“”என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் “”நீங்கள் நீச்சல் உடையில் நடிப்பீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு நான் வெகுளித்தனமாக, “”ஸ்விம்மிங் ஃபூல் ஸீனில் புடவையிலா நடிக்க முடியும்?” என்று திருப்பிக் கேட்டதைத் தவறாக புரிந்து கொண்டு என்னைப் பற்றித் தவறாகவே எழுதினார்கள்.
ஒரு நடிகரோடு தொடர்ந்து இரண்டு படங்களில் நடித்தேன். படப்பிடிப்பில் அவருடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “”நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமே…” என்று கேட்டார்கள்.
எனக்கு அதிர்ச்சி! சேர்ந்து இருப்பது பாதுகாப்பு என்று சொல்லுவார்கள். ஆனால், ஒரு பெண் தனிமையில் இருப்பதுதான் பாதுகாப்பு என ஆகி விட்டது. என்ன விநோதம் பாருங்கள்…
எனவே, ஹீரோக்களோடு பேசாமல் இருப்பதும், ஒரு இடைவெளியை உருவாக்கிக் கொள்வதும்தான் இங்கே பாதுகாப்பு என்று கருதி ஒதுங்கி இப்போது நான் தனிமையில் இருக்கிறேன்.”
மர்ம மனிதன் தாக்குதலில் தொடங்கி… குடல்வால் அறுவை சிகிச்சை, சித்தார்த்திலிருந்து ரெய்னா வரை தொடர்ந்து வரும் கிசுகிசுக்கள் பற்றிய கேள்விக்கு ஸ்ருதிஹாசனின் பதில் இது…
ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பரபரப்பான ஹீரோயினாக இருந்து கொண்டு… “”தனிமையில் இருக்கிறேன்” என்று சொன்னால் நம்ப முடியவில்லையே…?
நேரம் ஒருவரை எப்போது, எப்படி, எங்கு நிறுத்தும் என்பது யாருக்குத் தெரியும். என் கோபத்தால் எத்தனையோ பேரை நான் காயப்படுத்தி இருக்கிறேன். அதேபோல் என் அன்பைப் புரிந்துகொள்ளாதவர்களால் நானும் நிறைய காயப்பட்டிருக்கிறேன்.
அன்பு, கோபம் இரண்டுமே என்னை உயரத்துக்குக் கொண்டு சென்ற பலமாகவும், பெரும் பள்ளத்தில் உருட்டி விட்ட பலவீனமாகவும் இருந்திருக்கிறது.
என் கோபத்தின் உச்சத்தைப் பார்த்து, அதை என் திமிர் என நினைக்கிறவர்கள், என் எதிரியாகி விடுகிறார்கள். என் கோபத்தின் ஆழத்தைப் பார்த்து, அதை என் மனம் பட்ட காயம் என உணர்கிறவர்கள் என் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்கிற நண்பர்களாகி விடுவார்கள்.
கோபம் எனக்கு வரமாகவும், சாபமாகவும் இருந்து வந்திருக்கிறது. அதனால், இப்போது என் பிரச்னைகளை நானே எதிர் கொள்கிற அளவுக்கு தைரியம் வந்திருக்கிறது.
முதல் பிரச்னை வந்த போது கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டேன். இப்படியெல்லாம் பிரச்னை வருமா? என யோசிக்கிற போதே அடுத்தடுத்த பிரச்னைகள் பற்றி நடுக்கம் வரும். எல்லாவற்றுக்கும் எனக்குள் ஒரு பதில் கருத்து இருக்கும்.
அதை வெளிப்படுத்தும் போது இன்னும் பிரச்னை. நான் நடிக்க வந்தேன்… ரசிகர்கள் நினைப்பதைக் கொடுக்க வந்தேன் என்று நினைக்கிற போது, அமைதி தானாகவே வந்து விடுகிறது.
இளம் வயதில் இவ்வளவு பக்குவமாகப் பேசுகிறீர்களே…?
நான் எப்போதும் விளையாட்டுப் பிள்ளையாக இருந்ததே இல்லை. அப்பா, அம்மா இருவருமே சினிமாவுக்குள் இருந்ததால், எப்போதும் அது பற்றிய சிந்தனைகள், செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதை உணர்ந்து வந்திருக்கிறேன்.
சிறுவயதில் அப்பா, “”என்னவாகப் போகிறாய்?” என்று கேட்டதும்… “”நிறைய மியூசிக் ஆல்பங்கள் பண்ணுவேன்…” என்று சொன்னேன். ஆனால், நடிப்பேன் என நினைத்துப் பார்க்கவில்லை.
இப்போது இருக்கிற இந்த இடம், நினைத்துப் பார்க்காத ஒன்று. என் வயதைவிட இரண்டு, மூன்று மடங்கு கூடுதல் வயதுடைய ஹீரோக்களுடன் நடிக்க வேண்டியுள்ளது.
