ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கி எடுத்துள்ளது சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த ஐ.டி.பெண் ஊழியர் சுவாதியின் கொலை!
இக்கொலைக்கான காரணம் குற்றவாளி பற்றிய தேடல்கள் என்பவை ஒருபுறமிருந்தாலும் சுவாதி கொல்லப்படுவதை வெறுமனே வேடிக்கை பார்த்த 150 பேருமே குற்றவாளிகள் எனக் கருத வேண்டியிருக்கிறது?
சென்னை சூளைமேடு தெற்கு கங்கையம்மன் கோயில் முதல் தெருவைச் சேர்ந்தவர் சுவாதி. 24 வயது இளம் பெண்ணான இவர் சென்னையை அடுத்து பரனூரிலுள்ள இன்போசிஸ் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
வேலைக்குச் செல்வதற்காக சென்னை பீச்சில் இருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயிலில் காலை 6.45 மணிக்கு பயணிப்பது வழக்கம். கடந்த ஜூன் 24 ஆம் திகதி வழக்கம் போல அலுவலகம் செல்வதற்காக நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வந்தவருக்கு அதுவே இறுதிப் பயணமாகிவிட்டது.
அன்று காலை 6.30 மணிக்கு சுவாதியை தன் ஸ்கூட்டரில் வழக்கம் போல ரயில் நிலையம் அருகே இறக்கிவிட்டார் அவரது தந்தை சந்தான கோபாலகிருஷ்ணன். இவர் மத்திய அரசு நிறுவனமான இ.எஸ்.ஐ.நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
ரயில் நிலைய படிக்கட்டில் ஏறி 2 ஆவது நடைமேடைக்கு வந்த சுவாதிக்கு எமன் மனித உருவில் காத்திருப்பது தெரிந்திருக்கவில்லை. நடைமேடையிலிருக்கும் நாற்காலியில் வந்து அமர்ந்தார். இரண்டொரு வினாடியில் அவர் அருகில் வந்து நின்ற ஒரு இளைஞனைப் பார்த்ததும் எழுந்து நின்றார்.
அக்கொலையாளி,சுவாதியை கழுத்தில் ஒரு வெட் டும் கன்னத்தில் இரண்டாவது வெட்டும் வெட்டிவிட்டு ஓடிவிட்டான். சுவாதியின் தாடையில் 4 இன்ச் ஆழத்தில் அழுத்தமாக விழுந்த வெட்டினால் பற்கள் சிதறி நாலா பக்கமும் தெறிக்கிறது.
இரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சரிகிறார் சுவாதி. இரத்தத்தை உறைய வைக்கும் இவ்வளவு காட்சிகளையும் அப்போது நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் குழுமியிருந்த 150க்கும் மேற்பட்டவர்கள் சினிமாப்படம் பார்ப்பது போல் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.
ஒருவர் கூட இக்கொலைப் பாதகச் செயலைத் தடுக்கவோ, தப்பித்து ஓடிய அந்த இளைஞனை விரட்டிப் பிடிக்கவோ முன்வரவில்லை.
சென்னை பீச் முதல் செங்கல்பட்டு வரை செல்லும் ரயில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு 6.46 மணிக்கு வந்து நின்றது.
அதில் ஏறியவர்கள் மட்டும் 100 க்கு மேல். அதிலிருந்து இறங்கியவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள். எதிர்புறத் தண்டவாளத்தில் பீச் வரை செல்லும் ரயிலுக்கு 50 பேராவது காத்திருப்பார்கள்.
கொலை நடந்தபோது மணி 6.40. சுவாதி செல்ல வேண்டிய ரயிலில் பயணிக்கக் காத்திருந்த 100க்கும் மேற்பட்டவர்கள் அந்தக் கொலையாளியைப் பார்த்திருக்கக் கூடும். ஒருவர்கூடத் தனது மொபைல்போனில் படம் எடுக்கத் துணியவில்லை.
அங்கே பிஸ்கட், டீ, டிபன் விற்கும் நான்கு கடைகளின் ஊழியர்களும் கூட அதை வேடிக்கைதான் பார்த்திருக்கின்றனர்.
