தொண்டர் படை.
வடக்கு-கிழக்கு மாகாணசகைஸபகளைப் பாதுகாக்கவும் அதன் சாதனை என்று கூறத்தக்க விதத்திலும் இந்திய அரசு பல திட்டங்களைப் போட்டுக்கொடுத்தது.
மாகாணசபைக்கான பொலிஸ் படை மற்றும் தேசிய இராணுவம் என்பவற்றையும் உருவாக்கத் திட்டமிட்டது.
சி.வி.எஃப் என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட தொண்டர் படைக்கு மாகாண சபை மூலமே ஊதியம் வழங்கப்பட்டது.
தமிழ் பொலிஸ் படையை உருவாக்கிவிட்டோம் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் பிரச்சாரம் செய்தது. ஆனால் தொண்டர் படையின் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவே இருந்தது.
வேலையில்லாமல் இருந்த இளைஞர்களும் ஊதியத்திற்காக தொண்டர் படையில் சேர்ந்தனர்.
அதுதவிர கட்டாய ஆட்சேர்ப்பு மூலம் பிடிக்கப்பட்ட இளைஞர்களும் சம்பளம் தருவதாகக் கூறித் தொண்டர் படையில் இணைக்கப்பட்டனர்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் கட்டாய ஆட்சேர்ப்பிற்குப் பயந்த பாடசாலைகளுக்கு தம் பிள்ளைகளை அனுப்பவே பெற்றோர்கள் அஞ்சினர்.
தொண்டர் படைக்கு காக்கி உடை கொடுக்கப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எஃப் மாகாண சபைப் பிரமுகர்களுக்கு சல்யூட் அடிப்பதும் அவர்களது வேலை.
ஒரு தொண்டர் படை உறுப்பினரிடம் உங்கள் பணி என்னவெனக் கேட்டபோது, அவர் மனம் கசந்து சொன்னது, ‘வாறவன் போறவனுகடகெல்லாம் சல்யூட் அடிக்கிறது’ என்று.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க உறுப்பினர்கள்தான் தொண்டர் படைக்குப் பொறுப்பாக இருந்தனர். இந்தியப் பொலிஸ் படையின் ஒரு பிரிவாகவே தொண்டர் படை இருந்தது.
கட்டாய ஆட்சேர்ப்பில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஈடுபட்டதனால் ஏற்கனவே இருந்த கொஞ்ச நஞ்ச ஆதரவையும் மக்களிடம் இழந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈ.என்.டி.எல்.எஃப் ஆகிய இயக்கங்களைவிட ரெலோவில் சற்றுப் பயமில்லாமல் மக்கள் பழகத் தொடங்கினர்.
இந்த மூன்று இயக்கங்களும் இந்தியப் படையுடன் சேர்ந்து கூட்டாகவே செயற்பட்டனர்.
ஆனால் மூன்று இயக்கங்களுக்குள்ளும் ஒப்பீட்டளவில் ரெலோ பறவாயில்லை என்று கூறுமளவிற்கு ஏனைய இரு இயக்கங்களும் மக்களிடம் கெட்ட பெயரையே சம்பாதித்தன.
ரெலோ இன்னொரு வேலையும் செய்தது. சில இடங்களில் கட்டாய ஆட்சேர்ப்புப் பயத்தில் உள்ளவர்களிடம் நீங்கள் எங்கட ஆக்கள் என்று கூறிவிடுங்கள்..! எனவும் சொல்லிவைத்திருந்தது.
அதன்படியே அவர்களும் தம்மைப் பிடிக்கவந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரிடம் தாங்கள் ரெலோ என்று கூறித் தப்பித்துக்கொண்டனர்.
வசதிகள் இல்லை
தொண்டர் படைக்குக் கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் ஆட்களைப் பிடித்துக்கொண்டாலும், அவர்களுப்அவர்களுக்குப் போதிய வசதிகள் செய்துகொடுக்கப்பவில்லை.
கூலிப்படை போலவே அவர்களும் நடத்தப்பட்டனர். தொண்டர் படையிலிருந்து மாகாணசபையில் ஊதியம் வாங்கியவர்களில் பெரும்பாலானோர், ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமை மீது அதிருப்தி கொண்டிருந்தனர்.
மாகாண சபையில் ஆட்சியதிகாரம் பெற்றபின்னர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் நிலைமை மிகவும் மோசமடைந்திருந்தது.
மாகாணசபை உறுப்பினர்களாகயிருந்த பலர், இயக்க உறுப்பினர்களாகவே இருக்க இலாயக்கற்றவர்கள்.
