வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் பாயும் வீரர்கள்!
2009-ம் ஆண்டு மே மாதம் நடுப்பகுதியில், இலங்கை முள்ளிவாயக்கால் பகுதியில் முடிவுக்கு வந்தது, விடுதலைப் புலிகள் இயக்கம். யுத்தத்தின் இறுதி நாட்களில் சம்பவித்த பிரபாகரனின் மரணத்துக்கு சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார் காஸ்ட்ரோ.
இவர்தான், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாடுகளுக்கு பொறுப்பாளராக இருந்தவர். (இவருக்கே தெரியாமல், பொட்டு அம்மான் தலைமையிலான புலிகளின் உளவுப்பிரிவினர், வெளிநாடுகளில் மற்றொரு நெட்வேர்க்கை இயக்கி வந்தனர். அதை வேறு ஒரு கட்டுரையில் விளக்கலாம்)
விடுதலைப் புலிகள் இயக்கம் 1990-களிலும், 2000-ம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் வெற்றி மேல் வெற்றி பெற்றுவந்தபோது, வெளிநாட்டு செயல்பாடுகளை கவனித்தவர், கே.பி. (குமரன் பத்மநாதன், என்கிற செல்வராசா பத்மநாதன்).
இவரது காலத்தில் எல்லாமே ஒழுங்காக நடந்து கொண்டிருக்க, 2002-ம் ஆண்டு இலங்கை அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கின.
பேச்சுவார்த்தை குழு தாய்லாந்து (பாங்காக்) சென்றபோது, கே.பி. தாய்லாந்தில் இருந்தார். பேச்சுவார்த்தை குழுவில் ஒருவராக சென்ற புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன், பேச்சு வார்த்தை முடிந்து வன்னி திரும்பியதும், முதல் வேலையாக கே.பி. பற்றி பிரபாகரனிடம் வத்தி வைத்தார்.
அதற்கு வன்னியில் இருந்த வேறு சில தளபதிகளும் ஒத்து ஊதவே, கே.பி.யிடம் இருந்த பொறுப்புகள் அனைத்தையும் பறித்து பிரபாகரன் கொடுத்த நபர்தான், காஸ்ட்ரோ.
இவரது நிஜப் பெயர் வீரகத்தி மணிவண்ணன். யுத்தத்தில் ஷெல் விழுந்ததால், இடுப்புக்கு கீழ் செயலிழந்த நிலையில், சக்கர நாற்காலியில் இருந்தவர். திறமை என்பதை விட விசுவாசம் என்பதற்கு மதிப்புக் கொடுத்து, இவரிடம் வெளிநாட்டு செயல்பாட்டு பொறுப்பை கொடுத்தார் பிரபாகரன்.
அதற்குமுன் வெளிநாட்டு பொறுப்பாளராக இருந்த கே.பி., வெளிநாடுகளில் இருந்தே அனைத்தையும் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தார். அவ்வப்போது பிரிட்டன், பிரான்ஸ், கனடா என்று பயணம் செய்து, எல்லாமே சரியாக இயங்குகிறதா என பார்க்க கூடியவராக இருந்தார்.
ஆனால், காஸ்ட்ரோவோ, இலங்கை, வன்னிக்கு உள்ளேயே சக்கர நாற்காலியில் இருந்தபடி நிர்வாகத்தை கவனிக்க வேண்டிய நிலையில் இருந்தார். இதனால், வெளிநாடுகளில் ஆளாளுக்கு தமது இஷ்டப்படி ராஜாங்கம் நடத்த முடிந்தது. வெளிநாடுகளில் நடந்த பல கதைகள் காஸ்ட்ரோவின் காதுகள் வரை போவதில்லை. போனாலும், மிக தாமதமாகவே போகும். அதற்குமுன் அந்த விவகாரம் முடிந்து வேறு விவகாரம் தொடங்கிவிடும்.
இப்படியான நிலையில், ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து ‘பழம் தின்று கொட்டை போட்டவர்களை’ விட, தாமே வன்னியில் இருந்து ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவரது கையில் நிர்வாகத்தை கொடுத்தால் என்ன என்று யோசித்தார் காஸ்ட்ரோ.
அதற்காக அவர் தேர்ந்தெடுத்த நபர்தான், பேரின்பநாயகம் சிவபரன்.
இவர்தான் தற்போது, விடுதலைப் புலிகளின் சொத்துக்களில் பெரும் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நெடியவன்.
இந்த நெடியவன், காஸ்ட்ரோவுக்கு ஒரு விதத்தில் உறவினர்கூட. இவரை காஸ்ட்ரோ தேர்ந்தெடுத்தபோது, நெடியவன் வன்னியில் என்ன செய்து கொண்டிருந்தார்?
கிட்டத்தட்ட ஒரு டூரிஸ்ட் கைடு போல இருந்தார்.
