நீலாங்கரை அருகே ஆழ்கடலில் நீந்தியபடி காதல் ஜோடியினர் திருமணம் செய்து கொண்டனர். உறவினர்கள் தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் சின்னத்துரை. பி.ஏ. பட்டதாரி. இவருக்கும் கோவையை சேர்ந்த பி.டெக் பட்டதாரி ஸ்வேதாவுக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்தனர். இருவரும் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் தங்களது திருமணத்தை வித்தியாசமாக ஆழ்கடலில் நீந்தியபடி செய்ய விரும்பினர். இதற்காக சின்னத்துரை தனது உறவினரான புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த ஸ்கூபா டைவிங் ஆழ்கடல் பயிற்சி பள்ளியின் உரிமையாளரான அரவிந்தை அணுகினார்.
அவரது பயிற்சியின்படி நீலாங்கரை அருகே ஆழ் கடலில் 60 ஆழத்தில் சின்னத்துரை-ஸ்வேதா திருமணம் இன்று நடைபெற்றது.
மணமக்கள் இருவரும் திருமண உடை அணிந்து பாதுகாப்பு வசதியுடன் ஆழ் கடலுக்கு படகில் சென்றனர். பின்னர் அவர்கள் ஆக்சிஜன் சுவாசிக்கும் கருவி அணிந்து கடலுக்குள் குதித்தனர்.
ஆழ்கடலுக்குள் இருக்கும் செடிகளில் பூக்களைக் கொண்டு மணமேடை அமைக்கப்பட்டிருந்தது. நீந்தியபடியே இருவரும் மாலைகளை மாற்றிக் கொண்டனர். பின்னர் நீந்தியபடியே மணமகள் ஸ்வேதாவுக்கு மணமகன் சின்னத்துரை தாலி கட்டினார்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த உறவினர்கள் புதுமண ஜோடி சின்னத்துரை-ஸ்வேதா தம்பதிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மணமகன் சின்னத்துரை கூறும்போது, “நான் ஆழ்கடல் டைவிங் பயிற்சி பெற்றுள்ளேன். தற்போது கடலில் அதிக அளவு கழிவுகள் கலந்து மாசு அடைந்து வருகிறது. பொதுமக்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
எனவே கடல் மாசு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்தவும் கடலில் நீந்தியபடி திருமணம் செய்தோம். திருமண வரவேற்பு வருகிற 13-ந் தேதி சோழிங்க நல்லூரில் நடைபெற உள்ளது” என்றார்.