச்சி மேற்கொள்கின்றார்.
ஆரம்பத்தில் ஐ எஸ் போராளிகளுக்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் துருக்கியால் வழங்கப்பட்டது. துருக்கியூடாக உலகெங்கிலும் இருந்து இளையோர் சென்று ஐ எஸ் அமைப்பில் இணைந்தனர்.
மக்களாட்சியைக் கொண்டுவந்த படையினர்
மன்னர்(சுல்த்தான்) ஆட்சியின் கீழ் இருந்த துருக்கி 1923-ம் ஆண்டில் இருந்து மக்களாட்சி முறைமையின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது. அப்போது படைத் தளபதியாக இருந்த Mustafa Kemal Atatürk துருக்கியில் மேற்கத்தைய பாணி ஆட்சிமுறைமையில் துருக்கி ஆளப்படுவதற்கு கெமாலிஸம் என்னும் கொள்கையை முன்வைத்தார்.
அந்தக் கொள்கை அவரது பெயரால் அடரேக்கிஸம் எனவும் அழைக்கப்படுகின்றது. மக்களாட்சி, சம உரிமை, பெண்களுக்கான அரசியல் உரிமை, மதசார்பின்மை, விஞ்ஞானத்திற்கு அரச ஆதரவு, இலவசக் கல்வி ஆகியவை அவரது கொள்கையின் முக்கிய அம்சங்களாகும்.
முதலாம் உலகப் போர்ல் துருக்கி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து துருக்கி உதுமானியப் பேரரசாக (Ottoman Empire) இருந்த நிலைக்கு மாறவேண்டும் என்ற கொள்கை உடையோர்களை எதிர்த்தே கெமாலிஸம் உருவாக்கப்பட்டது.
துருக்கியப் படைத்துறையினர் தம்மை இந்த கெமாலிஸம் கொள்கையின் பாதுகாவலராகக் கருதுகின்றனர். 1960, 1971, 1980, 1997 ஆகிய ஆண்டுகளில் துருக்கியப் படையினர் மக்களாட்சியைப் பாதுகாப்பது எனச் சொல்லிக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றினர்.
1980-ம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றிய படையினர் புதிய அரசிலமைப்பு யாப்பை உருவாக்கினர். அதன் படி குறைந்த அளவு 10 விழுக்காடு வாக்குப் பெற்ற கட்சிகள் மட்டுமே பாராளமன்ற உறுப்புரிமை பெற முடியும்.
துருக்கியில் புரட்சி தொடங்கிய பின்னர் எர்டோகன் முதலில் இஸ்தான்புல் விமான நிலையத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியினூடாக உரையாற்றும் போது Mustafa Kemal Ataturk இன் உருவப் படத்தின் முன் நின்று உரையாற்றியதன் பின்னணியில் நிறையப் பொருள் உண்டு.
தன்னை சுல்த்தானாக மாற்ற முயலும் எர்டோகன்
தற்போதைய துருக்கிய அதிபரும் முன்னாள் தலைமை அமைச்சருமான ரிசெப் தையெப் எர்டோகன் தன்னை எல்லா அதிகாரங்களும் கொண்ட ஒரு நிறவேற்று அதிபராக (executive president) ஆக மாற்றுவதற்காக துருக்கியின அரசியலமைப்பை மாற்றும் தீவிர முயற்ச்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
இதற்கு அவருக்கு பெரும் எதிர்ப்புக் கிளம்பிக் கொண்டிருக்கின்றது. 2002-ம் ஆண்டில் இருந்து ஆட்சியில் இருக்கும் அதிபர் எர்டோகன் ஆட்சியை மதசார்பாக மாற்றுவதும், பாடசாலைகளையும் அதற்கு ஏற்ப மதவாதத்தை வளர்ப்பதாகவும் குற்றம் சாட்டப் படுகின்றது.
எர்டோகன் துருக்கியில் ஊடகங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கடுமையாகப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றார். எர்டோகன் 2016 ஜூலை மாதம் இஸ்ரேலுடன் அரசுறவுகளை மீள உருவாக்கியதும் பல இஸ்லாமியவாதிகளை ஆத்திரப்படுத்தியது.
இப்படிப்பட்ட நிலையில் துருக்கியில் ஒரு படைத்துறைப் புரட்சி வரலாம் என்ற பேச்சு துருக்கியில் அண்மைக்காலங்களாகப் பரவலாக அடிபட்டது.