மாகாணசபை உறுப்பினர்களானதும், அவர்கள் இயக்க உறுப்பினர்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கினர்.
வடக்கு-கிழக்கு மாகானசபையின் சபாநாயகராக நியமிக்கப்பட்டவர் ராம் ராஜகாரியர்.
அவர் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைவர் க.பத்மநாபாவின் தனிப்பட்ட நண்பர். கொழும்பில் உத்தியோகம் பார்த்துக்கொண்டு, பத்மநாபா கேட்டுக்கொண்டதன்படி இயக்கத்திற்கு சில உதவிகளும் செய்துவந்தவர். ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தவிற்கும் இவர் நண்பர்.
அந்த நட்பின் காரணமாக இயக்கத்தின் ஆதரவாளராக அவர் இருந்தார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவால் கொழும்பில் சில தகவல்களைப் திரட்டவும் இவர் பயன்பட்டார்.
அப்போதே ராம் ராஜகாரியருக்கு சில பொறுப்புக்களைக் கொடுக்க பத்மநாபா விரும்பினார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவின் மணி, ரமேஸ் ஆகியோர் அதற்கு உடன்படாமையினால் பொறுப்புக்கள் கொடுக்கப்படவில்லை.
ராமிடமிருந்த சில குணாம்சங்கள், பிரமுகர் தோரணைகள் போன்றவை. அவரிடம் பொறுப்புக்கள் சென்றால் துஸ்பிரயோகம் செய்யப்படுமென்று ஈ.பி.ஆர்.எல்.எஃப் உளவுப்பிரிவு கருதியது.
அக்கருத்து சரியானது என்று சபாநாயகர் பதவி கிடைத்தபின்னர் வெளிப்படுத்தினார் ராம் ராஜகாரியர்.
இயக்கத்திற்காக கீழ்மட்டத்திலிருந்து கஸ்டப்பட்டு உழைத்த உறுப்பினர்களை ராம் ராஜகாரியர் போன்றோர் மேய்க்க முற்பட்டதனால், அந்த உறுப்பினர்கள் கசப்படைந்தனர்.
தற்போது ராம் ராஜகாரியர் தனிப் பிரமுகராக இருக்கிறார். அவர் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமையினால் சுமத்தப்பட்டுள்ளன.
சுருட்டிய பணத்தில் கொழும்பில் சொத்துக்களும் வாங்கிச் சேர்த்துள்ளார். ‘இவருக்கு மரணதண்டனை வழங்கப்பட வேண்டும். எங்களுக்கு யாரை எப்படிப் பயன்படுத்துவது என்பது தெரியாது, தவறுவிடும்போது தண்டிக்கவும் தெரியாது’ என ஈ.பி.ஆர்.எல்.எஃப் உறுப்பினர் ஒருவரே கசப்புடன் கூறியிருக்கிறார்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினரால் ராம் ராஜகாரியர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய் அல்ல என்றே பரவலாகப் பேசப்பட்டன.
பத்மநாபா மூலம் பதவியைப் பெற்றுக்கொண்ட ராம் ராஜகாரியர், கடைசியாக பத்மநாபாவிற்குத் தலையைச் சுற்றி முடித்தார்.
மாகாணசபை சார்பாக தினம் ஒரு அறிக்கை. தினம் ஒரு வேலைத்திட்டம் என முதலமைச்சர் வரதராஜப்பெருமானால் அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
வேலைவாய்ப்புத் தேடியும், தங்களின் சில காரியங்களுக்காகவும் மாகாணசபை முதல்வரையும், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்க முக்கியஸ்தர்களையும் மக்கள் சந்தித்தனர்.
அவ்வாறு சந்திப்பவர்கள் எல்லாம் தமது ஆதரவாளர்கள் என ஈ.பி.ஆர்.எல்.எஃப் கருதிக்கொண்டது. இதனால் அலுவலக அரசியலுக்குள் சிக்கிக்கொண்டு தாங்களும் அதிகாரிகள் போலவே மாறினார்கள்.
மூடிய அறைக்குள் இருந்தபடி எல்லாம் நல்லபடியே நடப்பதாக் அவர்கள் நினைத்துக்கொண்டிருக்க, இயக்கம் கட்டுக்கோப்பை இழந்து, மிகவுத் உச்சபட்சமான கெட்ட பெயரைச் சம்பாதித்துக்கொண்டிருந்தது.
தலைமையில் இருந்தவர்களுக்கும், பொறுப்புக்களிலிருந்தவர்களுக்கும் என்றோ ஒருநாள் மாகாணசபைக்கு முடிவுகாலம் நெருங்கும் என்பது தெரிந்தது. அதனால் தம்மால் முடிந்தளவுக்குச் சுருட்டல்களில் ஈடுபடத்தொடங்கினர்.