அவர்கள் அனைவரும் கருமமே கண்ணாக வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.
அதில் பத்துப் பேராவது அவனைத் துரத்தி இருக்கலாம். துரத்திக்கொண்டே ரயில் தண்டவாளத்தில் இருக்கும் ஜல்லிக்கற்களை எடுத்து வீசியிருக்கலாம். ஆனால் அனைவரும் தாங்கள் வேலைக்குச் செல்வதிலேயே குறியாக இருந்து ரயில் ஏறிச் சென்றுள்ளனர்.
கொலை நடந்ததிலிருந்து காலை 9 மணிவரை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சுவாதியின் சடலம் இரத்த வெள்ளத்தில் நடைமேடையிலேயே கிடந்துள்ளது. அவ்வுடலில் போர்த்தக்கூட ஒரு போர்வை இல்லை.
இது தொடர்பாக சென்னை நகர பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மூன்று போன் அழைப்புகள் மட்டுமே சென்றிருந்தன. அதில் ஒன்று கொலை நடந்து பத்து நிமிடம் கழித்துச் சென்ற போன் அழைப்புத்தான் முதல் தகவல்.
ஆனால் பேஸ் புத்தகத்திலும் டுவிட்டரிலும் வாய் கிழியப் பேசும் புரட்சி எலிகள் அதே ரயில் நிலையத்தில் நின்றிருக்கலாம்.
அவர்களில் பத்துப் பேர் ஐ.டி. ஊழியர்களாக இருக்கமாட்டார்களா? அதே மகேந்திரா சிட்டிக்கு பயணம் செய்யும் ஐ.டி. பெண் ஊழியர்கள் இங்கு இருந்திருக்க வாய்ப்பில்லையா?
ஆனால் மறுநாள் அனுதாபம் தெரிவித்து மெழுகுவர்த்தி கொழுத்தவும் ஐ.டி.ஊழியருக்கு பாதுகாப்பு இல்லை என்று இணையதளங்களில் பொங்கித் தீர்க்கவும் மட்டும் முடிகிறது.
அங்கே வேடிக்கை பார்த்த ஒவ்வொருவரும், கொலையாளியைத் துரத்திச் செல்ல முடியாத ஒவ்வொருவரும் குற்றவாளிகள் தான்.
அங்கே வேடிக்கை பார்த்து மரண சாட்சிகளாக நின்றவர்கள் யாரும் எதையும் தெரிவிக்காததால் சாட்சிகளைத் தேடுவதில் பொலிஸார் சிக்கித் திணறினர். விசாரணைக்கு உறுதுணையாக கிடைத்திருந்தது சில சி.சி.டி.வி பதிவுகள் மட்டும் தான்.
சம்பவ தினத்தன்று காலை 6.32 மணிக்கு ரயில்வே பார்டர் சாலை வழியாக கொலையாளி நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் வருவதும் கொலையைச் செய்து விட்டு 6.42 மணிக்கு அவன் மின்னல் வேகத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் ஓடுவதும் ஒரு வீட்டின் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
சௌராஷ்டிரா நகர் 7ஆவது குறுக்குத் தெரு வழியாக 6.43 மணியளவில் அதே நபர் நடப்பதும் மற்றொரு வீட்டின் சி.சி.டி.வி பதிவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக விசாரணை அதிகாரி ஒருவரிடம் பேசியபோது சுவாதி கொலை செய்யப்பட்டபோது நேரம் காலை 6.40. அவர் ரயில் நிலையத்தில் இருந்தது வெறும் 10 நிமிடங்கள் தான். இந்தப் பத்து நிமிடத்தில் தான் இக்கோரக் கொலை நிகழ்ந்துள்ளது.
சுவாதியைக் கொலை செய்த நபர், சுவாதி எத்தனை மணிக்கு வருவார்? எங்கே நிற்பார்? எந்த ரயில் பெட்டியில் ஏறுவார் என்பதை எல்லாம் துல்லியமாகக் கவனித்து வைத்துள்ளான்.
கொலையைச் செய்துவிட்டு எந்த வழியாகத் தப்பித்துச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்து வைத்துள்ளான்.
