கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைசர்களில் ஒருவரான பசில் ராஜபக்ச இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் போது அரச நிதியை மோசடி செய்துள்ளதாக தெரிவித்து பசில் ராஜபக்ச இன்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன், நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தனது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்ளும் நோக்கில் Top 10 operation என்ற திட்டத்தை பசில் முன்னெடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் என பலர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
அவ்வாறு மோடியில் ஈடுபட்டுள்ளவர்களின் தகவல்களை திரட்டி நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த Top 10 operation திட்டத்தை பசில் ராஜபக்ச முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும், கட்சி பேதமற்ற அதிகாரிகள் மற்றும் அரச சேவை ஊழியர்கள் ஊடாக இந்த செயற்பாட்டிற்கு தகவலை பெற்றுக்கொள்ள கூட்டு எதிர்க்கட்சி எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கிடைக்கும் தகவல்களை சமூக வலைதளங்கள், செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் சுவரொட்டிகள் மூலமாக மக்களிடத்தில் கொண்டு செல்ல, கூட்டு எதிர்க்கட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, பாரிய குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் தற்போது மக்கள் செல்வாக்கை வெகுவாக இழந்துள்ளனர்.
இந்நிலையில், தமது மோசடிகளை மறைத்து புதிய அரசியல் கட்சி என்ற போர்வையில் அரசாங்கத்தை குழப்பும் நோக்கில் இவ்வாறான திட்டத்தினை மேற்கொண்டுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.