அதற்குமுன், வன்னியில் பெரிய பகுதியை புலிகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்து, முல்லைத்தீவு கடல்பகுதி முழுவதையும் கடல்புலிகளின் கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதே, இவர்களது ஆயுதக் கப்பல்கள் அங்கு போய் சேர்ந்ததில்லை. இலங்கை கடல் பகுதிக்கு அருகே வருவதற்கு முன்னரே புலிகளின் பல ஆயுதக் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன.
நிலைமை அப்படியிருக்க, சின்னஞ்சிறு முள்ளிவாய்க்கால் பகுதியில் முடங்கியிருந்த புலிகளுக்கு கப்பலில் ஆயுதங்களை அனுப்பும் அளவுக்கு இவர்களென்ன மாயாவிகளா என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை.
அதற்கு காரணம், வெளிநாடுகளில் இயங்கிய பெரும்பாலான தமிழ் மீடியாக்கள், நெடியவனின் கட்டுப்பாட்டிலேயே இயங்கின.
புலிகளின் ஒவ்வொரு கப்பல் அடிபட்ட செய்தி வந்தபோதும் ‘தேசிய மீடியாக்கள்’, “முட்டாள் சிங்களவன் கடலில் போன ஏதோ ஒரு கப்பலை மூழ்கடித்துவிட்டான். நம்ம கப்பல்களை அவர்களால் நெருங்கத்தான் முடியுமா?” என்று கேலியாக செய்தி வெளியிட்டன.
இதனால், “கப்பலில் அவசரமாக ஆயுதம் அனுப்ப பணம் தாருங்கள்” என்ற இறுதிநேர கோரிக்கை ‘கப்சா’ என்பதை, உணர்ச்சிவசப்பட்டு பணம் கொடுத்த பலர் புரிந்து கொள்ளவில்லை.
ஆனால், நெடியவன் தலைமையிலான குழுவுக்கு ஒரு விஷயம் நன்றாகவே தெரிந்திருந்தது. “இன்னமும் விரல்விட்டு எண்ணக்கூடிய நாட்களுக்குள் யுத்தம் முடிந்து விடும். அதன்பின் இயக்கமே இருக்காது. மொத்தமாக பணம் வசூலிப்பது என்றால், அந்த சில நாட்களுக்குள் அதிகபட்ச அளவில் சேர்த்துவிட வேண்டும்”
வெளிநாடுகளில் தமிழ் மக்கள் வீதிகளில் உணர்ச்சிவசப்பட்டு இறங்கியிருக்க, வெளிநாட்டுப் புலிகள் மிக நேர்த்தியான பிசினெஸ் தந்திரத்துடன் தமது இறுதி வசூலில் மும்மரமாக இருந்தார்கள்.
மே மாதம் 14-ம் தேதிக்குப்பின், இவர்களது வியாபாரத்தில் ‘சிறப்பு தள்ளுபடி வசூல்’கூட நடந்தது என்பது பலருக்கு தெரியாது.
அது என்ன ‘சிறப்பு தள்ளுபடி வசூல்’?
ஐரோப்பிய நகரங்கள் சிலவற்றில், புலிகளுக்காக பணம் வசூலித்து கொடுத்தவர்களுக்கு 25% கமிஷன் கொடுத்தது, நெடியவன் குழு!
குறிப்பிட்ட ஏரியாவில் பண வசூலுக்காக செல்பவர்கள், புலிகளின் ‘இறுதி யுத்தத்துக்காக’ 10,000 யூரோ வசூலித்தால், 2,500 யூரோ தொகையை தாம் வைத்துக்கொண்டு, 7,500 யூரோவுக்கு கணக்கு கொடுத்தால் போதும் என்பதே ‘சிறப்பு தள்ளுபடி வசூல்’.
யுத்தம் முடிந்த இறுதி சில நாட்களில் மட்டும் பல மில்லியன் டாலர் அளவுக்கு பணமழை கொட்டியது என்பதை, பின்னாட்களில் நெடியவன் குழுவில் இருந்து விலகி வெளியே வந்தவர்கள் உறுதி செய்தார்கள்.
இறுதிநேர வசூல் இப்படி நடந்துகொண்டிருக்க, வெளிநாட்டுப் புலிகளில் நெடியவன் மட்டும்தான் புத்திசாலியா? ஹா.. வல்லவனுக்கு வல்லவர்களும் அந்த குரூப்பில் இருந்தார்கள்.
அவர்களில் சிலருக்கும் இந்த ‘வியூகம்’ நன்றாக புரிந்திருந்தது. இன்னும் சில நாட்களின் பின் சேகரித்த பணத்துக்கு கணக்கு கேட்க வன்னியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதையும் அவர்கள் கச்சிதமாக புரிந்து கொண்டார்கள்.
இதனால் அவர்களும், இறுதி நேரத்தில் தங்களது சாதுரியத்தை காட்ட தொடங்கினார்கள்.
அவர்கள் நேரடி வசூலில் இறங்கவில்லை. தத்தமது நாடுகளில் ஏற்கனவே வசூலித்த தொகையில் விளையாட முடிவு செய்தார்கள்! (தொடரும்)
-ரிஷி-
கடந்த பாகத்தை படிக்க இங்கே கிளிக் செய்யவும்