இதற்கிடையில் தொண்டர் படை போதாது என்றும் தமிழ்த் தேசிய இராணுவத்தை அமைக்குமாறும் இந்தியா சொன்ன யோசனையை ஈ.பி.ஆர்.எல்.எஃப் ஏற்றுக்கொண்டது.
கட்டாய ஆட்சேர்ப்பு நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகக் கருதப்படவில்லை. மேலும் மேலும் அதற்கான தேவைகள் கூடிக்கொண்டே போனது.
இது தொடர்பாக ‘முறிந்த பனை’ ஆவணத்தில் கூறப்பட்டுள்ள கருத்தை இங்கு தருதல் பொருத்தமானது.
‘கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் தமிழ்த் தேசிய இராணுவத்தை உருவாக்கியது ஒரு வேளை இந்தியாவின் மன்னிக்க முடியாத தீர்மானமாக அமையக்கூடும்.
மக்களுக்குக் கணக்குக் காட்டியாகவேண்டிய பொறுப்பிலிருந்தும் சட்டபூர்வ நியாயத்திலிருந்தும் விலகிய நிலையில்தான் இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்திய அமைதிப்படைக்கோ அல்லது ஈ.பி.ஆர்.எல்.எஃப் தலைமைக்கோ சட்டபூர்வ நியாயம் அல்லது மக்களின் ஏற்பு என்பதனைச் சம்பாதித்துக்கொள்ள முடியவில்லை.
ஈவிரக்கமற்ற, இழிவுபடுத்தும், கோபமூட்டும் தோணையில் தமிழ்த் தேசிய இராணுவம் அமைக்கப்பட்டது.
வீதிகளிலும், நீண்ட தூரப் பஸ்வண்டிகளிலும், புகையிரதங்களில் பயணித்த இளைஞர்கள் பிடிக்கப்பட்டனர்.
வறுமையான, அநாதரவான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் எங்கேயென்று தேடி, ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கும் ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கும் அலைந்து வேதனைப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான இந்த துர்ப்பாக்கியசாலிகளை எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்குப் போராடிப்பாருங்கள் என துப்பாக்கிகளைக் கொடுத்து அனுப்பினார்கள். இந்திய உட்பட அனைவராலும் அவர்கள் கைவிடப்பட்டனர்.
என்னைச் சுடு.
மற்றவர்களின் விடயத்தில் மிகுந்த அனுதாபத்துடன் தமிழ் இராணுவத்தினர் நடந்துகொண்டிருக்கிறார்கள்.
கோப்பாய்ப் பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்று தமிழ்த் தேசிய இராணுவ உறுப்பினர்கள் மத்தியிலிருந்த அவநம்பிக்கையைப் புலப்படுத்தியது.
வடமராட்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன் ஒருவன், ‘பாஸ்’ இல்லாத காரணத்தால் இந்திய அமைதிப்படையாலும், தமிழ் இராணுவப் படையாலும் தடுத்துநிறுத்தப்பட்டார்.
பின்னர் அவரைப் பார்த்துக்கொள்வதற்கு தமிழ் இராணுவப் படையைச் சேர்ந்த பையன் ஒருவர் நியமிக்கப்பட்டார்.
சுகவீனமாகவுள்ள தன்னுடைய தாயைப் பார்ப்பதற்கு அவசரமாகக் கிளம்பியதால்தான் அனுமதிச் சீட்டை விட்டுவிட்டுவந்தேன் என்று தடுத்துவைக்கப்பட்ட இளைஞன், அப்பபையனிடம் சொல்லியிருக்கிறான்.
அந்தப் பையனும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ‘எனக்கும் அம்மா இருக்கிறா’ என்று மெதுவாக முணு முணுத்திருக்கிறான்.
பின்னர் அந்தப் பையன் அந்த இளைஞனிடம், தனது ஏ.கே. 47 துப்பாக்கியைக் கொடுத்துவிட்டு, ‘நான் உன்னைப் போகட்டால் தண்டனை அனுபவிக்க வேண்டிவரும்.
இந்தத் துப்பாக்கியால் என்னைச் சுட்டுவிட்டு நீ போய்விடு. நீ தப்பியோடிவிட்டாய் என்று அப்போது அவர்கள் நினைப்பார்கள்’ என்று கூறியிருக்கிறான்.
