உலக நாடுகளில் கொரோனா தனது மூன்றாவது அலையைத் தொடங்கியிருக்கிறது. மீண்டும் கொரோனாவில் சிக்கித் தவிக்கும் நாடுகள் எவை… அந்த நாடுகளின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை!
2019 டிசம்பரில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா, இன்றும் உலக நாடுகளை அதன் பிடியிலிருந்து விட்டபாடில்லை. இரண்டாவது அலை, மூன்றாவது அலை என மக்களை படுத்திக்கொண்டிருக்கிறது இந்தக் கொடியநோய்.
தற்போது வரை கொரோனாவால் உலகம் முழுவதும் 12,23,77,026 பேர் (12.23 கோடி) பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உலக அளவில், 27,03,255 பேர் இதுவரை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்திருக்கின்றனர். 9,86,80,436 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்திருக்கின்றனர்.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கொரோனாவால் அதிகம் அவதிப்பட்டுவரும் நாடுகளாக இருக்கின்றன. அதுவும் கடந்த சில நாள்களாக, இந்த நாடுகளில் மூன்றாவது அலையாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது.
இந்தியாவிலும் கடந்த வாரத்திலிருந்து கொரோனா நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று (மார்ச் 18) மட்டும் இந்திய அளவில், 35,871 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று மாதங்களில், நாளொன்றுக்கான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இதுதான் புதிய உச்சம்! இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் இந்த வேளையில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் முக்கிய நாடுகள் சிலவற்றின் நிலைமை என்னவென்று காண்போம்.
பாதிக்கப்பட்டவர்கள் – 3.03 கோடிப் பேர், உயிரிழந்தவர்கள் – 5.52 லட்சம் பேர், குணமடைந்தவர்கள் – 2.25 கோடிப் பேர்.
கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடு அமெரிக்காதான். அங்கு நாளொன்றுக்கு 50,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். நேற்று மட்டும் அமெரிக்காவில் 60,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பதவியேற்றபோதே, `கொரோனாவைக் கட்டுப்படுத்துவதுதான் அரசின் முதல் பணி’ என்பதில் முடிவாக இருந்தார். அமெரிக்காவில் இதுவரை 11 கோடிக்கும் மேலானோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.
இன்னும் அதிக அளவில் மக்களிடம் தடுப்பூசியைக் கொண்டு சேர்ப்பதற்கு முயன்றுவருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்திருக்கிறது. கொரோனா பரவல் குறித்து சமீபத்தில் பேசிய ஜோ பைடன் பின்வருமாறு இருக்கும் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
முதல் உலகப்போர், இரண்டாம் உலகப்போர், வியட்நாம் போர் ஆகிய மூன்று போர்களிலும் ஒட்டுமொத்தமாக உயிரிழந்த அமெரிக்கர்களைவிட, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்!
ஜோ பைடன், அமெரிக்க அதிபர்
மே 1-ம் தேதிக்குள் அமெரிக்காவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதுதான் அமெரிக்க அரசின் திட்டமாக இருக்கிறது. மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது ஆகியவை குறித்தும் அந்நாட்டு அரசு விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் – 1.17 கோடி பேர், உயிரிழந்தவர்கள் – 2.87 லட்சம் பேர், குணமடைந்தவர்கள் – 1.03 கோடி பேர்
கொரோனா அதிகம் பாதித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது பிரேசில். சமீபத்திய நாள்களில், நாளொன்றுக்கு ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையில், அமெரிக்காவைவிட மோசமான நிலையில் இருக்கிறது பிரேசில்.
நேற்று 86,982 பேரும், அதற்கு முந்தைய நாளில் 90,303 பேரும் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். பிரேசிலில் நேற்று மட்டும் 2,724 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்திருக்கின்றனர்.
உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சம் தொட்டதையடுத்து அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் மாற்றப்பட்டிருக்கிறார். மார்சிலோ க்யூரோகா கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரேசிலின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். கொரோனா நோய்த் தொற்று வந்த பிறகு மாற்றப்படும் நான்காவது சுகாதாரத்துறை அமைச்சர் இவர்.
பிரேசிலின் சுகாதாரத்துறை அமைச்சர் மார்சிலோ செய்தியாளர்களிடம் பேசியபோது, “மக்கள் அனைவரும் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும். அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக்கிக்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஊரடங்கு குறித்து அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டபோது, “மிக மோசமான நிலைமை வந்தால் மட்டுமே ஊரடங்கு” என்று கூறினார்.
பிரான்ஸ்
பாதிக்கப்பட்டவர்கள் – 41.81 லட்சம் பேர், உயிரிழந்தவர்கள் – 91,679 பேர், குணமடைந்தவர்கள் – 2.78 லட்சம் பேர்.
பிரான்ஸ் நாட்டில், கடந்த ஆண்டு நவம்பர் மாத மத்தியில் நாளொன்றுக்கு 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். இதையடுத்து போடப்பட்ட ஊரடங்கு காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துவந்தது.
தற்போது திடீரென நாளொன்றுக்கு 30,000 பேருக்கு மேல் கொரோனால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். பிரான்ஸில் நேற்று மட்டும் 34,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பிரான்ஸில் பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிடும்போது குணமடைவோரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.
ஊரடங்கு
தற்போது மூன்றாவது அலையாக பிரான்ஸில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியிருக்கிறது. இதையடுத்து பாரீஸ், நீஸ் உள்ளிட்ட 16 பகுதிகளில், ஒரு மாத காலத்துக்கு ஊரடங்கை அறிவித்திருக்கிறது அந்நாட்டு அரசு.
மற்ற நாடுகள்!
ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கூடுவதும் குறைவதுமாக இருந்துவந்தது. தற்போது அந்த இரண்டு நாடுகளிலுமே மூன்றாவது அலை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனி, இத்தாலி என இரு நாட்டு அரசுகளுமே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கை அறிவித்திருக்கின்றன.
கொரோனா அதிகம் பாதித்த மற்ற நாடுகளான ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் தற்போது குறைந்திருக்கிறது. ரஷ்யாவில், கடந்த ஆண்டு டிசம்பர் மத்தியில் நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை 30,000-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.
தற்போது தினசரி 10,000-த்துக்கும் குறைவானவர்களே கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
அதேபோல இங்கிலாந்தில், டிசம்பர் மாத இறுதியில் தினசரி 60,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 6,000 என்ற அளவிலேயே இருந்துவருகிறது. புதிய வகை கொரோனா தொற்றால் அவதிப்பட்டுவந்த இங்கிலாந்து, தற்போது கொரோனாவை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது.