இந்தியாவும் , சர்வதேசமும் பலதடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்குச்சென்று பேசுமாறு வலியுறுத்திய போதிலும் அவர்கள் பிடிவாதம் பிடித்து வருவதாகவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்தச் செய்தியாளர் மாநாடு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று வியாழக்கிழமை தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சு கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இனநெருக்கடியைத் தீர்ப்பதில் காலம் கடத்தப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, காலம் கடத்துவது அரசு அல்ல , எந்த வேளையும் கதவு திறக்கப்பட்டே இருக்கின்றது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே புறக்கணித்து வருகின்றது.
தெரிவுக் குழுவுக்கு வராமல் எந்த விதத்திலும் தீர்வு கிட்டப் போதில்லை. அரசியலமைப்பின் உச்சபீடம் பாராளுமன்றமே ஆகும். பாராளுமன்றத்தின் மூலம் மட்டுமே தீர்வு எட்டப்பட வேண்டும்.
அரசின் இந்த நிலைப்பாடு உறுதியானது. இவ்விடயத்தில் விட்டுக் கொடுப்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. தீர்வை பெற்றுக் கொள்வதற்கான ஒரே வழி பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வருவதுதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்னமும் கால அவகாசம் இருக்கின்றது.
தென்னாபிரிக்காவை மூன்றாம் தரப்பாக வைத்துப் பேசுவதை தவறெனக் கூறமாட்டோம். தாராளமாகப் பேசலாம். தென்னாபிரிக்கா அல்ல உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் போக முடியும்.
ஆனால் இறுதியில் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தே ஆக வேண்டும். வெளியே இருந்து பேசித் தீர்வை எட்டுவதென்பது ஒரு போதும் சாத்தியப்பட முடியாது.
தென்னாபிரிக்காவின் உண்மை ஆணைக்குழு (TRUTH Commission) மூன்றாம் தரப்பாக செயற்படுவதை அரசு ஒரு போதும் நிராகரிக்கவில்லை. ஆனால் எங்கெல்லாம் பேசினாலும் தீர்வு காண்பதற்கான ஒரே இடம் பாராளுமன்றமே என்பதை எவரும் மறந்து விடக்கூடாது.
இன்னொரு விடயத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். தமிழ் மக்களின் ஏகபிரதிநிதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தான் என்பதை நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழ்க் கூட்டமைப்பு அப்படிச் சொன்னாலும் தமிழ் மக்கள் அப்படிச் சொல்லவில்லையே.
இந்தியாவின் சர்வதேசத்தின் ஆலோசனைக்கமையவாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும். அதன் மூலம் தீர்வை நோக்கி விரைவாகப் பயணிக்க முடியும். தமிழ்க் கூட்டமைப்பின் வருகைக்காக அரசாங்கம் இன்னும் காத்துக்கொண்டே இருக்கின்றது எனவும் அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.