தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்தவர்களை தேசப்பற்றாளர்கள் என கூற முடியுமா என ஜனநாயக்க் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்று தேசப்பற்றாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர், அன்று பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்துக் கொடுத்தார்கள்.
இறுதிக் கட்ட போர் நடைபெற்று வந்த வேளையில் 48 மணித்தியால போர் நிறுத்தத்தை அறிவித்தனர்.
இந்த போர் நிறுத்த அறிவிப்பானது பிரபாகரன் தப்பிச் செல்வதற்காகவேயாகும்.
குறிப்பிட்ட காலப்பகுதியில் நாம் நான்கு கிலோ மீற்றர் வரையில் பின்வாங்க நேரிட்டதுடன், 500 படைவீர்ர்களின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.
இந்த போர் நிறுத்த அறிவிப்பிற்கு நாம் எதிர்ப்பை வெளியிட்டோம்.
நாட்டுக்காக இரத்தம், சதை, உயிரை தியாகம் செய்தவர்களை தேசப்பற்றாளர் என்பதா அல்லது கொழும்பில் இருந்து கொண்டு பிரபாகரன் தப்பிச் செல்ல வழியமைத்தவர்களை தேசப்பற்றாளர் என்பதா?
தேசப்பற்றாளர் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் சிலர் சுனாமி நிவாரண நிதியின் பாரியளவு தொகையை கொள்ளையிட்டனர்.
2000 பாடசாலைகள், 2000 விஹாரைகள், 200 ஆடைக் கைத்தொழிற்சாலைகள், 500 கைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
நாட்டு மக்கள் சந்தோசமாக வாழ முடியாவிட்டால் ஆசியாவின் ஆச்சரியத்தில் என்ன பயன்?
பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அரசாங்கம் ஆதரவளிக்கின்றது. ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட முடியும்.
எனினும் எதிர்க்கட்சியில் அங்கம் வகித்தால் குற்றம் செய்யாவிட்டாலும் அவர்கள் குற்றவாளிகளே.
35 ஆண்டுகளாக அரச சேவையில் இணைந்து கொண்டு சேவையாற்றிய முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டது.
தேசப்பற்றாளர் என அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் நாட்டை அழித்துள்ளனர்.
ஹிட்லர், இடியமீன் போன்றவர்கள் இவ்வாறு நாட்டை அழித்துள்ளனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் மட்டுமே மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிக்க நேரிடும். எமது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை.
எந்தவொரு நீதிமன்றிலும் படையிருக்காக குரல் கொடுக்க நான் தயார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
காலியில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.