செய்தியாளர் கொலையால் மீண்டும் ஒருமுறை உலக நாடுகள் அதிர்ந்துகிடக்கின்றன. இந்த முறை சவுதி அரசாங்கமே `வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரையாளரைத் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளது. ரியாத்திலிருந்து வெளிவரும் `அல்வாட்டன்’ (Al Watan) பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் ஜமால் கஷோகி. `அல்வாட்டன்’ பத்திரிகையில் சவுதி அரசையும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ச்சியாக விமர்சித்து ஜமால் கட்டுரைகள் எழுதினார்.
விளைவு… சவுதியில் அவர் வாழ முடியாத நிலை. உயிருக்கு பயந்து சவுதியிலிருந்து தப்பி அமெரிக்காவில் குடி புகுந்தார். கடந்த ஒரு வருட காலமாக அமெரிக்காவில் ஜமால் வசித்தார்.
அமெரிக்கா சென்ற பின்னரும் ஜமால் சும்மா இருக்கவில்லை. தொடர்ந்து சவுதி அரசுக்கு எதிராகவும் இளவரசருக்கு எதிராகவும் வாஷிங்டன் போஸ்டில் `Global Opinions’ பகுதியில் கட்டுரைகள் எழுதினார்.
ஜமால் கஷோகியின் கட்டுரைகளுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. ஏனென்றால், ஜமாலும் சாதாரண ஆள் இல்லை. ஒசாமா பின்லேடன் உயிரோடு இருந்த போது பலமுறை அவரைப் பேட்டி எடுத்த புகழ்பெற்ற பத்திரிகையாளர்.
ட்விட்டரில் மட்டும் 16 லட்சம் பேர் இவரைப் பின் தொடருகின்றனர். நாட்டை விட்டுப் போனாலும் , `யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு’ போல அமெரிக்காவில் இருந்துகொண்டு சவுதி இளவரசரைக் குடைந்து கொண்டிருந்தார் ஜமால்.
ஏற்கெனவே, திருமணமாகி விவகாரத்துப் பெற்ற ஜமாலுக்கு வயது 59. இந்த வயதில் காதல் வந்து விட்டது. காதல் வடிவில் போதாதக் காலமும் கூடவே வந்தது.
ஜமாலின் காதலி துருக்கி நாட்டைச் சேர்ந்தவர். காதலியைத் திருமணம் செய்து கொள்வதற்காக துருக்கி வந்த, ஜமால் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சில ஆவணங்களை வாங்கச் சென்றார்.
அங்கேதான் வினை ஆரம்பித்தது. இத்தனைக்கும் `தன் உயிர் எப்போது வேண்டுமானாலும் எடுக்கப்படும்’ என்பது ஜமாலுக்குத் தெரியும்.
ஜமாலின் கண்களை காதல் மறைத்துவிட்டது. செப்டம்பர் 28-ம் தேதி இஸ்தான்புல் நகரில் இருந்த சவுதி தூதரகத்துக்குச் சென்ற அவரிடம் அக்டோபர் 2-ம் தேதி மீண்டும் வருமாறு பதில் அளிக்கப்பட்டது.
அப்போதும் ஜமால் யோசிக்கவில்லை. அடுத்த நிமிடமே ஜமால் இஸ்தான்புல் வந்துள்ள தகவல் சவுதி இளவரசரின் பாதுகாவலர்களை எட்டியது.
பத்திரிகையாளர் ஒருவரை தீர்த்துக் கட்ட ரியாத்திலிருந்து 15 கொண்ட ஸ்பெஷல் டீம் இஸ்தான்புல் நகருக்குள் புகுந்தது.
இஸ்தான்புல் நகரைச் சேர்ந்த மேலும் 3 பேர் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அக்டோபர் 2-ம் தேதி சவுதி தூதரகத்துக்குச் சென்ற ஜமாலின் கதை முடிக்கப்பட்டது.
கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு முகம் சிதைத்து கொடூரமான முறையில் ஜமால் கொல்லப்பட்டார். இளவரசரை விமர்சித்து எழுதிய ஜமாலின் கைவிரல்கள் மட்டும் தனியாக வெட்டி எடுக்கப்பட்டு சவுதிக்குக் கொண்டு செல்லப்பட்டன. எதற்காகத் தெரியுமா? இளவரசருக்கு வெற்றிப் பரிசாக கைவிரல்கள் வழங்கப்படத்தான்.
ஜமாலின் உடல்பகுதிகள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு காட்டில் வீசப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது.
தற்போது, இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரக அதிகாரியின் வீட்டிலேயே ஜமாலின் உடல் பாகங்கள் கிடைத்துள்ளதாக ஸ்கை நியூஸ் தெரிவிக்கிறது.
துருக்கி அரசுக்கு ஜமாலின் கொலை கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி அதிபர் என்டோகன், “குற்றவாளிகளைத் தப்ப விடமாட்டோம்” என்கிறார்.
முதலில், “ஜமாலை நாங்கள் கொல்லவில்லை அவர் வந்தார்… சென்றார்!” – என்று சவுதி அரசு மறுத்தது. இஸ்தான்புல் நகரில் இருந்த சவுதி தூதரகத்தின் 6 மாடிகளையும் ஒவ்வோர் அறையையும் `ராய்ட்டர்ஸ்’ செய்தியாளர்களுக்குத் திறந்தும் காட்டியது.
பீரோ உள்ளிட்டவற்றைக் கூட திறந்து காட்டி நல்லபிள்ளை போல சவுதி அதிகாரிகள் நடித்தனர். உண்மை ஒருநாள் வெளிவராமல் போகாதுதானே!
அமெரிக்காவின் நெருக்குதல் அதிகமானதால் ஜமால் காணாமல் போன 18 நாள்களுக்குப் பிறகு உண்மையை ஒப்புக் கொண்டது சவுதி. `ஜமாலுக்கு இப்படி நேர்ந்திருக்கக் கூடாது’ என்றும் முதலைக்கண்ணீர் வடித்தது.
ஜமால் கொலை ரியாத்தில் நேற்று தொடங்கிய நிதி முதலீடு மாநாட்டில் எதிரொலித்தது. மாநாட்டில் பங்கேற்க வந்திருந்த ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரநிதிகள் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்த மாநாடு மூலம் மொத்தம் 34 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் திரட்ட சவுதி திட்டமிட்டிருந்தது. வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்க மறுத்ததால் சவுதி அரசு அதிர்ச்சியடைந்தது.
இந்த விவகாரத்தில் சவுதி இளவரசரை அமெரிக்கா நேரடியாகவே குற்றம்சாட்டியுள்ளது. `ஜமால் கொலையில் ஈடுபட்ட 18 முதல் 21 பேருக்கு அமெரிக்க விசா இனி வழங்கப்படமாட்டாது’ என்று டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உலகநாடுகளின் கடும் எதிர்ப்பைக் கண்ட சவுதி வேறு திட்டம் போட்டது. ஜமால் கஷோகியின் மகன் சலா கஷோகி ரியாத்தில்தான் வசித்தார்.
இவரை வெளிநாடு செல்ல சவுதி அனுமதிக்கவில்லை. வெளிநாடுகளுக்குச் செல்லவும் சலாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததையடுத்து சலா கஷேகியை சவுதி மன்னர் சல்மானும் இளவரசர் முகமது பின் சல்மானும் சந்தித்தனர்.
தந்தையின் மரணத்துக்குக் காரணமான இளவரசருக்குக் கை கொடுக்க சலா மறுத்துள்ளார். அவரை வலுக்கட்டாயமாக இளவரசருடன் கைகொடுக்க வைத்துள்ளனர். அந்தப் புகைப்படங்களை இணையத்திலும் பரவவிட்டது சவுதி அரசாங்கம்.
பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதை!