பாகிஸ்தானியப் படையினர் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பிரதேசமான வஜிரிஸ்தானில் பெரு வெட்டு (Zarb–-eAzb) என்னும் குறியீட்டுப் பெயருடன் ஒரு படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இப்பிரதேசங்களில் இருக்கும் இஸ்லாமியப் போராளிகளை ஒழித்துக் கட்டும் நோக்குடன் இந்தப் படை நடவடிக்கை நடைபெறுகின்றது. அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானும் பல்லாண்டு காலமாக வேண்டு கோள் விடுத்துக் கொண்டிருக்கும் இந்த வஜிரிஸ்தானில் மறைந்து இருந்து செயற்படும் போராளிகளுக்கு எதிரான நடவடிக்கை வெற்றியளிக்குமா?
பாகிஸ்தானியப் படையினர் முதலில் பலத்த விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டு விட்டுப் பின்னர் தரை நகர்வை மேற்கொண்டனர். நானூற்றிற்கு மேற்பட்ட போராளிகளைக் கொன்றும் நூற்றிற்கு மேற்பட்ட அவர்களது மறைவிடங்களை அழித்தும் விட்டதாக ஜுலை மாதம் 9ஆம் திகதி பெருவாள் படை நடவடிக்கைக்குப் பொறுப்பான படையதிகாரி தெரிவித்தார். மிரான்ஸா நகரில் அல் கைதா போராளிகளும் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
போராளிகளால் பாகிஸ்தானிற்குப் பேரிழப்பு
2001ஆம் ஆண்டிற்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடையில் பாகிஸ்தானில் 13,271 தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. அவற்றில் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
2007ஆம் ஆண்டிற்கும் 2013ஆம் ஆண்டிற்கும் இடையில் 358 தற்கொலைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. இதுவே உலகிலேயே அதிக அளவு எண்ணிக்கையாகும். கடந்த பத்து ஆண்டுகளாக தீவிரவாத நடவடிக்கைகளால் பாகிஸ்தானிற்கு 78 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான சொத்தழிவு ஏற்பட்டுள்ளது.
Key Takfiri Taliban
பல அமைப்புக்கள்.
பாகிஸ்தானில் பலதரப்பட்ட தீவிரவாத அமைப்புக்கள் செயற்படுகின்றன. தலிபான், அல்கைதா, ஹக்கானி, லக்சர் இ தொய்பா ஆகியவை முக்கியமான அமைப்புக்களாகும். சில தீவிரவாத அமைப்புக்கள் பாகிஸ்தானிய அரச படைகளுக்கு மிகவும் வேண்டப்பட்டவையாக இருக்கின்றன.
பாகிஸ்தானிய அரச படைகளிடமிருந்து நிதி, படைக்கலன், பயிற்சி ஆகியவை பெறும் போராளிக்குழுக்களும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகின்றது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் அமெரிக்கப்படைகளுக்கு எதிராகச் செயற்படும் அமைப்புக்களிற்கு பாகிஸ்தானில் பலதரப்பினரிடையும் ஆதரவு உண்டு.
ஆனால், சீனாவின் உய்குர் இனப் போராளிகள், உஸ்பெக்கிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராடும் போராளிகள், இந்தியாவிற்கு எதிராகச் செயற்படும் போராளிகள் எனப் பலதரப்பினர் பாகிஸ்தானில் செயற்படுகின்றனர். இதனால் எல்லா அயல் நாடுகளின் நெருக்கத்திற்கும் பாகிஸ்தான் உள்ளாகியுள்ளது.
கனடா குடிவரவு அமைச்சர் கிறிஸ் அலெக்சாண்டர் பாகிஸ்தானிய அரசு பயங்கரவாதத்தை ஆதரித்து வளர்ப்பதாக பகிரங்கமாகவே இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குற்றம் சுமத்தியிருந்தார்.
மேலும் அவர் பாக். அரசின் குடிசார் நடவடிக்கைகளை படையினர்தான் மேற்கொள்கின்றார்கள் என்றதுடன் எல்லா நாடுகளும் இணைந்து பாகிஸ்தானிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேன்டும் என்றும் தெரிவித்தார். இதுவே பாகிஸ்தானிற்கான அபாயச் சங்கானது.
அமெரிக்க –பாகிஸ்தானிய உறவு
அமெரிக்க–-பாக் உறவிற்கும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான உறவு 1954-ஆம் ஆண்டு கட்டி எழுப்பப்பட்டது.
இந்தியா கூட்டுச் சேரக் கொள்கை என்னும் பெயரில் சோவியத் ஒன்றியத்துடன் நெருக்கமானதைச் சமாளிக்க பாகிஸ்தான் அமெரிக்காவுடன் அப்போது இணைந்து கொண்டது.
