சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணம், தற்கொலையே என நிபுணர் குழு அறிக்கை அளித்திருப்பதாக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த சித்ரா கடந்த டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நசரத்பேட்டையில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. சித்ராவைத் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை டிசம்பர் 14ஆம் தேதி காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஹேம்நாத் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தன் மனுவில், தொடர்களில் நடிக்கக் கூடாது என சித்ராவை வற்புறுத்தியதாகவும் அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும் தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.
தனக்கும் சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
ஹேம்நாத்தின் இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சித்ரா தூக்கிலிட்டே தற்கொலை செய்து கொண்டதாக நிபுணர் குழு அறிக்கை கூறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஹேம்நாத்தின் ஜாமீன் கோரும் வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இது தொடர்பான நிபுணர் குழு அறிக்கையை வியாழக்கிழமைக்குள் எழுத்து மூலமாக தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.