தித்திக்கும் மழலை மொழியில், தேன் சிந்தும் எச்சில் துளிகள்… ஆயுள் ஒன்றும் போதாது அந்த அழகை ரசிப்பதற்கு…..”
திகட்டாத புன்னகையுடன் தன் பிஞ்சுக்கரங்களை பற்றியவாறு நடை பழகும் குழந்தையின் குறும்பில் ஆறாத காயங்களும் ஆறும். கடவுளின் திரு உருவங்கள் குழந்தைகள்.
இதனால் தான் குழந்தை வரம் கேட்டு எத்தனையோ கோவில் மரங்களில் தொட்டில்கள் தொங்குகின்றன, கோடிக்கணக்கில் செலவழித்து மருத்துவ வசதிகளை நாடுகின்றனர். ஏனெனில், ஒரு பெண்ணுக்கு தாய்மையையும், ஆணுக்கு தந்தை என்ற அடையாளத்தையும் தருவது குழந்தைப் பாக்கியம்தான்.
ஒரு குழந்தை தன் தாயின் வயிற்றில் உருவான நாள் முதல் அன்பையும் பாதுகாப்பையும் வழங்கும் கடப்பாடு அதன் பெற்றோரையே சாரும். ஆனால் இன்று பாலூட்டி சீராட்டி வளர்க்கும் பெற்றோர் சிலர் இறுதியில் பெற்ற பிள்ளைகளுக்கே இயமனாக மாறுகின்றார்கள்.
அதுவும் மூன்று வேளை தவறாமல் உணவூட்டிய கைகளினாலேயே உணவோடு சேர்த்து நஞ்சினையும் கலந்து ஊட்ட எப்படி மனம் வருகின்றதோ…. தெரியவில்லை.
நினைக்கவே வேதனை நெஞ்சை இறுக்குகின்றது… தாங்கள் செய்த தவறுக்காக மட்டுமன்றி, தாங்கள் பெற்ற கடன் சுமை, குடும்ப வறுமை அதுமாத்திரமின்றி பல்வேறு மன அழுத்தங்கள் காரணமாக பெற்ற பிள்ளை என்று கூடப் பார்க்காமல் பாலூட்டிய கைகளினாலேயே நஞ்சூட்டும் காரியங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் தந்தை ஒருவரினால் பச்சிளம் குழந்தை ஒன்று நஞ்சூட்டப்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மனதை வெகுவாக உலுக்கும் வகையில் அமைந்துள்ளது.
மன்னார் மடு, பாலம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) உயிருக்குப் போராடிய நிலையில் பெரியபண்டி விரிச்சான் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அதே வேளை அவரது ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை உயிரிழந்த நிலையில் வீட்டில் சடலமாகக் கிடப்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் மூலம் மடு, பொலிஸ் பிரிவுக்கு தெரியவந்ததையடுத்து, இக்குழந்தையின் மரணத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் அந்தக் குழந்தையின் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து (கடந்த மாதம் 26 ஆம் திகதி) மன்னார், பாலம்பிட்டிய என்ற அழகிய கிராமத்தை நோக்கி மடு பொலிஸார் தமது விசாரணைகளுக் காக பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.
அவர்கள் அங்கு செல்லும்போதே இதற்கு முன்னரும் இதே கிராமத்துக்கு ஒரு விசாரணைக்காக வந்திருந்தது தொடர்பில் பொலிஸாருக்கு நினைவுக்கு வந்திருக்கின்றது.
எனினும் அது யாரைப்பற்றியது, எதைப்பற்றியது என்ற விடயங்கள் உடன் நினைவுக்கு வரவில்லை. விடயங்களை நினைவுபடுத்த முயற்சித்தவாறே பாலம்பிட்டிய கிராமத்தை நோக்கிச் சென்றிருக்கின்றனர்.
குறிப்பிட்ட சம்பவம் நடைபெற்ற இடத்தை அடைந்ததும் அங்கு காணப்பட்ட சிறிய சில்லறைக் கடை ஒன்றுடன் கூடிய வீடு நவரத்தினுடையது என்பதை இனங்கண்ட பொலிஸாருக்கு நவரத்தினத்தின் முகமும், அவரது அந்த கடைத் தொகுதியும் உடனே நினைவுக்கு வந்தது.
