சேலம்: பேஸ்புக்கில் ஆசிரியை வினுப்பிரியாவின் படத்தை மார்பிங் செய்து ஆபாசமாக வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வினுப்பிரியாவின் உயிர் போகும் என்று நினைக்கவில்லை என்று சிறையில் அவர் கதறியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை இடங்கணசாலையை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளி அண்ணாதுரை.
இவரது மகள் வினுப்பிரியா பி.எஸ்.சி., படித்துவிட்டு, அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். கடந்த 21ம் தேதி வினுப்பிரியாவின் புகைப்படங்கள் ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்டு, பேஸ்புக்கில் வெளியிடப்பட்டது.
இது குறித்து எஸ்.பி., அலுவலகத்தில் அவரது தந்தை அண்ணாதுரை புகார் அளித்தார்.
இதன் பேரில், மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி வினுப்பிரியாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படத்துடன், தொடர்புக்கு என அண்ணாதுரையின் செல்போன் நம்பர் பேஸ்புக்கில் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த வினுப்பிரியா, வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த வினுப்பிரியாவின் உடலை வாங்க மறுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.பி. அமித்குமார்சிங், வழக்கை தானே விசாரிப்பதாக உறுதி அளித்ததின் பேரில் உடலை பெற்றோர் பெற்றுச்சென்றனர்.
இந்நிலையில் பேஸ்புக்கில் வினுப்பிரியாவின் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டது தொடர்பாக, சேலம் மாவட்டம் கல்பாரப்பட்டி அம்மன்கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமி மகன் சுரேஷ் (21) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், பேஸ்புக்கில் வினுப்பிரியாவின் ஆபாச படத்தை வெளியிட்டதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், சங்ககிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை, தொழில்நுட்ப குற்றம், போலி பேஸ்புக் உருவாக்குதல், ஆபாச படங்களை டவுன்லோடு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய சிறையில் சுரேஷ் தனிஅறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் விரக்தியான நிலையில் யாருடைய முகத்தையும் திரும்பிக்கூட பார்க்காமல் இருக்கிறார். நள்ளிரவில், உறங்காமல், ‘வினுப்பிரியாவை பழிவாங்க நினைத்ேதன்.
ஆனால் அவர், தற்கொலை செய்வார் என்று நினைக்கவில்லை என்று கூறி, கதறி அழுத சம்பவம் சிறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே சங்ககிரி டிஎஸ்பி கந்தசாமி, மகுடஞ்சாவடி இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர், கல்பாரப்பட்டியில் உள்ள சுரேஷ் வீட்டில் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆபாசபடம் குறித்து வேறு ஏதாவது ஆவணங்களை சுரேஷ், மறைத்து வைத்திருக்கிறாரா? என்று இந்த விசாரணை நடக்கவுள்ளது.
இதே போல் சுரேஷ், வேறு பெண்களின் படத்தை ஏதாவது மார்பிங் செய்துள்ளாரா? என்றும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆபாச மார்பிங் படம் வெளியானதால் வினுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டு வரும் நிலையில், வேறு காரணங்கள் ஏதாவது உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதே பகுதியை சேர்ந்த தோழி ஒருவருடன் மிகவும் நெருக்கமாக வினுப்பிரியா பழகி வந்துள்ளார்.
அவரிடம் பழக வேண்டாம் என்று பெற்றோர் எச்சரித்துள்ளனர். இதனால் கடந்த சிலநாட்களாக வினுப்பிரியா மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.
இதன் காரணமாக அவர், தற்கொலை முடிவு எடுத்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக அவரது தோழியை அழைத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
எஸ்.ஐ. மீது நடவடிக்கை?
வினுப்பிரியாவின் மார்பிங் ஆபாசபடம் பேஸ்புக்கில் வெளியானது குறித்து எஸ்பி பரிந்துரையின்பேரில் சேலம் சைபர் கிரைம் போலீஸ் பிரிவில் அண்ணாதுரை புகார் அளித்தார்.