இதைத் தன் செவிகளாலேயே நம்பமுடியாத அந்த இளைஞன், அந்தப் பையன் உண்மையாகத்தான் அப்படிச் சொல்கின்றான் என்பதை உணர்ந்தான். பின்னர் அவன் அப்பையனுடன் பேசி, அவ்வாறு செய்யவேண்டாம் என்று கூறியிருக்கிறான்.
பின்னர் இன்னொரு தமிழ் இராணுவப் படை உறுப்பினர் வந்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த இளைஞனைத் தனது மச்சான் என இந்திய இராணுவத்திடம் கூறி விடுதலை வாங்கிக்கொடுத்தான்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் உள்ளேயே இந்தக் கட்டாய ஆட்சேர்ப்பில் அதிருப்பதி கொண்டிருந்த பலர் தங்களின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் இராணுவ உறுப்பினர்கள் தப்பிச் செல்ல உதவி செய்திருக்கிறார்கள்.
ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கம் தொடர்பாகவும் முறிந்த பனையில் கூறப்பட்டுள்ள கண்ணோட்டம் இது,
‘ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தைப் பொறுத்தவரை இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்ட இராணுவ மயப்போக்கு, பின்னர் புலிகளும், ரெலோவும் வெற்றிகரமாக எழுச்சியடைந்ததும் முதலில் அதனை நம்பிக்கையிழக்கச் செய்தது. கடைசியில் பைத்தியக்கார நிலைக்கு இட்டுச்சென்றது.
ஆரம்பகாலத்திலிருந்தே ஈ.பி.ஆர்.எல்.எஃப் யாழ்ப்பாண சமூகத்தின் ஆதிக்கப் போக்கிற்கு எதிராக எதிர் நீச்சல் போடவேண்டியிருந்தது.
இதன் ஆரம்பகால உறுப்பினர்கள், மாக்ஸிய கருத்தில் ஈடுபாடுகொண்ட திறமையான இளைஞர்களாக இருந்ததோடு, பள்ளிக்கூடங்களை விட்டுவிட்டு கிராமங்களில் அரசியல் செய்பவர்களாயும் இருந்தனர்.
…1987 ஆகஸ்ட் மாதமளவில் இந்தியப் படையின் புடைசூழ ஈ.பி.ஆர்.எல்.எஃப் மீண்டுவந்தபோது விடுதலைப் புலிகளைப் பழிவாங்கவேண்டும் என்ற வீறுடன் மக்கள் மீது கொண்டிருந்த ஆழ்ந்த கசப்புணர்வுடன் செயற்பட ஆரம்பித்தனர்.
இந்தியப் படை இவர்களைப் பாவித்த விதத்தில் நாளடைவில் மக்களைச் சந்தேகிப்பவர்களாகவும், மக்களை வெறுப்பவர்களாகவுமே இவர்கள் மாறினார்கள்.
இந்தியப் படையின் முகாம்களிலிருந்து செயற்படும் அடியாட்களாகவும், உளவாளிகளாகவும் இவர்களை இந்தியப் படை பயன்படுத்தியது.
மாகாண சபையின் மூலம் அதிகாரங்களைப் பெற்ற பின்னரும் அவர்களிடம் போதுமான கட்சி சட்டதிட்டங்கள் காணப்படவில்லை.
விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குப் பின்னர், அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் அவர்கள் இந்திய அமைதிப்படையின் கட்டளைகளுக்கு காத்திருக்க ஆரம்பித்தனர்.
விடுதலையை நோக்கிய நகர்வுகளுக்கு மாறாக, செல்வாக்குப் படைத்த வகுப்பினர் கையில் தாம் முன்னர் அடைந்த துயரங்களைவிட ஈ.பி.ஆர்.எல்.எஃப் பிடம் பெரும் துன்பங்களையடைந்தனர்.
பிற்படுத்தப்பட்ட மக்களே அடிவாங்கவும், கொலைகளுக்கும் உடமை நாசத்திற்கும் ஆளாகினர்.
இந்திய அமைதிப்படையினரிடம் பிடிபடுவது, அவர்களுடன் கூட்டுச்சேர்ந்துள்ள இந்த மண்ணின் மைந்தர்களிடம் பிடிபடுவதைவிட அதிஸ்டம்மிக்கது என்று மக்கள் கருத ஆரம்பித்தனர்.
இந்திய அமைதிப்படையின் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பங்குகொண்டமை அதற்கு எந்தப் பலமும் இல்லையென்பதுடன், யதார்த்தம் குறித்த பார்வையின்மையினையுமே பிரதிபலித்தது.
(தொடர்ந்து வரும்)
(அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்-
தொகுப்பு : கி.பாஸ்கரன்-சுவிஸ்)
குருதியில் தோய்ந்த வெள்ளையுடை.. !! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 136)