`தீர்ப்பு வரும் நேரத்தில் தன் சார்பாக யாராவது இருக்க வேண்டும்; இந்த நேரத்தில் நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என நினைக்கிறார் சசிகலா.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் இளவரசி, 15 நாள் பரோல் கேட்டு மனு கொடுத்திருக்கிறார். `காது வலி சிகிச்சைக்காக அவர் வருகிறார் எனச் சொல்லப்பட்டாலும், 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு வரும் நேரத்தில் அவர் வெளியில் வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது’ என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக் கண்காணிப்பாளரிடம் பரோல் மனு கொடுத்திருக்கிறார் இளவரசி. அந்த மனுவில், தனக்கு உடல்நிலை சரியில்லாததால் விடுப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.
இந்தக் கோரிக்கையின் மீது இதுவரையில் சிறைத்துறை நிர்வாகம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. “சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதில், சசிகலா மட்டும் இரண்டு முறை பரோலில் வெளியில் வந்தார். முதல்முறையாக, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நடராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, 5 நாள் பரோல் விடுப்பில் வந்தார்.
அதன்பிறகு, நடராஜன் மரணத்தையொட்டி 15 நாள் பரோலில் வெளியில் வந்தார். இந்தப் பரோல் காலத்தையும் முழுதாக நிறைவு செய்யாமல், 10 நாள்களிலேயே சிறைக்குள் சென்றுவிட்டார் சசிகலா. இதுநாள் வரையில் ஒருநாள்கூட பரோல் கேட்டு இளவரசி மனு கொடுத்ததில்லை.
தற்போது அவரது மனுவைப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது சிறை நிர்வாகம். சிறை விதிமுறைகள் சாதகமாக இருப்பதால்,
பரோலில் வெளிவருவதில் இளவரசிக்கு எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை” என விவரித்த மன்னார்குடி குடும்ப உறுப்பினர் ஒருவர்,
“ தினகரன் ஆதரவு தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் அனைவரும் தற்போது குற்றாலத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் குற்றாலத்துக்குப் போக வேண்டும் என்பது சசிகலா எடுத்த முடிவு.
`தீர்ப்பு வரும் நேரத்தில் தன் சார்பாக யாராவது இருக்க வேண்டும்; இந்த நேரத்தில் நாம் ஏமாந்துவிடக் கூடாது’ என நினைக்கிறார் சசிகலா.
`தீர்ப்பு வந்துவிட்டால், தகுதிநீக்க எம்.எல்.ஏக்களில் சிலரை வளைக்கும் முயற்சியில் ஆளும்கட்சி இறங்குவதற்கான வாய்ப்பு அதிகம்.
இதை முறியடித்தால் மட்டுமே அ.தி.மு.கவுக்குள் சசிகலாவுக்கான செல்வாக்கை நிலைநிறுத்த முடியும். எனவே, அவர் சார்பாக இளவரசி பேசினால், தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் மனதில் கூடுதல் உற்சாகம் பிறக்கும்’ எனவும் குடும்ப ஆள்கள் பேசி வருகின்றனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் பெரிதாக நிறைவேற்றப்படவில்லை.
`சின்னம்மாவிடம் எங்களை அழைத்துச் செல்லுங்கள்’ என அந்த 18 பேரும் கேட்டு வந்தனர். இவர்களில் தங்க.தமிழ்ச்செல்வனைத் தவிர வேறு யாருக்கும் சசிகலாவைச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை.
`சின்னம்மாவுக்காகத்தான் இவ்வளவும் செய்கிறோம். அவரைப் பார்க்கக்கூட அனுமதிப்பதில்லை’ என்ற குமைச்சல் அவர்களுக்குள் இருக்கிறது.
இதே எம்.எல்.ஏக்களை விவேக் ஜெயராமன் அழைத்துச் செல்ல நினைத்தால் முடியும். ஆனால், `தினகரனை பகைத்துக் கொள்ளாமல் நமது வேலையைப் பார்ப்போம்’ என அவர் அமைதியாக இருக்கிறார்.
தீர்ப்பு வரும் நேரத்தில் இளவரசி வெளியில் இருப்பது கூடுதல் பலம் என நினைக்கிறார் சசிகலா” என்றார் விரிவாக.
“ இளவரசி வருவதன் பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. நீண்டநாள்களாக காதுவலியால் அவதிப்பட்டு வருவதால், அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார்.
மேலும், அவரது சகோதரர் வடுகநாதன் உடல்நலக் குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரைச் சந்திக்க வேண்டிய அவசியமும் இளவரசிக்கு இருக்கிறது.
இதைக் காரணமாகக் குறிப்பிட்டால், பரோல் கிடைப்பதில் சிரமம் ஏற்படும். எனவேதான், காது வலிக்கு சிகிச்சை எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கு மேல் இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை” என்கின்றனர் இளவரசி தரப்பினர்.