அதற்கு காரணம் ஒன்றரை மாதங்களுக்கு முன் இதே இடத்தில் தான் தீபா என்ற (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெண்ணின் திடீர் மரணம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள வந்திருக்கின்றனர்.
தீபா என்பது வேறு யாருமல்ல. இன்று வைத்தியசாலையில் உயிருக்குப் போராடும் நவரத்தினத்தின் ஆசை மனைவியும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ள ஒன்றரை வயது குழந்தையின் தாயுமாவார்.
கடந்த மாதத்துக்கு முன் தான் பால் மணம் மாறாத அந்தப் பச்சிளம் பாலகனை அவள் தவிக்க விட்டுச்சென்று விட்டாள். தீபா நஞ்சருந்தியே தற்கொலை செய்து உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்ததை அடுத்தே இவளது மரணம் தொடர்பாக விசாரிக்கவே பொலிஸார் முதல் முதல் இங்கு வந்து சென்றிருக்கின்றனர்.
எனினும் தீபாவின் மரணம் குடும்பத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார் என்று முடிவானதால் பொலிஸார் விசாரணைகளை கைவிட்டிருந்தனர்.
இதனிடையே இரண்டாவது தடவையும் இதே வீட்டில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளமையே பொலிஸாரின் சந்தேகத்துக்கு மேலும் காரணமாக அமைந்திருக்கின்றது.
ஒன்றரை வயது குழந்தைக்கு எப்படி தெரியும் நஞ்சருந்தி தற்கொலை செய்ய? ஆக நவரத்தினம் தான் உணவோடு நஞ்சினை கலந்து குழந்தைக்கும் ஊட்டி தானும் தற்கொலை செய்ய முயற்சித்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்க ஆரம்பித்தனர்.
பொலிஸார் விசாரணைக்காக சென்றிருந்த போது நவரத்தினத்தின் வீட்டில் உயிரிழந்த அந்த ஒன்றரை வயது குழந்தையின் உடலைத்தவிர வேறு யாரும் இருக்கவில்லை.
நீல நிறத்திலான பிளாஸ்டிக் பாயின் மீது ஒரு சிறிய மொட்டு மடிந்து கிடந்தது. ஒரு நிமிடம் கல்லையும் கரையச் செய்யும் காட்சி அது. பலவிதமான குற்ற செயல்களைப் பார்த்து பக்குவப்பட்ட பொலிஸாருக்குக் கூட அந்த குழந்தையின் மரணம் கண்களை கலங்கச் செய்தது.
குழந்தை இறந்து கிடந்த பாய்க்கு அருகில் ஒன்றரை மாதத்துக்கு முன் இறந்த தீபாவின் புகைப்படமும், வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கும் நவரத்தினத்தின் புகைப்படமும் காணப்பட்டது.
மடு பொலிஸார் இது தொடர்பாக வலுவான காரணங்களை ஆராய்வதற்காக யாழ்ப்பாணம், வவுனியா பொலிஸாருடனான குழுவுடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆதாரங்களையும் சேகரித்தனர்.
அவர்களின் விசாரணையின் மூலம் கிடைத்த தகவல்களின் படி வசதி வாய்ப்புகள் குறைந்த ஏழை மக்கள் வாழும் ஒரு கிராமமாக அது இருந்த போதிலும் நவரத்தினத்தின் குடும்பத்துக்கு வசதி வாய்ப்பில் எந்தக்குறையும் இருக்கவில்லை. ஓரளவு வசதியானவர்கள் தான்.
நவரத்தினம் வீட்டோடு சேர்ந்து ஒரு சில்லறைக் கடையை நடத்தியதுடன், தனியார் நிறுவனமொன்றில் பாதுகாப்பு உத்தியோகத்தராகவும் கடமையாற்றி வந்துள்ளார். நவரத்தினம், தீபா தம்பதிகளுக்கு தர்ஷன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்துள்ளது.
திருமணம் முடித்து அமைதியாகவும் அழகாகவும் சென்று கொண்டிருந்த அவர்களின் திருமண வாழ்வில் யார் கண்பட்டதோ கடந்த மூன்று மாதங்களாகவே சிறு சிறு மனஸ்தாபங்கள் இருந்து கொண்டே வந்திருக்கின்றன.
இந்த மனஸ்தாபத்தின் காரணமாக தான் ஒன்றரை மாதத்துக்கு முன் நவரத்தினத்தின் மனைவி தீபா நஞ்சருந்தி தன் கணவனையும், பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையையும் விட்டு நிரந்தர பயணத்துக்கு சென்று விட்டாள்.
