ஆர்.கே நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க பிரசாரத்தில் அனைவரின் கவனத்தையும் வகைதொகையின்றி ஈர்த்திருக்கிறார் தென்சென்னை மாவட்டத்தின் 111-வது வார்டு கவுன்சிலர் கற்பகம். காரணம்? இவர் அணிந்திருக்கும் கம்மல், செயின், மோதிரம் என அனைத்திலும் ஜெயலலிதா, ஜெயலலிதா, ஜெயலலிதாதான்!
‘‘எம்.ஜி.ஆர்னா எனக்கு மட்டுமில்ல, எங்க குடும்பத்துக்கே உயிர்! அ.தி.மு.க ஆரம்பிச்ச காலத்துல இருந்தே கட்சியில இருக்கோம்.
எம்.ஜி.ஆர் மேல வெச்சிருந்த பாசத்தையும் பக்தியையும் அப்படியே அம்மாகிட்ட கொடுத்துட்டோம். என் மூச்சு, உயிர், உடம்புல ஒடுற ரத்தம் எல்லாமே அம்மாதான்!’’ ஆர்வமும் அவசரமுமாக அம்மா புராணம் பாடியபடி ஆரம்பித்தார் கற்பகம்.
‘‘ ‘அம்மாவை ஊரெல்லாம் மோதிரமா போட்டுதான் சுத்துறாங்க. நீ ஏன் கம்மல் செஞ்சு காதுல மாட்டிக்கக் கூடாது?’னு என் தம்பிதான் இந்த ஐடியாவைக் கொடுத்தான்.
கம்மலோட ஒரு தடவை அம்மாவை நேர்ல சந்திச்சேன். உத்துப் பார்த்து சின்னதா சிரிச்சாங்க. அந்தச் சிரிப்பு ஒண்ணு போதும். உலகமே என்னை உத்துப் பார்த்த மாதிரி ஒரு சந்தோஷம். சும்மா பேட்டிக்காக சொல்றேன்னு நினைச்சுடாதீங்க.
வாய்ப்பு கிடைச்சா, உடம்பு முழுக்க ‘அம்மா’வைப் பச்சை குத்திக்க ஆர்வமா இருக்கேன். அம்மாவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்காம சேவல் சின்னத்துல இருந்தப்பவே ‘சேவல்’ பொறித்த மோதிரத்தை மாட்டிக்கிட்டேன். இதைப் பார்த்தீங்களா? பத்து வயசு இருக்கும்போது குத்திக்கிட்டது’’ என கையில் பச்சை குத்திய இரட்டை இலை சின்னத்தைக் காட்டிவிட்டுத் தொடர்ந்தார்.
‘‘பத்து வயசுப் புள்ளைக்கு ஒரு விபரமும் தெரியாதுதானே? ஆனா, எனக்கு ‘அம்மா’வைத் தெரியும். அம்மா மாதிரி தைரியமா, பயப்படாம வாழணும்னு தெரியும். அன்னைக்குப் பச்சை குத்தும்போதே வலிக்கும்னு பல பேர் என்னைப் பயமுறுத்தினாங்க.
‘அம்மானு சொல்லிட்டுக் குத்துங்க. எனக்கு பயமெல்லாம் போய் தன்னால தைரியம் வந்துடும்’னு சொல்லி வலுக்கட்டாயமா பச்சை குத்திக் கிட்டேன்.
இப்போ எனக்கு 50 வயசு. கல்யாணம் முடிஞ்சு மூணு புள்ளைங்க இருக்கு. ஒரு கட்டத்துல புருஷனா, அரசியாலானு கேள்வி வந்தப்போ, எனக்கு அரசியல்தான் வேணும்னு வந்துட்டேன்.
போனமுறை கவுன்சிலர் தேர்தல்ல வெற்றி வாய்ப்பை இழந்தேன் (தோத்துட்டேன் என்று சொல்ல மாட்டாராம்!).
இந்த முறை ஜெயிச்சு, தி.மு.க கோட்டையாக இருந்த ஆயிரம்விளக்கு பகுதியை அ.தி.மு.க கோட்டையா மாத்துனதுல ரொம்ப சந்தோஷம்’’ என்று ஹேப்பியானவர் அடுத்தடுத்த விஷயங்களுக்குத் தாவினார்.
‘‘அம்மாவை ‘நாளைய பிரதமர்’னு வர்ணிக்கிறாங்க. ஆனா, உலகத்துக்கே பிரதமர் ஆகக்கூடிய அத்தனை தகுதியும் (?!) அம்மாகிட்ட இருக்கு!’’ என்று முடிக்க நினைத்தவர், ‘‘முக்கியமான விஷயத்தை மறந்துட்டேன்.
லேட்டஸ்ட்டா அம்மா படம் போட்ட மூக்குத்தியும் செஞ்சுட்டேன். ஆர்.கே.நகர்ல அம்மா ஜெயிச்சதும், கார்டனுக்கு வாங்க… என்னுடைய ‘அம்மா மூக்குத்தி’யைப் பார்க்கலாம்’’ என்கிறார் சீரியஸாக!