பிரபாகரனின் புகைப்படங்களை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் மட்டக்களப்புக்கு செல்லவிடாமல் எங்களை தடுக்கின்றீர்கள் என தெரிவித்த, பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்ற தடை உத்தரவினையும் கிழித்தெறிந்தார்.
பொதுபலசேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்கள் பல இன்று மட்டக்களப்பு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது பாதுகாப்பு காரணம் கருதி வெலிகந்தை பகுதியில் வைத்து பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தப்பட்டதால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தடை உத்தரவினை கிழித்தெறிந்த பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பொலிஸாருடன் வாக்குவாதத்திலும் ஈடுப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பௌத்த மக்கள் நான் போதி பூஜை நடத்த வேண்டும் என ஆசைப்படுகின்றார்கள். அதற்காக நாங்கள் செல்கின்றோம். அது முடிந்ததும் நாங்கள் அங்கிருந்து வெளியேறி விடுவோம். எங்களுக்கு வழிவிடுங்கள். எங்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
நாங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட செல்லவில்லை. அவ்வாறு எதுவும் நடப்பின் பொலிஸ் அதிகாரிகள் அவற்றை பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆயுதம் ஏந்திய புலிகளை வீழ்த்தி அவர்களை நிராயுதபாணியாக மாற்றிய முப்படைகளுக்கு இதை செய்ய முடியாதா.
இது என்ன விளையாட்டு என்று எமக்கு தெரியும். இந்த அநியாயத்தினை எமக்கு செய்யவேண்டாம். மூளையுள்ள அதிகாரிகளின் பிரச்சினை அல்ல என்று எனக்கு தெரியும். மேல் இடத்தில் உள்ள கழுதைகளுக்கு இது தெரியாது.
6 ஆம் திகதி ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றும் உள்ளது. இதன் போது இங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட வேண்டும்.
இவ்விடத்தில் எமக்கு தடங்கல் செய்ய வேண்டாம். பொலிஸ் தடுத்தால் நாங்களும் வாகனங்களை விட்டு வீதியினை வழிமறித்து கொண்டு இவ்விடத்திலேயே இருப்போம்.
நீதிமன்ற தடை உத்தரவினை கொழும்பில் வைத்து தந்து இருக்கலாம் தானே என்று நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவினை கிழித்தெறிந்தார்.
நீதிமன்ற தடை உத்தரவினை கடவத்தையில் கொடுத்து இருக்கலாம் தானே, வரக்காபொல,குருணாகல்,தம்புள்ளை இடங்களில் சரி வைத்து கொடுத்து இருக்கலாம் தானே.
அங்கு பிரபாகரனின் படத்தினை கொண்டு செல்கின்றார்கள். ஆனால் படையினர் ஒன்றும் செய்யவில்லை.
சிங்களவர்களுக்கு மட்டுமே இப்படி செய்கின்றீர்கள். எங்களுடன் பிரச்சினை ஏற்படுத்தி கொள்ளவேண்டாம்.