அப்படி ஒரு வயதுக்கு மீறிய சூழலில் பணிபுரிவதால் கூட இந்தப் பக்குவம் வந்திருக்கலாம் அல்லது பல அதிர்ச்சிகளால் தேர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் ரசிகர்கள் உங்களைப் பார்த்து ஆண்டுகள் சில ஆகி விட்டன… “ஏழாம் அறிவு’ பரபரப்பு அறிமுகத்துக்குப் பின் கிசுகிசு, அளவுக்கு மீறிய கவர்ச்சிப் படங்கள் என செய்திகளில்தான் உங்களைக் கடந்து போக முடிகிறது…?
எப்போதும் போலவே இருக்கிறேன். எந்த மாற்றமும் என்னிடம் இல்லை. செய்வதெல்லாம் சரியாக இருக்கிறது என்ற மனசுதான் என்னைக் கடத்திப் போகிறது.
கொஞ்சம் வளர்ந்திருக்கிறேன் அவ்வளவுதான். அதனால் சினிமாவைப் பற்றிய புரிதல்கள் உள்ளுக்குள் அதிகமாக வந்திருக்கின்றன.
சினிமாவுக்கு வந்த முதல் நாள் தொடங்கி இப்போது உங்களிடம் பேசுகிற இந்த நொடி வரைக்கும் சினிமாதான் எல்லாம். என் தோற்றப் பொலிவைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும், எந்தளவுக்கு ஒவ்வொரு நாளும் என்னை மெருகேற்ற நான் முயற்சிக்கிறேன் என்பது.
கதாபாத்திரங்கள்தான் என்னை முடிவு செய்கின்றன. “ஏழாம் அறிவு’, “3′ படங்கள் எனக்கு பிடித்திருந்தன. இரண்டு படங்களும் எனக்கு ரொம்பவே முக்கியமானவை.
ஹிந்தி படங்களுக்கு இருக்கிற மார்க்கெட் பெரியது. தெலுங்கு ரசிகர்களின் ரசனை கிளாமருக்கானது. தமிழ் அப்படி இல்லை. கதையைத்தான் பார்ப்பார்கள். “”கொடுத்த காசுக்கு கதை சொல்லு…” என்பதுதான் தமிழ் ரசிகர்களிடம் நான் ஆச்சரியப்படும் விஷயம்.
அதற்காகத்தான் காத்திருக்கிறேன். அப்படித் தேர்ந்த கதைகளில் ஒன்றுதான் “பூஜை.’ தமிழ் ரசிகர்களிடம் ஏற்பட்ட பிரிவை இப்படம் போக்கி வைக்கும்.
நல்ல விஷயம்தான்… “டி டே’ படத்தைத் தமிழில் டப் செய்ய ஏன் எதிர்ப்பு காட்டினீர்கள்… அது தமிழ் ரசிகர்கள் பார்க்கக் கூடாத படமா…?
எந்த மொழிப் படமாக இருந்தாலும் நல்ல படம் என்றால் அது ரசிகர்களிடம் சென்று சேர்ந்து விடும். இந்தியாவின் முக்கிய மொழிகளான தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று சினிமாக்களிலும் நடிக்கிறேன்.
ஹிந்தியில் உருவான “டி டே’ இந்த மூன்று மாநிலங்களிலுமே ஹிந்தியில் ரிலீஸ் ஆகி, ஆயிரக்கணக்கான ரசிகர்களும் அதைப் பார்த்து விட்டார்கள். பிறகு ஏன் அதைத் தமிழில் டப் செய்ய வேண்டும்?
வித்தியாசமான கதைக் களம் அது. அதனால், டப் செய்யும் போது வார்த்தைகளின் பொருள் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அதனால்தான் அதை எதிர்த்தேன். ஆனால், அதை ஒரு சர்ச்சையாக்கி விட்டார்கள். அந்த விஷயத்தில் என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
தெலுங்கு, ஹிந்தி சினிமாக்களில் கிளாமருக்கு கிடைக்கும் வரவேற்புகள் எல்லோருக்கும் தெரிந்ததுதான்… ஆனால் கமலின் மகளாக இருந்து கொண்டு, கதைக்கு எப்போது முக்கியத்துவம் கொடுக்கப் போகிறீர்கள்…?
எனக்கும் நல்ல சினிமா பற்றியக் கனவுகள் நிறைய இருக்கிறது. புதுமைகளைத் தேடும் லட்சியம் ஒரு தாரகமந்திரம் போல் எனக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால், அதற்கான கால, நேரங்கள் இப்போது இல்லை.
ஒரு ஹீரோயினாக எனக்குள் சில ஆசைகள் இருக்கின்றன. அதை இப்போது செய்தால்தான் நல்லது. அதேநேரத்தில், மோசமான வெற்றிகள் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருந்ததில்லை.
