சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘லிங்கா’வில் நடித்து வரும் இந்தி பிரபலம் சோனாக்ஷி சின்காவின் பேட்டி:
உங்களை லிங்கா படத்தில் நடிக்க எப்படி தேர்ந்தெடுத்தார்கள்?
நான் தென்னிந்திய பெண் போன்று காட்சியளிப்பதாக பலரும் சொல்கிறார்கள். அதற்கு நான் எப்போதும் புடவையை விரும்பி உடுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தி படங்களிலும் எனது புடவை ஸ்டைல் எல்லோரையும் கவர்கிறது. நாம் பழகும் விதமும் மற்றவர்களை நன்றாகவே கவரும். இதுபோல் பல்வேறு காரணங்கள் இருக்கும்.
அரசியல் வாதியான உங்கள் அப்பா சத்ருகன் சின்காவுடன் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வீர்களா?
செல்லமாட்டேன். அப்பாவும் அதை விரும்பமாட்டார். ‘இரவு பகலாக உழைக்கிறாய். அதனால் உன் வேலையை மட்டும்பார்’ என்று சொல்லிவிடுவார். நான் நடிகை. நடிப்பது மட்டுமே எனக்கு பிடிக்கும்.
ஆனால் சில நடிகைகள் அரசியலில் குதித்தபடி இருக்கிறார்களே?
அது அவரவர் விருப்பம். ‘ஒன்றே செய்.. நன்றே செய்..’ இதுதான் என் கொள்கை. ஆனால் அரசியலைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவை. நாட்டில் என்ன நடக்கிறது என்று அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். ‘நடிகைக்கு பொது அறிவும், விழிப்புணர்வும் அவசியம் தேவை’ என்று அப்பா சொல்லுவார். என் அண்ணன்கள் லவ், குஷ் இருவரும் அப்பாவுக்கு துணையாக இருக்கிறார்கள்.
அப்பாவோடு இணைந்து நடிக்க ஆசைப்படுகிறீர்களா?
நான் ஆசைப்பட்டு என்ன பயன்? தயாரிப்பாளர்கள்தானே அதை முடிவு செய்யவேண்டும். நல்ல கதாபாத்திரம் அமைந்தால் நானும், அப்பாவும் இணைந்து நடிப்போம்.
வயதில் மூத்த நடிகர்களுடன் நடிக்கும்போது தயக்கம் ஏற்படுவதுண்டா?
கதாநாயகனின் வயது டைரக்டருக்குதான் தெரியும். கதைப்படி கதாநாயகனுக்கும் என் வயதுதான். இதில் தயங்க என்ன இருக்கிறது. யாரோடு நடித்தாலும் சம்பளம் ஒன்றுதானே.
உங்கள் சகோதரர்கள் என்ன செய்கிறார்கள்?
சகோதரர்கள் குடும்பத்திற்கு அனுசரணையாக செயல்படுகிறார் கள். முதல் சகோதரர் லவ் மூன்று சினிமாக்களை டைரக்டு செய்து கொண்டிருக்கிறார். குஷ் துணை டைரக்டராக பணியாற்றுகிறார். அவர்கள் இருவரும் என் மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள்.
நீங்கள் புடவையை விரும்ப என்ன காரணம்?
நான் புடவை அணிந்தால் இந்தியப் பெண்போல தோற்றமளிக்கிறேன். அந்த தோற்றத்தைதான் என்னிடம் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். கண்ணியமாக தோற்றமளிக்கக் கூடியது புடவை மட்டும்தான்.
நீச்சல் உடையில் என்றைக்காவது தோன்றுவீர்களா?
ஒருபோதும் அப்படி ஒரு காட்சியில் இடம்பெறமாட்டேன். இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்துக் கேட்டாலும் இதே பதிலைதான் சொல்வேன். ஒப்பந்தம் செய்யும்போதே டைரக்டர்களிடம் இதுபற்றி தெளிவாக சொல்லிவிடுவேன்.
ஆனாலும் மார்க்கெட் குறையும்போது பலருக்கு உடையும் குறைந்து விடுகிறதே?
நான் அப்படியில்லை. எனக்கு படமே கிடைக்காவிட்டாலும் அசவுகரியமான காட்சிகளில் ஒருபோதும் நடிக்கமாட்டேன்.
பிரபுதேவா உங்களை நீச்சல் காட்சியில் தோன்ற வைத்துவிட்டாராமே?
ஆமாம். நான் ‘பிக்னி’ உடை அணிய மாட்டேன் என்றதும் அவர் புது யுக்தியை பயன்படுத்தி நீச்சல் காட்சியை உருவாக்கிவிட்டார். புடவையிலேயே நீருக்குள்ளிருந்து வெளியே வரச் சொன்னார். நீச்சல் காட்சியாக இருந்தாலும் நாகரிகமாக எடுக்கப்பட்டது. டைரக்டர் சொல்வதை ஓரளவு கேட்பதில் தப்பில்லை.
தந்தை அரசியலில் இருப்பதால் உங்களுக்கு அதிக மரியாதை கிடைக்கிறதா?
ஆமாம். ஆனாலும் அந்த பின்னணி மரியாதை மட்டும் போதாது. சொந்த உழைப்பும் தேவை. மூன்று ஆண்டுகளில் 9 படங்களில் நடித்துவிட்டேன். இந்த சாதனையை வேறு எந்த நடிகையும் செய்யவில்லை. இது என் அப்பாவுக்கு நான் தேடிக் கொடுத்த மரியாதை.
நீங்கள் பாடவும் செய்திருக்கிறீர்களே?
அதற்கு என் ஆர்வம்தான் காரணம். என் குரல் நன்றாக இருக்கின்றது என்பதால் பாட ஆசைப்பட்டேன். ஹாலிவுட் படமான ‘ரியோ 2’ அனிமேஷன் படத்திற்கு ஜேவேல் என்ற பெண் கதாபாத்திரத்திற்கு குரலும் கொடுத்திருக்கிறேன்.
அனிமேஷன் படத்திற்கு டப்பிங் பேசுவது கடினமா?
ஒரு வேலையும் சுலபமில்லை. முதலில் படத்தைப் பார்க்கவேண்டும். என்னுடைய கதாபாத்திரத்தை புரிந்துகொள்ளவேண்டும். நான் நன்றாக புரிந்துகொண்டு இரண்டு நாட்களில் டப்பிங்கை முடித்துவிட்டேன்.
அனிமேஷன் படங்களைப் பற்றி உங்கள் கருத்து?
வெளிநாடுகளில் தயாரிக்கும் அனிமேஷன் படங்களைப்போல இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. நம்மிடம் எல்லா தொழில்நுட்ப வசதியும் இருக்கிறது. போதுமான நிதிவசதி இல்லாத காரணத்தால் சிறந்த அனிமேஷன் படங்கள் இங்கு தயாரிக்கப்படுவதில்லை.