அம்பாறை இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வாங்காமம் 10 ஆம் கொலனி முகைடீன் ஜூம்ஆ பள்ளிவாசலில் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட கந்தூரி உணவு ஒவ்வாமையினால் பாதிக்கப்பட்ட 500க்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இறக்காமம் மாவட்ட வைத்தியசாலயில் மயக்கம் மற்றும் வாந்தியான நிலையில் 400 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் 325 பேர் வெளியேறியுள்ளதாகவும் 75 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் 28 பேர் அனுமதிக்கப்பட்டு 5 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் ஒரு கர்ப்பிணித் தாய் உட்பட 12 பெண்களும் 11 ஆண்களும் சிகிச்சை பெற்று வருவதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.எம்.ஜவாஹீர் தெரிவித்தார்.
இதேவேளை அம்பாறை, அட்டாளைச்சேனை, பாலமுனை ஆகிய வைத்தியசாலைகளிலும் 100 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வெளியேறிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வருடா வருடம் மிகவும் பழமைவாய்ந்த இப்பள்ளி வாயலில் கந்தூரி நிகழ்வு இடம்பெற்று வருவது வழக்கமாகும் எனவும் நேற்று புதன் கிழமை வழங்கப்பட்ட இக்கந்தூரி நிகழ்வில் 2000 க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு பகல் உணவு பெற்றுச் சென்றதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.