படைத்துறையின அமைதியாக இருந்தமையால் படைத்துறையை எர்டோகான் அடக்கி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார் என்றும் பேசப்பட்டது.
ஆனால் துருக்கியின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை எர்டோகன் வெற்றிகரமாகச் செயற்பட்டிருக்கின்றார். பல நாடுகளும் கடன்பளுவால் தவிக்கையில் துருக்கி அரசின் கடன் அதன் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 33 விழுக்காடு மட்டுமே.
சீனாவின் கடன் அதன் மொ. பொ. உ இன் 280 விழுக்காடாகும். எர்டோகன் பெண்கள் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்ற கொள்கையுடையவர்.
அவரது ஆட்சியில் பெண்கள் கொல்லப்படுவது 14 மடங்கு அதிகரித்துள்ளது. மக்கள் தொகை விகிதாசாரப்படையில் உலகிலேயே அதிக ஊடகர்கள் சிறையில் இருப்பது துருக்கியிலாகும்.
எர்டோகன் இஸ்த்தான்புல் நகரபிதாவாக இருக்கும் போது மதக்குரோதத்தைத் தூண்டினார் எனக் குற்றம் சாட்டப்பட்டவராகும். தலைமை அமைச்சராக இருக்கும் போது சூழல்பாதுகாப்புத் தொடர்பான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார்.
கையில் சல்லிக் காசு கூட இல்லாமல் வாழ்கையை ஆரம்பித்த எர்டோகன் தற்போது பில்லியன் டொலர்களுக்கு மேல் சொந்தக்காரர். இவரது மகனினதும் நண்பர்களினதும் சொத்துக் குவிப்புத் தொடர்பாக விசாரித்த 350இற்கு மேற்பட்ட காவற்துறையினர் பதவிகளில் இருந்து தூக்கப்பட்டனர்.
பாசக்கார நண்பேண்டா
படைத்தளபதியாகிய Chief of Defense General Hulusi Akar எர்டோகனின் நெருங்கிய நண்பராவார். எர்டோகன் துருக்கிய அதிபராகப் பதவியேற்புரை செய்யும் போது அவர் கண்ணீர் மல்கினார்.
சிரியாவில் படைத்துறை ரீதியில் துருக்கி தலையிட வேண்டும் என்ற எர்டோகனின் கொள்கைக்கும் படையினர் மத்தியில் வரவேற்பு இல்லை.
அவருடைய பழமைவாதத்தையும் படையினர் வெறுக்கின்றனர். 2016 ஜூலை 15-ம் திகதிப் புரட்சிய் முயற்ச்சியின் ஒரு வாரத்திற்கு முன்னர் முன்னாள் படைத்துறை அதிகாரியும் தற்போது படைத்துறை ஆய்வு எழுத்தாளராகவும் பணிபுரியும் ஒருவர் படைத்துறையினரால் மட்டுமே எர்டோகனைத் தடுக்க முடியும் எனக் கருத்து வெளியிட்டிருந்தார்.
எகிப்த்தில் முஹம்மட் மேர்சி படைத்துறைப் புரட்சியின் மூலம் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டதில் இருந்து எர்டோகன் கடும் கவலையுடன் இருந்தார். இந்தப் புரட்சியில் விமானப்படை உயர் அதிகாரிகள் சம்பந்தப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அமெரிக்காவிற்கு வேண்டப்பட்டவர்
எர்டோகன் தன்னை ஓர் அதிகாரம் மிக்க அதிபராக மாற்றுவதை மீண்டும் உதுமானியவாதத்திற்கு இட்டுச் செல்லும் என்ற கருத்து படையினரிடையே பரவலாக இருக்கின்றது.
துருக்கியின் மக்களாட்சியின் பாதுகாவல் கொள்கையான கெமாலிஸத்தை பேண அவர்கள் விரும்புகின்றார்கள். துருக்கியில் அடிக்கடி நடக்கும் தற்கொடைத் தாக்குதல்கள் மக்களை பெரிதும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
துருக்கியில் படைத்தளம் அமைத்து சிரியாவில் ஐ எஸ் போராளிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடாத்தும் அமெரிக்காவிற்கு தற்போது எர்டோகன் மிகவும் வேண்டப்பட்டவராக இருக்கின்றார்.