பின்னர் 1971ஆம் ஆண்டு நடந்த பங்களாதேசப் போரின் போது அமெரிக்கா பாகிஸ்தானிற்கு நிறையப் படைக்கலன்களைக் கொடுத்து உதவியது. 1989ஆம் ஆண்டு சோவியத் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததைத் தொடர்ந்து அமெரிக்க பாகிஸ்தானிய உறவு நெருக்கமடைந்தது.
அமெரிக்கா பல பில்லியன் கணக்கில் செலவழித்து பாகிஸ்தான் உளவுத் துறையுடன் இணைந்து சோவியத் படைகளுக்கு எதிராக மதவாதப் போராளிகளை பயிற்றுவித்தது.
சோவியத் படைகள் பாகிஸ்தானின் பாலுச்சிஸ்தான் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கலாம் என்ற அச்சம் அப்போது உருவாக்கப்பட்டது. இதனால் பாக். அரசு ஆப்கானில் தீவிரவாதத்தை வளர்க்க நிர்ப்பந்திக்கப்பட்டது.
அரபு ஆப்கானிஸ்தானியர் என்னும் பெயரில் உருவாக்கப்பட்ட போராளி அமைப்பில் பின்லேடனும் ஒருவராவார். பின்லேடனுக்கு அமெரிக்க உளவுத் துறையான சி.ஐ.ஏ. பயிற்சி வழங்கியதாக நம்பப்படுகின்றது.
அல்கைய்தாவின் தோற்றம்
சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியபின்னர் சவூதி அரேபிய செல்வந்தரும் பொறியியலாளருமான பின் லேடனும், எகிப்தில் வாழ்நாள் முழுக்கப் போராளியாக இருந்த ஜவாஹிரி, பாகிஸ்தானியக் கல்விமானுமாகிய ஃப்டல் ஆகியோர் இணைந்து அல் கைய்தா அமைப்பை 1988-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ஆம் திகதி உருவாக்கினார்கள்.
இவர்கள் தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர்களாக மாறினார்கள். இவர்களின் அமெரிக்க எதிர்ப்பின் உச்சக்கட்டமாக 2001 செப்டெம்பர் 11ஆ-ம் திகதி நிகழ்ந்த அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்தது.
பாக். அணுகுண்டு
1998ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணுகுண்டுப் பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையிலான உறவு மிக மோசமடைந்தது. அமெரிக்கா பாகிஸ்தானிற்கு வழங்கி வந்த எல்லா உதவிகளும் நிறுத்தப்பட்டன.
2001ஆம் ஆண்டு அமெரிக்கா பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாகிஸ்தானையும் இணைக்க மீண்டும் அமெரிக்காவும் பாகிஸ்தானும் தம் உறவை மேம்படுத்தி மீண்டும் பாகிஸ்தானுக்கான அமெரிக்க உதவி வழங்குதல் ஆரம்பிக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆப்-பாக் கேந்திரோபாயம் ஒன்றை வகுத்தார்.
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையிலும் இதற்கு என ஒரு தனிப் பிரிவு உருவாக்கப்பட்டது. இதன் மூலம் இஸ்லாமியத் தீவிர வாதத்தை ஒழிக்கலாம் என அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. அமெரிக்கா பாகிஸ்தானிற்கு 7.5 பில்லியன் டொலர்கள் உதவியை ஐந்து ஆண்டுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது.
பாக். ஊடகர் சலீம் சஹ்ஜாட் Asia Times Online இல் பாக். உளவுத் துறையினருக்கும் தீவிர வாத அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு மே மாதம்அவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
அமெரிக்க கடற்படையின் அட்மிரல் மைக் முல்லன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை இக்கொலைையச் செய்ததாக வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் சுமத்தியமை பாக். அரசை ஆத்திரமடையச் செய்தது.
இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவு மோசமடைந்தது. பின்லேடனைக் கொல்ல வந்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவினர் பின் ேலடன் தங்கி இருந்த மாளிகையில் இருந்து பல கணினிகளையும் கைப்பேசிகளையும் எடுத்துச் சென்றனர்.
அதிலிருந்து பாக். படையினர் மற்றும் உளவுத் துறையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய தகவல்களை அமெரிக்கா பெற்றுக் கொண்டது. அவற்றின் அடிப்படையில் பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வற்புறுத்தி வந்தது.