திடீரென ஏற்பட்ட மனைவியின் மரணத்தினால் நவரத்தினம் கலங்கிப் போனான் “தங்களுக்குள் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தானே அவள் இந்த முடிவினை எடுத்தாள்.
அவளை நானே கொன்று விட்டேன்” என்ற உறுத்தலினாலும் மனநிலை பாதிக்கப்பட்டவரைப் போல் உளறிக்கொண்டே இருந்திருக்கின்றார். ஏதோ தான் தனித்து விட்டதைப் போன்ற உணர்வு, வாழ்க்கை மீதான விரக்தி போன்றன அவர் இந்த முடிவினை எடுக்க காரணங்களாக இருந்திருக்கின்றன.
நவரத்தினத்தின் தாய் அவருடனே இருந்தபோது மனைவியின் திடீர் மரணத்தினால் இப்படி இருக்கின்றார். நாளடைவில் சரியாகி விடுவார் என தாயும் தன் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டார்.
பொலிஸாரின் விசாரணையில் நவரத்தினத்தின் நாட்குறிப்பு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. இதன் மூலம் தற்கொலை செய்து கொள்வதற்கான முடிவு நவரத்தினத்திடம் இருந்திருக்கின்றது என்பது தெளிவாகியுள்ளது. இதில் நவரத்தினம் “தனக்கு இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை.
மகனை நினைத்தால் தான் கவலையாக இருக்கின்றது. நான் தற்கொலை செய்யப்போகின்றேன் என்னுடைய தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை. போன்ற விடயங்களை குறிப்பிட்டு வைத்துள்ளதுடன், தான் கடன் கொடுத்தவர்களின் விபரங்களும், வர வேண்டிய கணக்கு விபரங்களும் குறிப்பிட்டு வைத்துள்ளார்.
எனவே இந்த நாட்குறிப்பும் நவரத்தினத்தின் ஒன்றரை வயது குழந்தை தர்ஷனின் மரணத்திலும் அவரது தற்கொலை முயற்சியிலும் முக்கிய ஆதாரமாக இருக்கின்றது.
அடுத்தது, மேசையின் மேல் இருந்த முத்திரையிடப்பட்ட நஞ்சுப் போத்தலும், அதில் அரைவாசிக்கு மேல் இல்லாமல் இருந்தமையும் நவரத்தினம் தான் குழந்தைக்கு உணவுடன் நஞ்சினை கலந்து கொடுத்து தானும் நஞ்சருந்தியிருக்கின்றார். என்ற முடிவுக்குப் பொலிஸார் வந்தனர்.
எது எவ்வாறாயினும் நவரத்தினம் பலத்த பொலிஸ் காவலுக்கு மத்தியில் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் ஆபத்தான கட்டத்தை கடந்தவுடனேயே இது பற்றிய சரியான தகவல்களை தெளிவாகக் கூறமுடியும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி எந்த ஒரு மனிதனும் தனித்து வாழ முடியாது. இதனால் தான் ஒவ்வாரு மனிதனும் குடும்பம், பந்தம், பாசம் என்ற கட்டுக்குள் கட்டுப்பட்டவனாகவுள்ளான்.
எனவே உறவுகளுக்கு இடையில் மனஸ்தாபங்கள் ஏற்படுவதை பெரிதுபடுத்தாது எத்தகைய பிரச்சினை என் றாலும் சமரசமாகப்பேசி ஒருவரின் நிலைமையை இன்னொருவர் புரிந்து கொள்வோமானால் உறவுகளில் பிரிவுகள் நிரந்தரமாக அமையாது.
அப்படி பேசித் தீர்ந்திருந்தால் இன்று நவரத்தினத்தின் அழகிய குடும்பம் சிதைந்திருக்காது. நவரத்தினத்தின் மனைவியின் இழப்பானது அவனுக்கு பெரிய இழப்பு, வேதனை தான்.
ஆனால் காலத்தால் ஆற்ற முடியாத காயங்கள் என்று ஒன்றுமில்லையல்லவா? அந்த வகையில் நவரத்தினம் தன் குழந்தைக் காகவாவது வாழ நினைத்திருக்கலாம்…
-வசந்தா அருள்ரட்ணம்-