துருக்கியில் எப்படி மக்களாட்சி சிதைக்கப்ப்ட்டாலும் எப்படி ஊடகர்கள் அடக்கப்பட்டாலும் அமெரிக்கா அதைப் பெரிது படுத்தவில்லை. தேர்தலின் போது தனது வெற்றி வாய்ப்பை அதிகரிப்பதற்காக குண்டுகளை வெடிக்க வைத்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவரான எர்டோகனை மக்களாட்சி முறைப்படி தேர்தெடுத்த எர்டோகன் என்கின்றது அமெரிக்கா.
இஸ்லாமிய மார்க்கத்தை பழமைவாதத்தில் இருந்து மீட்க முயலும் முகம்மட் பெத்துல்ல குலெனை பயங்கரவாதியாக்கிய எர்டோகனை தலையில் தூக்கி வைத்திருக்கின்றது அமெரிக்கா.
மத போதகர் பெத்துல்லா குலென்
துருக்கியில் ஒரு தாராண்மைவாத இஸ்லாம் இருக்க வேண்டும் என்ற கருத்துடைய மத போதகர் பெத்துல்லா குலென் எர்டோகனின் முன்னாள் நண்பராவார்.
அமெரிக்காவில் வசிக்கும் இவரும் இந்தப் படைத்துறை முயற்ச்சியில் சம்பந்தப்பட்டிருப்பதாக கருத்து நிலவுகின்றது. இவரது மத போதனைக்கு காவற்துறையினர் மத்தியிலும் உளவுத்துறையினர் மத்தியிலும் நல்ல ஆதரவு உண்டு.
இடதுசாரிகள்
161 பேர்வரை கொல்லப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் புரட்சி முயற்சிக்கு இடதுசாரிகள் ஆதரவு வழங்கியுள்ளனர். குடியாட்சி மக்கள் கட்சி என்ற இடது சாரிக் கட்சியும் புரட்சி முயற்ச்சியில் சம்பந்தப் பட்டிருந்தது.
அமெரிக்காவின் நெருங்கிய நண்பரான எர்டோகனை துருக்கிய இடதுசாரிகள் வெறுக்கின்றார்கள்.
சிஐஏ உளவுத் துறைக்கு இன்னும் ஒரு தோல்வியா?
அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துருக்கியில் ஓரு புரட்சி அமெரிக்க உளவுத்துறையான சிஐஏ அமைப்பிற்குத் தெரியாமல் நடந்தது எல்லோரையும் ஆச்சரியப் படுத்தியுள்ளது. ஏற்கனவே எகிப்த்தில் அரபு வசந்தப் புரட்சி, கிறிமியாவை இரசியா தன்னுடன் இணைத்தமை போன்றவற்றை சிஐஏ முன்கூட்டியே அறியாமல் இருந்தது அதன் திறமையின் மேல் ஐயத்தை உண்டாக்கி இருந்தது.
குறைந்த அளவு படையினர் மட்டுமே
துருக்கியில் நடந்த புரட்சி முயற்ச்சியின் சூத்திரதாரிகள் உலங்கு வானூர்தியில் தப்பி கிரேக்கத்தில் தரைஇறங்கிய போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
துருக்கியில் 1950இற்கு மேற்பட்ட படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர். துருக்கிய மக்கள் படையினரைத் தாக்கும் படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. குறைந்த அளவு படையினரே புரட்சியில் ஈடுபட்ட படியால்தான் 14 மணித்தியாலங்களுக்குள் பெரும் உயிரிழப்புக்கள் இன்றி புரட்சி அடக்கப்பட்டது.
துருக்கியில் எர்டோகன் தனது அதிகாரத்தை அதிகரிக்கும் முயற்ச்சியைக் கைவிடாவிடில் அவரது ஆட்சிக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை புரட்சி முயற்சி எடுத்துக் காட்டுகின்றது.
ஆனால் வெற்றிகரமாகப் புரட்சியை முறியடித்தமை பாராளமன்றத்தில் அவருக்கான ஆதரவை அதிகரிக்கும் வாய்ப்புக்கள் உண்டு. அதன் மூலம் அவர் தனது அதிகாரத்தை அதிகரிக்க முயல்வாரா?
Vel Tharma