ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு சான்று பகிரும் வகையில் 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலின் பாதிப்புகளுடன் எம் கண்முன் அரங்கேரி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளும் உள்ளன.
ஸ்பானிஷ் காய்ச்சலானது, முதல் உலகப்போருக்குப் பின்னர் தோன்றியதுடன் இந்நோய் விரைவாக பரவி உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைபட்ட உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.
இது முதன்முதலில் ஸ்பெயினில் கண்டறியப்பட்டது, எனவே இதற்கு ஸ்பானிஷ் காய்ச்சல் என பெயர் வழங்கப்பட்டது. எனினும் ஐரோப்பாவில் பரவுவதற்கு முன்னர், இவ்வைரஸ் சீனாவில் தோன்றியதாக பரிந்துரைகள் உள்ளன.
இன்புளுவன்ஸா வைரஸின் பிறழ்வான ஸ்பானிஷ் காய்ச்சல், முதல் உலகப் போரின் முடிவில், தோற்றம் பெற்றது.
வைரஸ் தொற்று முதலில் இனங்காணப்பட்ட போது லேசான காய்ச்சல் அறிகுறிகளை காண்பித்தது. அத்துடன் பாதிப்புக்குள்ளானவர்கள் இரண்டு நாட்களில் சுகமடைந்தனர்.
ஆனால் இரண்டாவதாக இவ்வைரஸ் தொற்று ஏற்பட்டபோது மிகவும் ஆபத்தானதாக தோற்றம் பெற்றது. இத்தொற்றுக் காரணமாக நோயாளியின் தோல் நீல நிறமாக மாறுவதுடன், அவர்களின் நுரையீரல் திரவத்தால் நிரப்பப்பட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்தியது.
வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளை உருவாக்கிய சிலமணி நேரங்களிலேயே தொற்றுக்குள்ளானவர் இறக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருந்தது.
கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வில், 1900 களின் முற்பகுதியில் இந்த நோயைக் கண்டறிந்த மருத்துவர்கள், இது ஒரு ‘சிறிய தொற்று’ என்று நிராகரித்தனர், என தெரிவித்துள்ளது.
இதனையடுத்து 1915 ஆம் ஆண்டிலும் வைத்தியர்கள் ஒரு மர்ம நோயை தொடர்பில் எச்சரித்துள்ளனர்.
1915 மற்றும் 1916 ஆம் ஆண்டுகளில் இராணுவ வைத்தியசாலைகளில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸை சேர்ந்த சுமார் 60,000 வீரர்கள் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டதுடன் அவர்களில் பாதிபேர் இறந்து கொண்டிருந்தனர்.
ஆனால் இதன் தாக்கம் அத்துடன் முடிவடையவில்லை, வைரஸ் தொற்று விரைவாக பரவி இராணுவத் தளங்களிலிருந்தும் உலகெங்கிலும் உள்ள மக்களை பேரழிவுக்கு உட்படுத்தியது.
இதனையடுத்து 1917 ஆம் ஆண்டில் ‘சிக்கலான’ சுவாசப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஒரு ‘வழக்கத்திற்கு மாறாக ஆபத்தான நோய்’ பற்றி வைத்தியர்கள் அறிவுருத்தியுள்ளதற்கான ஆதரங்கள் உள்ளதாக வடக்கு பிரான்சின் எட்டாபில்ஸில் உள்ள ஒரு மருத்துவக் குழுவினால் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில், அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பாடசாலைகள், திரையரங்கு மற்றும் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதுடன் குடிமக்கள் முகக்கவசம் அணியவும் உத்தரவிடப்பட்டனர்.
இதனையடுத்து, அமெரிக்காவில் உள்ள சமூக மையங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் நோயுற்றோருக்கான தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டன.
எனினும் உலகளாவிய ரீதியல் 20 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைபட்ட உயிர்களைக் கொன்ற இத்தொற்றுநோய் 1919 இல் கோடைகாலத்தின் வருகையுடன் முடிந்தது.
இந்நோய் தொற்றின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது வண்ணப்புகைப்படங்களாக மாற்றப்பட்டு முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அரசாங்கங்கள் விரைவான நடவடிக்கை எடுக்கத் தவறினால் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், உணவகங்கள் மற்றும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதைக் காண்பிக்கும் இப்புகைப்படங்கள் ஒரு எச்சரிக்கையாக அமையக்கூடும் என அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.