அப்போது ைசபர் கிரைம் ஏட்டு சுரேஷ்குமார், சிம்போடும் வசதி கொண்ட வில்போன் ஒன்றை வாங்கி தருமாறும், அண்ணாதுரையிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து அண்ணாதுரை, ஏட்டு சுரேஷ்குமாருக்கு வில்போன் வாங்கி கொடுத்துள்ளார். ஏட்டு சுரேஷ்குமார் லஞ்சமாக வில்போன் வாங்கிய விவரத்தை அண்ணாதுரை, வினுப்பிரியா தற்கொலைக்கு பிறகு தெரிவித்தார்.
இதனால் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். குற்றப்பிரிவு துணை கமிஷனர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.
இதில் வில்போன் வாங்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஏட்டு சுரேஷ்குமாரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார்.
மேலும், அண்ணாதுரை கொடுத்த புகாரை மகுடஞ்சாவடி எஸ்.ஐ. பிரகாஷ் சரியாக விசாரிக்காமல் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. அவர் தவறு செய்து இருந்தால், சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. அமித்குமார்சிங் தெரிவித்துள்ளார்.
உடனே தூக்கில் போடுங்கள் : வினுப்பிரியா தாய் ஆவேசம்
குற்றவாளி கைது செய்யப்பட்டது குறித்து தற்கொலை செய்து கொண்ட வினுப்பிரியாவின் தாய் மஞ்சு கூறுகையில், ‘‘நாங்கள் புகார் கொடுத்தவுடன், குற்றவாளியை உடனே கைது செய்திருந்தால் என் மகள் தற்கொலை செய்து இருக்கமாட்டார்.
போலீசார் மெத்தனபோக்காக இருந்ததால் தான் எனது மகள் தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளியை உடனே தூக்கில் போடுங்கள். என் கையில் கிடைத்தால், அடித்தே கொன்று விடுவேன். தமிழக அரசு போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
சஸ்பெண்ட் ஏட்டுவிடம் ‘வில்போன்’ பறிமுதல்
ஆசிரியை வினுப்பிரியாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படம் வெளியான விவகாரம் தொடர்பாக சேலம் மாநகர சைபர் கிரைம் பிரிவின் உதவி நாடப்பட்டது.
அப்போது அங்கிருந்த ஏட்டு சுரேஷ்குமார், லஞ்சமாக வில்போன் ஒன்றை வாங்கிய விவகாரம் வெளியானது. இதுதொடர்பாக ஏட்டு சுரேஷ்குமாரிடம் மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் விசாரணை நடத்தினார்.
அப்போது கண்ணீர் விட்டு கதறி அழுத ஏட்டு சுரேஷ்குமார், ‘இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை எனவும், நான் தான் வில்போனை கேட்டு பெற்றதாகவும்’ தெரிவித்தார். அப்போது கமிஷனர், ஏட்டு சுரேஷ்குமாரை கடுமையாக எச்சரிக்கை செய்தார்.
இதுதொடர்பாக துணை கமிஷனர் ராமகிருஷ்ணன் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தார்.
இதன்படி அடிப்படையில் ஏட்டு சுரேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து அவரிடம் இருந்து வில்போனை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியது: ஏட்டு சுரேஷ்குமாருக்கு சாப்ட்வேர் பற்றி நன்கு தெரியும்.
இதனால் சைபர் கிரைம் பிரிவில் நியமிக்கப்பட்டார். ஆனால் கமிஷனர் மாகாளி இருந்தபோது, ஏட்டு சுரேஷ்குமாரை அதிரடியாக இடமாற்றம் செய்தார். அவர் சென்ற பிறகு மீண்டும் சுரேஷ்குமார் சைபர் கிரைமுக்கு வந்தார். அவர் மீது அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணமே இருந்தது. இந்நிலையில் தற்போது பிடிபட்டுள்ளார்’ என்றார்.