ஆனால், கமர்ஷியலாக சில விஷயங்கள் சினிமாவுக்குத் தேவைப்படுகிறது. சில விஷயங்கள் மாறும் போது சினிமா பற்றிய என் நினைப்பும் மாறும். ஹிந்தி, தெலுங்கு சினிமாக்களை விடுங்கள், தமிழில் நான் நடித்த “ஏழாம் அறிவு’ம், “3′ படமும் கதைக்கு முக்கியத்துவம் தந்தவை. அந்த வரிசை இனியும் தொடரும்.
“கமலுடன் நடிப்பது என் கலையுலகக் கனவு…’ என பல ஹீரோயின்கள் கூறும்போது, “உத்தம வில்லன்’ படத்தில் நடிக்க உங்களைக் கேட்ட போது, மறுத்து விட்டீர்களாமே…?
ஆமாம், அதை ரொம்பவே “மிஸ்’ பண்ணிவிட்டேன். வருத்தமாகத்தான் இருக்கிறது. ஏற்கெனவே ஒப்பந்தம் ஆன படங்களை விட்டு வர முடியாத சூழ்நிலை.
அந்தப் படங்களுக்கான கால்ஷீட் ஒதுக்குவதிலேயே ஆயிரம் பிரச்னைகள். அப்படியிருக்கும் போது புதிதாக எப்படி ஒரு படத்தில் கமிட் ஆக முடியும். தொழில் வேறு. உறவு வேறு.
என் அப்பாவுக்காக ஏற்கெனவே கமிட் ஆன படத்தை விட்டுவிட முடியாது. அப்படிச் செய்திருந்தால் அப்பாவே கோபித்து கொண்டிருப்பார். அப்பாவின் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனக்கும் ஆசைதான். இனி, அப்படி ஒரு கதை அமைந்து எல்லாம் கூடி வந்தால் நிச்சயம் நடிப்பேன்.
கமலை பாசமிகு தந்தையாக முன்பு பார்த்த பொழுதுகளுக்கும், ஒரு நடிகையாக இருந்து நடிகராக அப்பாவைப் பார்க்கும் இந்த பொழுதுகளுக்கும் என்ன வித்தியாசம்…?
அப்பாவைப் போல் அனுபவங்கள் மூலமாகத்தான் எதையும் புரிந்து கொள்ள விரும்புகிறேன். குடும்ப உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் ஒரு மகளாக இருந்து பார்த்திருக்கிறேன்.
ஆனால், இப்போது நானும் ஒரு நடிகை. மாதத்தில் மூன்று வாரங்கள் நான் படப்பிடிப்பில் இருக்கிறேன். நான் எங்கே இருக்கிறேனோ, அதுதான் என் அப்போதைய விலாசம்.
சென்னையில் காலை உணவு, மும்பையில் மதிய உணவு, ஹைதராபாத்தில் இரவு ஓய்வு என பயணமாகி கொண்டிருக்கிற நாள்கள் இது.
ஒரு நடிகையாக இருந்து அப்பாவை பார்க்கும் போது அத்தனை ஆச்சரியங்கள் வந்து போகின்றன. எத்தனை சிரத்தை, எத்தனை கஷ்டங்கள் இருந்திருக்கும் அவருக்கு?
50 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருக்கிறார். ஆனால், ஒவ்வொரு நாளும் புதிதாக இருக்கிறார். எந்த நாளிலும் அவருக்கு சலிப்பு வந்ததில்லை. ரசிகர்களின் கை தட்டல் ருசி அவருக்குப் பிடித்து விட்டது.
அதற்காக இன்னும் தீவிரமாகப் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஓர் அருவியில் குளிப்பதைப் போல், இதமான இசையைக் கேட்பது போல், மலையடிவாரத்து மழைச்சாரலை ரசிப்பது போல் என் அனுபவங்களை அவரிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
தங்கை அக்ஷராவும் இப்போது நடிகை… என்னவெல்லாம் டிப்ஸ் கொடுத்தீர்கள்…?
என்னை விட அக்ஷராதான் சூப்பர். அவளுக்கு பால்கி சாரின் படம் ஒரு வரப்பிரசாதம். கூடவே அமிதாப் இருக்கிறார். இது மாதிரி யாருக்கும் முதல் பட வாய்ப்பு அமையாது.
அவளுக்குப் பெரிதாக அறிவுரை எதுவும் சொல்ல வேண்டாம். அவளது யோசனைகள் தனித்துவமாக இருக்கும். அதனால் பயம் இல்லை. அவளை நினைத்து சந்தோஷப்படுகிறேன்.
‘பிளேபாய்’க்கு போஸ் கொடுக்க அடிச்சுப் பிடிச்சு ஓடிவருவாங்க!”