போரின் இறுதிக்கட்டத்தில் போர் வலயத்தில் இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை பாதுகாப்பாக மீட்கும் திட்டம் எதையும் அமெரிக்கா கொண்டிருந்ததா என்று தன்னால் உறுதியாகக் கூற முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
முள்ளிவாய்க்காலில் போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் உயர்மட்டத் தலைவர்களை பாதுகாப்பாக மீட்கும் திட்டத்தை அமெரிக்கா முன்வைத்தது என்றும், ஆனால் சிறிலங்கா அரசாங்கம் அதற்கு இணங்கவில்லை என்றும் முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து கோத்தாபய ராஜபக்சவிடம் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர்,“அத்தகைய திட்டம் ஒன்று இருந்ததாக என்னால் உறுதியாக கூற முடியாது.
ஆனால், பொதுமக்களை மீட்பதற்கு அமெரிக்கா விரும்புவதாக, அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் என்னிடம் கூறினார்.
எனினும். அவர் முன்வைத்தது பிரபாகரனையோ, புலிகளின் உயர்மட்டத் தலைவர்களையோ மீட்பதற்கான திட்டம் அல்ல. அது ஒரு பரிந்துரையாக மட்டுமே இருந்தது” என்று பதிலளித்தார்.
தொடர்புடைய செய்தி
போரில் ஆங்காங்கே குற்றங்கள் நிகழ்ந்தன – ஒப்புக்கொள்கிறார் கோத்தா
போரின் போது, அங்காங்கே சில குற்றச்செயல்கள் இடம்பெற்றன என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஏற்றுக் கொண்டுள்ளார்.
வெளிநாட்டுச் செய்தியாளர் சங்கத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர்களை நேற்று கோல்பேஸ் விடுதியில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“சிறிலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
அரசியலில் நுழைவதற்கு விரும்பாவிடினும், நாட்டுக்குச் சேவையாற்றும் வாய்ப்பை நிராகரிக்கமாட்டேன்.
நான் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருப்பேன் என்பது நிச்சயமில்லை. ஆனால், அரசியலை நான் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் எப்போதும் கூறுவார்.
எனது கொள்கைக்கு இணக்கமான ஒரு தலைவரை ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் பிரவேசத்தை ஒரு உதாரணமாக எடுத்து, அவரது முறைமைகளை ஆராய்ந்து வருகிறேன்.
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு புதிய விசாரணைப் பொறிமுறைகள் தேவையில்லை. தற்போதுள்ள நீதிப் பொறிமுறைகளே போதுமானது.
போரின் போது தனித்தனியான சில குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை நான் நிராகரிக்கவில்லை. ஆனால், முழு இராணுவத்தையும் குற்றம்சாட்டுவது நியாயமானதல்ல.
எனது கட்டுப்பாட்டில் இருந்த இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த குழுவொன்று ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு அவ்வாறு செயற்பட்டிருந்தால், அப்போதைய இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவே அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
இராணுவப் புலனாய்வுப் பிரிவு தனது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்று அவரால் எப்படிக் கூற முடியும்? இது ஒரு நகைச் சுவை.” என்றும் அவர் கூறியுள்ளார்.