உலக கிண்ணத் தொடரின்ன பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
பங்களாதேஷில் இடம்பெற்றும் வரும் இருபது-20 உலக கிண்ண போட்டியையொட்டி மிர்பூரில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டம் ஒன்றில் இலங்கை-இந்தியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக மஹேல ஜயவர்த்தன 30 ஓட்டங்களையும், அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 29 ஓட்டங்களையும், குசேல் பெரேரா 21 ஓட்டங்களையும் எடுத்தனர்.
திசர பெரேரா 18 ஓட்டங்களுடனும், குலசேகர 21 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டும், வருண்ஆரோன், அமித் மிஸ்ரா, சுரேஷ்ரெய்னா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
பின்னர் 154 ஓட்டங்கள் என்ற வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் துடுப்பாட்டம் சொதப்பல் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் 2 ஓட்டங்களுடனும், ரோகித் ஷர்மா 4 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர்.
சுரேஷ் ரெய்னா (41 ஓட்டங்கள்), யுவராஜ்சிங் (33 ஓட்டங்கள்) ஆகியோர் மாத்திரமே ஓரளவு நிலைத்து நின்று ஆடினார்கள். ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினார்கள்.
இறுதி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 12 ஓட்டங்கள் தேவைப்பட்டது. மாலிங்க வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ஸ்டூவர்ட் பின்னி ஒரு ஓட்டத்தை எடுத்தார்.
2ஆவது பந்தில் அஸ்வின் நான்கு ஓட்டங்களை பெற்றார். 3ஆவது பந்தில் ஸ்டூவர்ட் பின்னி ரன்-அவுட் ஆனார். 4ஆவது பந்தில் புவனேஷ்வர்குமார் ஒரு ஓட்டத்தை எடுத்தார். 5ஆவது பந்தில் அஸ்வின் ஆட்டம் இழந்தார். இறுதிப் பந்தில் பந்தில் அமித்மிஸ்ரா போல்ட் ஆனார்.
20 ஓவர்களில் இந்திய அணி 148 ஓட்ட்ங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இலங்கை அணி 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை அணி தரப்பில் மாலிங்க 4 விக்கெட்டும், குலசேகர 2 விக்கெட்டும், சேனாநாயக, மெண்டிஸ், ஹேரத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.