“
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து நடத்திய பொதுக்குழுவில், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியை ரத்துசெய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு, சசிகலா எந்தவித பதிலும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். தற்போது, 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரன் ஆகியோர்மீது சசிகலா கோபத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுக்குழுவில் அ.தி.மு.க வின் தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவைத் தேர்ந்தெடுத்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும்தான், அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளனர்.
சசிகலாவின் பதவி விவகாரம், தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் நிலுவையில் இருக்கும்நிலையில், அவசரகதியில் சசிகலாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, ஓ.பன்னீர்செல்வம் முக்கியக் காரணமாக இருந்தாலும், அதற்குப் பின்னணியில் கொங்கு மண்டல டீம் உள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில், கொங்கு மண்டலம்தான் ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்குக் கைகொடுத்தது.
இதனால், கொங்கு மண்டலத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய அமைச்சர் பதவிகள் கொடுத்தார் ஜெயலலிதா. இதனால், அ.தி.மு.க.வில் கொங்கு மண்டலத்தின் பலம் அதிகரித்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு முதல்வர் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதை சசிகலா விரும்பவில்லை. சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஏற்பட்ட மோதலில் அ.தி.மு.க. இரண்டு அணிகளானது.
ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த நெருக்கடிகளைச் சமாளித்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. ஜெயலலிதாவுடனே இருந்ததால், அ.தி.மு.க நிர்வாகிகளின் மறுபக்கங்கள் சசிகலாவுக்கு நன்றாகத் தெரியும்.
மேலும், அவர்மூலம் அமைச்சர்களானவர்கள், கட்சியில் பதவி பெற்றவர்கள் பட்டியலும் அதிகம். இதனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, சசிகலாமீதும் அதே பயம் கட்சியினருக்கு இருந்தது.
இதனால்தான், சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, அ.தி.மு.க-வின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் சசிகலா தேர்வுசெய்யப்பட்டார்.
ஆனால், சசிகலாவின் விதி, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டணை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்குச் செல்வதற்கு முன்பு, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலா குடும்பத்தினருக்கு விசுவாசமாகவே இருந்தார். இதனால்தான், சசிகலாவால் துணைப்பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரனை ஆர்.கே.நகர் வேட்பாளராக நிறுத்தியதோடு, அவருக்காகத் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது, சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடும் மோதல் நிலவியது. ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டார்.
‘இரட்டை இலை’ சின்னத்துக்கு, தினகரனும் மதுசூதனனும் உரிமை கோரியதால், தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. மேலும், அ.தி.மு.க பெயரைப் பயன்படுத்தத் தடை விதித்து, ஓ.பன்னீர்செல்வத்துக்குப் புரட்சி தலைவி அ.தி.மு.க அணி என்றும் சசிகலாவுக்கு அ.தி.மு.க அம்மா அணி என்றும் பெயர் சூட்டியதோடு, மின்கம்பம், தொப்பி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்த புகாரில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. அ.தி.மு.க-வில் சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே நடந்த போட்டியால், தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.
இந்தச் சூழ்நிலையில், சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சில மாதங்களுக்கு முன் மனம் மாறினார். சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து ஓரம் கட்ட தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துடன் கைகோத்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
சசிகலாவுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்திடம் அஃபிடவிட் தாக்கல்செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மாவட்டச் செயலாளர்கள் மனம் மாறியுள்ளனர்.
சசிகலாவுக்கு எதிராகச் செயல்பட முடிவெடுத்து, சசிகலாவையும் தினகரனையும் கடுமையாக விமர்சித்துவருகின்றனர். அவர்களுக்கு தினகரன், திவாகரன் பதிலடி கொடுத்தாலும், சிறையிலிருக்கும் சசிகலா அமைதியாகவே இருந்தார்.
தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்தபோதுகூட சிறையில் அமைதியாகவே இருந்ததாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது, தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தகவல் சசிகலாவுக்குத் தெரியப்படுத்தியபோது, அவர் தினகரன்மீது கோபமடைந்தாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சிப் பொதுக்கூட்டத்துக்குப் பிறகு, சசிகலாவை நேற்று தினகரன் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்கள் சந்திக்க முடிவுசெய்திருந்தனர்.
ஆனால், அவர்களைச் சந்திக்க சசிகலா விரும்பவில்லையாம். அந்தளவுக்குத் தினகரன்மீது சசிகலா சீற்றத்தில் இருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலாவின் ஆதரவாளர்கள், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு பா.ஜ.க-வின் ஆதரவோடு ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்குப் பல்வேறு நெருக்கடிகளைக் கொடுத்தார்.
அந்தச் சமயத்தில், தன்னுடைய அரசியல் சாணக்கியத்தால் ஆட்சியைக் கவிழவிடாமல் காப்பாற்றினார் சசிகலா. அவர் சிறைக்குச் சென்ற பிறகு, கட்சிப் பொறுப்பு, தினகரனிடமும் ஆட்சிப் பொறுப்பு, எடப்பாடி பழனிசாமியிடமும் கொடுக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தினகரனிடமிருந்து கட்சியைக் கைப்பற்றிவிட்டனர். தினகரனை ஆதரித்த 18 எம்.எல்.ஏ-க்களைத் தகுதிநீக்கம் செய்து, ஜனநாயகப் படுகொலை செய்துள்ளனர்.
சின்னத்தையும், கட்சிப் பெயரையும் பயன்படுத்தத் தடை விதிக்கக் காரணமான ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பதவியைக் காப்பாற்றியிருக்கிறார்.
சசிகலாவைக் கட்சியிலிருந்து நீக்கவும், ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கவும் தர்மயுத்தத்தை நடத்துவதாக ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆட்சியை, ஊழல் ஆட்சி என்று விமர்சித்தனர்.
ஓ.பன்னீர்செல்வத்திடமும் எடப்பாடி பழனிசாமியிடமும் டெல்லி மேலிடம் நடத்திய சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்துவிட்டனர்.
பேசியபடி ஓ.பன்னீர்செல்வத்துக்குத் துணை முதல்வர் பதவியும், கட்சியிலும் அமைச்சரவையிலும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த அணியிலிருந்து மாஃபா. பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக நடப்பதாக மேடையில் பேசுகிறார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் கொங்கு மண்டல டீம், சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம்செய்துவிட்டனர். அவர்களைச் சிக்க வைக்க எங்களிடம் ஆதாரங்கள் இருக்கின்றன.
அதை வெளியிட்டால், இந்த ஆட்சிக்கே ஆபத்து ஏற்படும். மேலும், தினகரனால் 18 எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளன. இதனால், தினகரன்மீது சசிகலா கோபத்திலிருக்கிறார். இதனால்தான் தினகரனை சசிகலா நேற்று சந்திக்கவில்லை” என்றனர்.