நெதர்லாந்தில் பாரிய தேடுதல் நடவடிக்கையின் போது வெள்ளை வானிற்குள் இருந்து பயங்கரவாத சந்தேகநபர்களை கைதுசெய்வதை காண்பிக்கும் பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது
நெதர்லாந்தில் பயங்கரவாத தாக்குதலிற்கு திட்டமிட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் பலரை கைதுசெய்துள்ள பொலிஸார் பாரிய பயங்கரவாத தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
ஒரு மாத கால விசாரணைகளிற்கு பின்னர் பலரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்டடார்மிற்கு தென்பகுதியில் உள்ள அம்ஹெம் பகுதியிலும் ஜேர்மனி பெல்ஜிய எல்லைகளிற்;கு அருகில் உள்ள வீர்ட் என்ற நகரத்திலும் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் ஆயுதங்களுடன் வாகனங்களை நோக்கி ஓடுவதையும் அதன் பின்னர் அவர்கள் வானிற்குள் இருந்து சந்தேகநபர்களை வெளியே இழுத்து கைதுசெய்வதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
கைதுசெய்யப்பட்ட கும்பலின் தலைவர் ஈராக்கை சேர்ந்தவர் என தெரிவித்துள்ள உள்ளுர் ஊடகங்கள் அவரின் பெயர் ஹர்டி என குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை அவர் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்தும் விதத்திலான தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்காக நிகழ்ச்சியொன்று இடம்பெறும்வேளை தாக்குதலை மேற்கொள்ள அவர்கள் திட்டமிட்டிருந்தனர் தற்கொலை அங்கிகளையும் துப்பாக்கிகளையும் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார்க்குண்டு தாக்குதலை மேற்கொள்ளவும் அவர்கள் திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் 21 முதல் 34 வயதுடையவர்கள் என தெரிவித்துள்ள அதிகாரிகள் அவர்களில் ஈராக்கிய பிரஜை உட்பட மூவர் தீவிரவாத அமைப்புகளுடன் இணைவதற்காக வெளிநாடுகளிற்கு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டவேளை கைதுசெய்யப்பட்டு தண்டனையை அனுபவித்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூவர் துப்பாக்கிகளையும் குண்டுகளை தயாரிப்பதற்கான வெடிமருந்துகளையும் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் என தெரிவித்துள்ள நெதர்லாந்து அதிகாரிகள் ஆயுத பயிற்சிகளை பெறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருந்தன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியதை தொடர்ந்தே விசாரணைகளை துரிதப்படுத்தினோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் சரியான தருணத்தில் செயற்பட்டு பாரிய தாக்குதலை தடுத்துள்ளனர் என நெதர்லாந்தின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஈராக்கிய பிரஜை தங்கியிருந்த வீட்டை ஹெலிக்கொப்டர்களின் உதவியுடன் முற்றுகையிட்ட பொலிஸார் வீட்டை பலவந்தமாக திறக்கசெய்த பின்னர் உள்ளே புகைகுண்டை வீசியுள்ளனர்.