கடந்த பத்து பதினைந்து நாட்களாக தெரிந்தவர் தெரியாதவர் என எல்லோராலும் ‘என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா…’ என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்த அமலா போல்-விஜய் திருமண முறிவு விவகாரம் அடுத்தக் கட்டத்தை எட்டியுள்ளது.
இவருவரும் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்ய நீதிமன்ற படிகளில் ஏறிவிட்டார்கள். இருவரும் குடும்பநல நீதிமன்றத்தில் அளித்திருந்த மனுவில் உள்ள ஒரு வசனத்தை படித்ததும் மெல்லிய அதிர்ச்சி ஒன்று நமக்கு ஏற்படுகின்றது.
‘எங்கள் இருவருக்கும் 2014 ஜூன் மாதம் 10 திகதி திருமணம் நடந்தது. ஒரு வருடத்திலேயே எங்களுக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2015 மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் பிரிந்து தனித்தனியாக வாழ்கிறோம்’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு மேலாக இவர்கள் பிரிந்து வாழ்ந்துள்ளதாக அவர்களது அளித்த மனுவின் மூலம் உறுதியாகிறது. ஆனால் கடந்த வருடம் நடந்த இரு நிகழ்வுகள் நிச்சயம் நமக்கு ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றன.
2015ஆம் ஆண்டு எப்ரல் மாதம் 6ஆம் திகதி, (இவர்கள் பிரிந்து வாழ ஆரம்பித்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்த திகதியிலிருந்து அடுத்த மாதம்) விஜய் இயக்கிய ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது.
அந்தவிழாவில் உற்சாகமாக கலந்துகொண்ட அமலா போல், விஜய்யை பற்றி மேடையில் பேசும் போது, ‘விஜய்கிட்ட ஒரு கெட்ட பழக்கம் இருக்கு.. விடுமுறைக்காக எங்கேயாவது போனால்கூட கதை சொல்லிட்டே இருக்கும்’ என்று செல்லமாக பேசினார்.
இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், ‘சீக்கிரம் குழந்தைக்கு ரெடி பண்ணுங்க’ என ஏ.எல்.விஜய்யிடம் கூறி சிரித்தபோது அமலா போலின் முகம் மாறியதை எத்தனை பேர் கவனித்தார்களோ..?
இது இவ்வாறு இருக்க, கடந்த ஓகஸ்ட் மாதம் நடிகர் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜின் திருமண வரவேற்பு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியிலும் கூட தங்களது கருத்து வேறுபாடுகளை மறைத்துக்கொண்டு தம்பதிகளாக வந்து மணமக்களை வாழ்த்தினார்களே‚.
ஆக, தங்களது கருத்து வேறுபாடும் பிரிவும் உடனடியாக யாருக்கும் தெரிவதற்கு, இருவருமே விரும்பாததால் தான் இப்படி ஒரு ஒற்றுமை நாடகம் ஆடியுள்ளனர் போல.
ஆனால், ஏ.எல்.விஜய்யின் தந்தை, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி காரணமாக இவர்கள் பிரிவு வெளியே தெரியவர, வேறுவழியின்றி தற்போது நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.