வடக்கு மாகாணத்தில் நுண் நிதிக்கடன் செயற்பாட்டினால் 59 பேர் தற்கொலை செய்துகொண் டுள்ளதுடன் தொடர்ந்தும் மக் கள் அசௌகரியங்களை எதிர் கொண்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமுக அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் அன்ரனி கலிசியஸ் தெரிவித்துள்ளார்.
நுண்நிதிக் கடன்களால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான ஊடக சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வின் பின்னர் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கு நுண்நிதிக்கடன்கள் உதவியாக இருந்தாலும் அதனூடாக பல அசெளகரியங்களை பொது மக்கள் எதிர்கொள்கின்றனர்.
அதாவது வடக்கு மாகாணத்தில் நுண்நிதிக்கடன் செயற்பாடுகளினால் 59 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இதேபோன்று கிழக்கு மாகாணத்தில் 19 வரையான தற்கொலைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவ்வாறு நுண்நிதிக் கடன்களால் அன்றாடம் பல்வேறுபட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும் பொருட்டு எதிர்வரும் 14 ஆம் திகதி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பேரணிகளை முன்னெடுக்கவுள்ளோம். கிளிநெர்சி மாவட்டத்தின் விழிப்புணர்வுப் பேரணி கரடிப்போக்குச் சந்தியில் இருந்து மாவட்ட செயலகம் வரை நடைபெறவுள்ளது.
கடன்பொறிக்குள் சிக்கித்தவிக்கும் மக்கள் கடனை மீளச்செலுத்துவதற்கு இரண்டு வருடங்கள் கால அவகாசத்தை வழங்குவதுடன், அதற்கான வட்டிகளையும் இரத்துச் செய்து மீளச்செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும். கடன்களை உரிய நேரத்தில் திருப்பிச்செலுத்த முடியாமல் வட்டிக்கு வட்டியும் எடுத்த கடன்தொகைக்கு மேலான தொகையை அறவிடுவதை நிறுத்தவேண்டும்,
நுண்கடன் நிதி நிறுவனத்தின் வட்டி வீதங்களைக் குறைக்க வேண்டும், அரச வங்கிகள் ஊடான கடன்களுக்கு நிபந்தனைகளை குறைக்க வேண்டும்.கிராம மட்டங்களில் இருக்கின்ற அமைப்புக்கள் ஊடாக கடன்களைப் பெறுவதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற ஐந்து கோரிக்கைகளை தாம் முன்வைத்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.