ஹிலாரி கிளிண்டனின் பாகிஸ்தானிய பயணம்
2011 மே 2ஆம் திகதி பின்லேடன் கொல்லப்பட்டவுடன் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் பாகிஸ்தானிற்கு திடீரெனப் பயணித்தார்.பாகிஸ்தானிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகளின் பட்டியல் பாகிஸ்தானிடம் ஹிலாரியால் கையளிக்கப்பட்டது.
பின்லேடனின் உதவியாளர் ஐமன் அல் ஜவகிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தளபதி ஒமர் சிராஜ் ஹக்கானி, லிபிய அல்கைய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் அப்பட்டியலில் இருந்தனர்.
இப்பட்டியல் கையளிக்கப் பட்டதன் நோக்கம் இவர்களை நீ பிடிக்கிறாயா அல்லது நான் பிடிக்கட்டுமா என்று சொல்லப்பட்டது. அமெரிக்காவின் பாகிஸ்தானுக்கான இரண்டு பில்லியன் டொலர் உதவி பின்னர் இடை நிறுத்தப் பட்டது.
பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து அமெரிக்கப் படையினர் இஸ்லாமியத் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தானிற்கு அமெரிக்கா கொடுக்கும் கைக்கூலியே பலமில்லியன் டொலர்கள் உதவியாக இருந்தது.
எல்லாத் தீவிரவாதிகளுக்கும் எதிரான கொள்கை வெற்றி தருமா?
பாகிஸ்தான் அரசையும் அதன் படையினரையும் பொறுத்தவரை அங்குள்ள தீவிரவாத அமைப்புக்கள் பல தேவையானவையாகவே இருக்கின்றன. பாகிஸ்தானின் வெளியுறவில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன.
ஆனால் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா உட்படப் பல தரப்பில் இருந்தும் நெருக்குதல்கள் வருவதால் பாகிஸ்தான் தனது கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளதாக வெளிப்படுத்துகிறது.
பாகிஸ்தானின் செல்லப் பிள்ளையாகக் கருதப்படும் ஹக்கானி அமைப்பு உட்பட எல்லாத் தீவிரவாத அமைப்புக்களிற்கும் எதிராக படைநடவடிக்கை எடுப்பதாகப் பாகிஸ்தான் சொல்கின்றது.
பாக் படையினரின் நடவடிக்கைகளை அமெரிக்கப் படைநிபுணர்கள் நெறிப்படுத்துவதாகச் சொல்லப்படுகின்றது. ஹக்கானி அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடாத்துவதில்லை.
ஹக்கானி அமைப்பினர் பாக். அரசுக்கும் மற்ற தீவிரவாத அமைப்புக்களுக்கும் அதிலும் முக்கியமாக தலிபான் அமைப்பினருக்கும் இடையில் ஒரு இணைப்புப் பாலமாகச் செயற்படுகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் இந்தியர்களுக்கு எதிராகப் பல தாக்குதல்களை நடாத்தியது. அல்கைய்தா இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுவதில்லை. லக்சர் இ தொய்பா அமைப்பு இந்தியாவிற்கு எதிராகச் செயற்படுவதையே தலையாய பணியாய்க் கொண்டுள்ளது.
பாகிஸ்தான் படையினர் போதிய முன்னறிவித்தல் கொடுத்துவிட்டே தமது தாக்குதல்களைத் தொடுத்துள்ளனர். வடக்கு வஜிரிஸ்தான் பிரதேசத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்பதற்காக முன்னறிவித்தல் கொடுக்கப்பட்டது. ஆனால் பல போராளிகள் தமது தாடிகளை மழித்து விட்டுப் பொதுமக்களோடு தாமும் பாதுகாப்பாக வெளியேறிவிட்டனர்.
வஜிரிஸ்தான் பகுதியில் அண்மைக்காலங்களாக சலூன்காரர்களுக்கு நல்ல வருமானம் என்கின்றது பாகிஸ்தானிய ஊடகம் ஒன்று. பாரபட்சமின்றி எல்லா அமைப்புக்களையும் ஒழிக்கப் போவதாக பாகிஸ்தானியப் படைகள் சொல்வது நம்பத்தகுந்ததாக இல்லை.
ஹக்கானி அமைப்பின் தலைவருக்கு ஏற்கனவே பாக். படையினர் தமது நடவடிக்கை பற்றித் தெரிவித்து விட்டனர் எனச் சொல்லப்படுகின்றது. 2009ஆம் ஆண்டும் பாக். படைகள் வஜிரிஸ்தானில் இருந்த போராளிகளுக்கு எதிராக ஒரு படை நடவடிக்கையை மேற் கொண்டன. அது தீவிரவாதத்தை ஒழிக்க வில்லை. அது போலவா இதுவும்?
– வேல் தர்மா