திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் இளம்பெண்ணும், சிறுவனும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கொலை செய்யப்பட்டார்கள்? என்ற விபரம் தெரியாததால் ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி. ஜானகிராமன் தலைமையில் இடையக்கோட்டை இன்ஸ்பெக்டர் பரமசிவம், செம்பட்டி இன்ஸ்பெக்டர் பாலகுமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அப்போது பெரம்பலூர் அருகே உள்ள குன்னம் மூங்கில்பாடி என்ற இடத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் தனது அக்காவை காணவில்லை என்று தேடி வந்தார்.
போலீசார் அவரிடம் விசாரித்தபோது கொலை செய்யப்பட்டு கிடந்தது அவரது சகோதரி அனிதாவும்(27), அவரது மகன் வசந்த்(5) என்றும் தெரியவந்தது. கள்ளக்காதல் விவகாரத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அனிதாவின் கள்ளக்காதலன் சேடப்பட்டி அருகே கொண்டமாநாயக்கன் கோட்டையை சேர்ந்த செல்வன்(வயது 24) என்ற வாலிபரை போலீசார் தேடி வந்தனர். போலீசில் பிடிபடாமல் தலைமறைவாக இருந்த அவர் நேற்று பச்சமலைகோட்டை கிராம அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்தார். அவர் செல்வனை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைத்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன் விபரம் வருமாறு:–
வேடப்பட்டி அருகே உள்ள கொண்டமாநாயக்கன் கோட்டையை சேர்ந்தவர் காமாட்சி. இவரது மகன் செல்வன். கடந்த 15 வருடங்களுக்கு முன் இவர்கள் குடும்பத்தோடு திருப்பூரில் குடிபெயர்ந்தனர். செல்வன் கணபதிபாளையத்தில் உள்ள ஒரு கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் டெய்லராக வேலைபார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பெரம்பலூர் குன்னம் மூங்கில்பாடி கிராமத்தை சேர்ந்த அனிதாவும் டெய்லராக வேலை பார்த்துவந்தார். அனிதாவின் கணவர் சுரேஷ் அங்கு சூப்பர்வைசராக இருந்தார்.
அனிதா – சுரேஷ் தம்பதியினருக்கு வசந்த்(5) என்ற மகனும், வசந்தி(3) என்ற மகளும் உள்ளனர். வசந்தி குன்னம் மூங்கில்பாடியில் உள்ள பாட்டி வீட்டில் வளர்கிறாள். மகன் வசந்த்வுடன் அவர்கள் திருப்பூரில் தங்கியிருந்தனர்.
அப்போது வேலைபார்க்கும் இடத்தில் அனிதாவுக்கும், செல்வனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துவந்தனர்.
இந்த விஷயம் தெரியவரவே சுரேஷ் மனைவி அனிதாவை கண்டித்தார். எனினும் அவர்களது கள்ளத்தொடர்பு நீடித்தது. இதனால் மனமுடைந்த சுரேஷ் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு மனைவியை விட்டு பிரிந்து சென்றார். இது கள்ளக்காதல் ஜோடிக்கு வசதியாகபோனது.
அதன்பின்னர் அனிதா கள்ளக்காதலன் செல்வனுடன் குடும்பம் நடத்தி வந்தார். செல்வன், அனிதா வீட்டிற்கு வரும்போது அவரது நண்பர்கள் வீரபாண்டி, சுந்தர், ஆகியோரும் வருவதுண்டு. அப்போது அவர்களுடனும் அனிதாவிற்கு நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது.
செல்வனின் நண்பர்கள் 2 பேரும் அடிக்கடி அனிதாவுடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். இது செல்வனுக்கு பிடிக்கவில்லை. கள்ளக்காதலி அனிதாவை எச்சரித்தார். எனினும் அவர் அவர்களுடன் நெருங்கி பழகி வந்தார். இதனால் செல்வன் – அனிதா இடையே அவ்வப்போது சிறு, சிறு சண்டைகள் நடந்து வந்தன.
செல்வனின் நண்பர்கள் அனிதா, தங்களிடம் பேசியதை செல்போனில் ரிக்கார்டு செய்து செல்வனுக்கு காட்டியுள்ளனர். நண்பர்களுடன் தனது கள்ளக்காதலி உல்லாசம் அனுபவித்து இருக்கலாம் என்று சந்தேகப்பட்டதால் கோபத்தில் உச்சத்துக்கு சென்ற செல்வன் அனிதாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
கடந்த மாதம் 29–ந்தேதி மகனுடன் சொந்த ஊருக்கு சென்ற அனிதா 31–ந்தேதி திருப்பூர் திரும்பினார். அன்றைய தினம் தனது ஊரில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு செல்வோம் என்று கூறி செல்வன் அனிதாவை அவரது மகனுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார். வரும் வழியில் ஆத்தூர் காமராஜர் அணை அருகே சற்று நேரம் ஓய்வெடுத்தனர்.
அப்போது அனிதா, தனது நண்பர்களுடன் நெருங்கி பழகும் விஷயம் தொடர்பாக செல்வன் பேசினார். இதனால் அவர்களிடையே சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த செல்வன் கல்லால் தலையை தாக்கி அனிதாவை கொலை செய்தார். பின்னர் சிறுவன் வசந்தையும் கல்லால் தாக்கி கொன்றார்.
2 பேரின் உடல்களையும் தனித்தனியே புதரில் வீசி பெட்ரோல் ஊற்றி அடையாளம் காணமுடியாதவாறு எரித்து விட்டு தலைமறைவானார். மேற்கண்ட தகவல்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் கைது செய்யப்பட்ட செல்வனை திண்டுக்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
நன்றி
மாலை மலர்