நிச்சயமாகச் சுவாதியை சிறிது காலம் பின்தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை அறிந்தவனாகத்தான் இருக்க முடியும்.
இந்த ஏரியாவின் சந்து பொந்துகளும் அவனுக்குத் தெரிந்துள்ளன. தப்பிச் செல்பவன் அவ்வப்போது கைக் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தை அறிந்து கொள்கிறான். இதெல்லாம் அவன் சுவாதியை கொலை செய்யும் நோக்கோடு வந்துள்ளான் என்பதை ஊர்ஜிதமாக்குகிறது. இது திட்டமிட்ட படுகொலைதான் என்றார்.
இக்கொலைக்கு ஆயிரம் காரணங்களைச் சமூகப் போராளிகளும் மீடியாக்களும் பரப்பி வருகிறார்கள்.
ஒருதலைக் காதலால் கொலை, சி.சி.டி.வி. இல்லை, காவலர்கள் இல்லை, இருந்திருந்தால் தடுத்திருக்க முடியும் என்று பலவாறு சொல்லப்பட்டாலும், சுவாதி கொல்லப்படுவதற்குக் காரணம் அன்று ரயில்வே நிலையத்தில் வெறும் காட்சிப் பொருளாக இக்கொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அந்த 150 க்கும் மேற்பட்டவர்கள்தான்.
கொலையாளி தன் கத்தியை எடுத்து சுவாதியை வெட்டிய போது யாராவது தடுத்திருக்க வேண்டாமா?
குறைந்தபட்சம் எதிர்த்துச் சத்தம் போடக்கூடவா இம்மனிதர்களுக்குத் தைரியம் இல்லாமல் போய்விட்டது? சுவாதி கொல்லப்பட்ட பின்பு அடுத்த சில நிமிடங்களில் வந்து நின்ற ரயிலில் அனைவரும் ஏறி வேலைக்குப் போய்விட்டார்கள்.
அடுத்தடுத்து ரயில்கள் வந்து, நின்று, சென்ற வண்ணம் இருந்தன. அதில் எத்தனை பேர் சுவாதிக்கு உதவ முன்வந்தார்கள் என்றால் ஒருவருமே இல்லை. எல்லோரும் வெறுமனே இரத்தம் தோய்ந்த சுவாதியைப் பார்த்துவிட்டுத்தான் சென்றார்கள். அது வெட்கக்கேடு அன்றி வேறில்லை.
பிடிங்க, பிடிங்க என்று இரண்டு பேர் கூக்குரலிட்டபடி அவனைத் துரத்தி இருந்தால் கூட ஒரு கும்பலே அவன் பின்னால் ஓடியிருக்கும். அந்த முதல் இரண்டு ஜென்மங்கள் யார் என்பதில் தான் அங்கிருந்தவர்களுக்குக் குழப்பம் போலிருக்கிறது.
சுவாதி கொலை நடந்த இடத்தில் எத்தனை ஆண் மகன்கள், குறிப்பாக எத்தனை இளைஞர்கள் இருந்தார்களோ தெரியாது.
ஆனால் அவர்கள் அத்தனை பேரும் இச்சமுதாயத்தில் பிறந்ததற்காக வெட்கப்பட வேண்டியவர்கள். அதுமட்டுமன்றி சில அரசியல்வாதிகள் கூட சுவாதியின் இழவு வீட்டுக்குச் சென்று அதி லும் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டார்கள். பெண் களுக்குத் தமிழகத்தில் பாதுகாப்பில்லை என்றார்கள். கொலையாளி பிடிபட்டதும் ஏமாற்றமடைந்தார்கள்.
அதுதான் அனுதாப அரசியல். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சுவாதி கொலைக் குற்ற வாளியைத் தமிழகப் பொலிஸார் கைதுசெய்தனர். பொலிஸாருக்குப் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் சார்பாகப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பேஸ் புக், வாட்ஸ் அப் மூலம் நட்பாகி ஒரு தலைக் காதல் சைக்கோவிடம் மாட்டிக்கொண்ட சுவாதிக்கு நேர்ந்த கதி, இனியாவது இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையட்டும்!.
தகவல்கள்: ஷண்