சினிமா நடிகர்களே நயன்தாராவுடன் நடிப்பதற்கு ஆலாய் பறக்கிறார்கள். விஜய்சேதுபதி போன்ற நடிகர்கள் மேடைகளில் வெளிப்படையாகவே ‘ஜொள்ளு’ விட்டு ஜோடி சேர்ந்திருக்கிறார்கள்.
ஆனால், இவர்களுக்கெல்லாம் கிடைக்காத ‘ஒரு கொடுமையான வாய்ப்பு’ பள்ளி மாணவன் ஒருவனுக்கு கிடைத்திருக்கிறது. அந்த மாணவனின் அம்மா, ‘அது ஒரு தித்திப்பான வாய்ப்பு’ என தனது முகநூல் பக்கத்தில் சிலாகித்திருப்பது கொடுமையிலும் கொடுமை.
‘வியாபார தந்திரம்’ ஒரு சிலரை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது தெரியுமா?
கடந்த வாரம் திருநாள் என்ற பெயரில் சினிமா ஒன்று ரிலீஸ் ஆனது. அந்தப் படத்துக்கு பெரிதாக வரவேற்பு இல்லை. ஆனாலும், ஜீவா, நயன்தாரா நடித்திருக்கும் இந்தப் படம் இப்போது பெரிதாகப் பேசப்படுகிறது. காரணம் – அந்தப் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சிதான்!
வகுப்பறையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு சாக்லேட் கொடுப்பார் நயன்தாரா. சாக்லேட் வாங்கிய மாணவர்கள் நயனின் கன்னத்தில் முத்தமிட்டுச் செல்வார்கள்.
ஒரு மாணவன் மட்டும் நயன்தாராவின் உதட்டில் அவர் எதிர்பாராத வகையில் ‘லிப் டூ லிப்’ எனப்படும் உதட்டு முத்தம் தந்து விட்டு, குழந்தைத்தனமாக சிரிப்பான். அப்போது நயன்தாரா முகத்தில் அப்படி ஒரு ரியாக்ஷன்!
ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்த கலவையாக முகம் சிவந்து, கண்கள் விரியும்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. திருநாள் ஓட்டத்துக்கு இந்தப் பரபரப்பு உதவுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.