சமாதான பேச்சுவார்த்தை நடநத காலம் ஆகையால், வெளிநாடுகளில் இருந்த இலங்கை தமிழர்கள் எந்த சிக்கலும் இன்றி இலங்கைக்கு செல்லக்கூடிய நிலை காணப்பட்டது. அப்படி வன்னிக்கு வரும் வெளிநாட்டு தமிழர்களை அழைத்துச் சென்று விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட சிறுவர் இல்லங்கள் போன்ற இடங்களை சுற்றிக் காட்டும் பொறுப்பில் இருந்தார் நெடியவன்.
இதுதான், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவரது பணி!
இவரை நார்வேக்கு அனுப்பி வைத்தார் காஸ்ட்ரோ. அதன்பின், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு செயல்பாடு முழுவதும் நெடியவனின் கைகளுக்கு போனது. வெளிநாடுகளில் உள்ள புலிகள் அமைப்புகளில், நெடியவன் இன்றி ஓரணுவும் அசையாது என்ற நிலை ஏற்பட்டது.
இதன் பின்னர்தான், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளுக்கு அடி-மேல்-அடி விழத் தொடங்கியது. ஒவ்வொரு நாடாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை பயங்கரவாத பட்டியலில் சேர்த்து தடை செய்ய தொடங்கின.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலி அபிமானிகள் பலர், இந்த ‘காஸ்ட்ரோ-நெடியவன்’ ஆபரேஷன், இயக்கத்தையே அழித்துவிடும் என தகவல் மேல் தகவலாக வன்னிக்கு அனுப்பினர். ஆனால் பிரபாகரன், விசுவாசியான காஸ்ட்ரோவை மாற்ற விரும்பவில்லை.
‘நொந்து போன’ ஓரிருவர், இது பற்றி நேரில் சொல்லிவிட்டு வரலாம் என வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கும் சென்றனர்.
அவர்கள் நந்தவனத்தில் (காஸ்ட்ரோ துறையின் அலுவலகத்தின் பெயர்) வைத்து ‘திருச்சாத்து’ வாங்கிக் கொண்டு, உயிரைக் கெட்டியாக பிடித்தபடி தப்பித்தோம், பிழைத்தோம் என்று அடுத்த பிளேனைப் பிடித்து பறந்து விட்டனர்.
இப்படியான நிலையில்தான், இறுதி யுத்தம் தொடங்கியது. விடுதலைப் புலிகள் இயக்கம் பின்வாங்கி, பின்வாங்கி, முல்லைத்தீவுக்குள் வந்து விட்டது.
யுத்த நிலைமைதான் இப்படியென்றால், வெளிநாடுகளில் நிலைமை அதைவிட மோசம்.
வெளிநாடுகளில் தமிழ் மக்களின் எழுச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால், அதை சரியான முறையில் பயன்படுத்த காஸ்ட்ரோவால் நியமிக்கப்பட்ட ஆட்களுக்கு தெரியவில்லை. வெளிநாட்டு அரசுகளுடனோ, உளவுத்துறைகளுடனோ, இவர்களுக்கு சரியான தொடர்பு ஏதுமில்லை. செல்வாக்கும் இல்லை.
என்ன காரணம்?
யுத்தம் தொடங்குவதற்கு முன்னரே, வெளிநாட்டு பொறுப்பாளர்களுக்கு ஒரு உரை நிகழ்த்தி அதன் சி.டி.-யை அனுப்பி வைத்திருந்தார் காஸ்ட்ரோ. அதிலுள்ள ஒரு பிரபல வாக்கியம் என்ன தெரியுமா?
“படித்தவனை நம்பாதீர்கள். உங்களுடன் சேர்த்துக் கொள்ளாதீர்கள். படித்தவன் கவிழ்த்து விடுவான்”
இதனால், வெளிநாடுகளில் காஸ்ட்ரோவின் ஆட்கள், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கூட்டத்துக்குள் பாயும் வீரர்களாக இருந்தார்களே தவிர, டிப்ளமேட்டிக் சர்க்கிள்களில் வலம்வரும் ஆட்களாக இல்லை.
கனடாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப் போகிறார்கள் என இரண்டு நாட்களுக்கு முன்னரே தெரிந்திருந்தது. ஆனால், அதை தடுத்து லாபி செய்யும் அளவுக்கு இவர்களுக்கு செல்வாக்கு கிடையாது. மற்ற நாடுகளிலும் அதுதான், நிலைமை.
இதற்கு சில உதாரணங்கள் சொல்லலாம். அதை அடுத்த பாகத்தில் தொடரலாம். (தொடரும்)
பிரபாகரன் இப்போது எங்கே? 2009-க்கு பின் வெளிநாட்டு புலிகளின் ‘திடுக்’ வேலைகள் இங்கே-( பாகம்-1)