இவர்கள் இருவரையும் பதவியில் இருந்து அகற்றும் வரை ஓயப்போவதில்லை என்று போர்க்கொடி தூக்கியுள்ள தினகரன் 21 எம்.எல்.ஏ.க்களை தன்னுடன் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி அரசை மிரட்டி வருகிறார்.
எந்த சூழ்நிலையிலும் ஆட்சியை கலைக்கும் எண்ணம் இல்லை. எடப்பாடி பழனிசாமியை மட்டும் வீட்டுக்கு அனுப்புவோம் என்று கூறி வந்த தினகரன் சமீப காலமாக இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்து விட்டது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
இதனால் எந்த நேரத்திலும் எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து நேரலாம் என்கிற சூழல் நிலவி வருகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் கவர்னரை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று மனு அளித்தனர்.
இதனால் எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டதாக குற்றம் சாட்டிய தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கவர்னரை சந்தித்து மனு அளித்தனர்.
எடப்பாடி பழனிசாமியை ஆதரித்த 21 எம்.எல்.ஏ.க்கள் தனியாக செயல்பட்டு வருவதுடன் அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் கூறி இருப்பதால் உடனடியாக சட்டசபையை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் இந்த விவகாரத்தில் நான் தலையிட முடியாது. இது உள்கட்சி பிரச்சினை என்று கூறி கவர்னர் அமைதியாக இருந்து வருகிறார். இதற்கும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். நீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டு தடைவிதித்தது.
வழக்கு விசாரணை 20-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதன் மூலம் வருகிற புதன்கிழமை இந்த வழக்கில் ஐகோர்ட்டு என்ன தீர்ப்பு கூறப்போகிறது என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற ஒரு பரபரப்பான சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர்ராவ் நாளை தமிழகம் வருகிறார். அப்போது அவர் தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலை குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி முக்கிய முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்ட நிலையில், கவர்னர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இதனால் இந்த விவகாரத்தில் கவர்னர் நிச்சயம் ஒரு முடிவை எடுத்து அறிவிப்பார் என்றே கூறப்படுகிறது. அனேகமாக எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார் என்று தெரிகிறது.
தினகரன் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களில் 9 பேர் எடப்பாடி அணிக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக ஆளும் கட்சி தரப்பில் கூறப்படுகிறது.
இதனை அமைச்சர் ஜெயக்குமாரும் சில நாட்களுக்கு முன்னர் உறுதி செய்திருந்தார். இதில் ஜக்கையன் மட்டுமே எடப்பாடி அணிக்கு தாவியுள்ளார்.
மீதி உள்ள 8 எம்.எல்.ஏ.க்களும் நிச்சயம் தங்கள் பக்கம் விரைவில் வந்து விடுவார்கள் என்றே எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்புகிறார். அப்படி 8 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அணிக்கு வந்து விட்டால் எந்த பிரச்சினையுமின்றி ஆட்சியை நகர்த்திச் சென்று விடலாம் என்றும் எடப்பாடி அணியினர் நம்புகிறார்கள்.
ஆட்சியை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி வகுக்கும் இந்த வியூகம் பலன் அளிக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.